ஜெருசலேம்: வேற்றுக் கிரகவாசிகளின் கூட்டமைப்புடன் அமெரிக்கா ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது என, இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் வெளியிட்டுள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இஸ்ரேல் ராணுவ விண்வெளிப்பிரிவின் முன்னாள் தலைவர் ஹைம் எஷெட் இஸ்ரேலிய பத்திரிகை ஜெருசலேம் போஸ்ட்டுக்கு அளித்த பேட்டியில் அவர் இவ்வாறு பதில் அளித்துள்ளார்.
வேற்றுக்கிரகவாசிகள் இருப்பது உண்மைதான். அவர்களுக்கான ஒரு கூட்டமைப்பு இயங்கி வருகிறது. வேற்றுகிரகவாசிகளுடனான தகவல் தொடர்பு முன்னரே தொடங்கி விட்டது.
பூமியில் சோதனை நடத்துவதற்கான ஒரு ஒப்பந்தத்தை அமெரிக்காவுடன் வேற்றுக்கிரகவாசிகள் மேற்கொண்டுள்ளனர்.
இந்த ஒப்பந்தம் பூமியை வேற்றுக்கிரகவாசிகள் ஆக்கிரமிப்பதற்கான முயற்சி அல்ல. பிரபஞ்ச விதிகளைப் புரிந்து கொள்வதற்கான தேடலில் அவர்கள் மனித குலத்தையும் உதவியாகச் சேர்த்துக் கொள்ள விரும்புகின்றனர்.
வேற்றுக்கிரகவாசிகள் குறித்த தகவலை வெளியிட டிரம்ப் முயற்சித்தார். ஆனால் மக்கள் அதற்குத் தயாராகவில்லை என்று வேற்றுக்கிரகவாசிகள் தடுத்ததால், அந்த முயற்சி கைவிடப்பட்டது.
வேற்றுக்கிரகவாசிகளுடன் இணைந்து செவ்வாய் கிரகத்தில் அமெரிக்கா ஒரு நிலத்தடி தளத்தை அமைத்துள்ளது. ஆதாரங்கள் ஏதுமின்றி நான் சொல்லும் இந்த தகவல்களை இப்போது யாரும் நம்பாமல் இருக்கலாம். ஆனால் விரைவில் மக்கள் உண்மையை அறிவார்கள்.
மனிதகுலம் விண்வெளி மற்றும் விண்கலங்கள் என்ன என்பதை பொதுவாக நாம் புரிந்துகொள்ளும் ஒரு கட்டத்தை அடைவதற்கு அவர்கள் காத்திருக்கிறார்கள் எனக் கூறினார்.
கடந்த 1981 முதல் 2010 வரை இஸ்ரேலின் விண்வெளி பாதுகாப்புத் திட்டத்திற்கு ஹைம் எஷெட் தலைமை தாங்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது!
0 Comments