எடப்பாடி பழனிசாமியின் தூதுவர்கள் சசிகலாவைச் சந்தித்துப் பேசியதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. `ஆளும்கட்சியோடு வர்த்தகரீதியான தொடர்பில் இளவரசியின் குடும்பத்தினர் உள்ளனர். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான காலகட்டம் குறித்து இப்போதே விவாதிக்கத் தொடங்கிவிட்டனர்' என்கின்றனர் சசிகலா உறவுகள்.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் 15 நாள்களுக்கு ஒருமுறை சசிகலாவை சந்தித்துப் பேசி வருகிறார் இளவரசி மகன் விவேக் ஜெயராமன். இந்தச் சந்திப்புகளில், வர்த்தகரீதியான கணக்கு வழக்குகள் தொடர்பாகப் பேசப்படுவது வழக்கம். நேற்று நடந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியின் சமரச முயற்சிகள் தொடர்பாகப் பேசப்பட்டதாகத் தகவல் வெளியானது. குறிப்பாக, `வாரணாசியில் பா.ஜ.க தலைவர்களோடு பன்னீர்செல்வம் நெருக்கம் காட்டிய நிகழ்வும், தேர்தல் முடிவுகளைப் பற்றிய அச்சமும் எடப்பாடி பழனிசாமியை வாட்டி வருவதால், சசிகலாவைத் தங்கள் பக்கம் கொண்டு வரும் வேலைகளைத் தொடங்கியிருக்கிறார்கள்' என்ற ரீதியில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன!
0 Comments