loader
இந்தியாவை மிரட்டும் பறவைக் காய்ச்சல்!

இந்தியாவை மிரட்டும் பறவைக் காய்ச்சல்!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரசின் பாதிப்புகள் மனிதர்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக உள்ளன.  எனினும், இதன் பாதிப்புகள் குறைந்து வருவது ஆறுதல் அளித்துள்ளது.  இந்நிலையில், புது வருடம் பிறந்த பின்னர் வார தொடக்கத்திலேயே நாட்டின் பல்வேறு பகுதிகளில் பறவை காய்ச்சல் பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதன்படி கடந்த 4-ஆம் தேதி ராஜஸ்தானில் 170 பறவைகள் இறந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  அன்றைய தினம் வரை அங்கு 425 பறவைகள் பறவை காய்ச்சலால் இறந்துள்ளதாக கால்நடை பராமரிப்புத்துறை கூறி உள்ளது.  அவற்றில் அதிகமாக காக்கைகள் இறந்துள்ளதாக தெரியவந்துள்ளது. மாநிலம் முழுவதும் 15 மாவட்டங்களில் பறவைகள் இறப்பு பதிவாகி உள்ளது.

இதேபோன்று, மத்திய பிரதேசத்தின் சில பகுதிகளிலும் காகங்கள் இறந்து வருவதாக தகவல்கள் வெளிவர ஆரம்பித்துள்ளது.  இதேபோல பறவைகள் அதிகமாக வந்து செல்லும் இமாசல பிரதேசத்தில், இடப்பெயர்ச்சி செல்லும் பல பறவை இனங்கள் பறவை காய்ச்சலால் இறந்து வருவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

அங்குள்ள காங்ரா மாவட்டத்தின் பாங் டேம் லேக் சரணாலய பகுதி சுற்றுவட்டாரத்தில் 1,800 பறவைகள் இறந்துள்ளன.

கேரளாவில் கோட்டயத்தில் நீண்டூர் என்ற இடத்தில் ஒரு வாத்து பண்ணையில் நோய் பரவியிருப்பதாக அதிகாரிகள் கண்டறிந்தனர். அங்கு 1,500 வாத்துகள் இறந்துள்ளன. இதேபோல ஆலப்புழா மாவட்டத்தின் குட்டநாடு மண்டலத்தில் உள்ள சில பண்ணைகளிலும் பறவை காய்ச்சல் தாக்கி உள்ளது.

வளர்ப்பு பறவைகளான கோழிகள், வான்கோழிகள், வாத்துகள் உள்ளிட்டவற்றின் கழிவுகள், மூக்கு, வாய், கண் இவற்றின் வழியாக பறவை காய்ச்சலை ஏற்படுத்தும் எச்.5.என்.8. வைரஸ் பரவுவதாக எச்சரிக்கப்பட்டு உள்ளது. இதற்கு முன்பு, கேரளாவில் கடந்த 2016ம் ஆண்டு பறவை காய்ச்சல் பரவியிருந்தது.

கேரளா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் இமாசலபிரதேசம் ஆகிய மாநிலங்களை தொடர்ந்து டெல்லியில் 200க்கும் மேற்பட்ட பறவைகள் இறந்துள்ளன.

டெல்லியில் பல்வேறு பூங்காக்களிலும் காகங்கள் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டு உள்ளன.  இவற்றில் மயூர் விகார் பகுதியில் உள்ள மத்திய பூங்காவில் 200 காகங்கள் இறந்துள்ளன.  அவற்றில் 5 காகங்களின் உடல்கள் அதிகாரிகளால் எடுத்து செல்லப்பட்டன.  அவற்றை ஜலந்தர் நகரில் பரிசோதனைக்காக அனுப்பி வைத்து உள்ளனர்.

இதனை தொடர்ந்து பூங்காவில் தூய்மைப்படுத்தும் பணிகள் நடந்தன.  பார்வையாளர்களுக்கு தடை விதித்து, பூங்கா மூடப்பட்டது.

டெல்லியின் துவாரகா பகுதியில் டி.டி.ஏ. பூங்காவில் 2 காகங்களும், மேற்கு மாவட்டத்தில் ஹஸ்த்சால் கிராமத்தில் 16 காகங்களும் இறந்துள்ளன.  இதனால் பறவை காய்ச்சல் பரவி விட்டனவா? என அறிய அவற்றின் மாதிரிகளை டெல்லி அரசு அதிகாரிகள் எடுத்து சென்றுள்ளனர்.

இதுபற்றி விரைவு பொறுப்பு குழு ஒன்றை அனுப்பு ஆய்வு மேற்கொள்ளும்படி டெல்லி துணை முதல் மந்திரி மணீஷ் சிசோடியா அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்!

0 Comments

leave a reply

Recent News