லண்டன்: கொரோனா பெருந்தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை தயாரிக்கும் ஆய்வுப்பணிகள் பல்வேறு உலக நாடுகளில் நடந்து வருகிறது. சோதனை முயற்சியில் சில நாடுகள் தடுப்பூசியை மனிதர்களின் உடலில் செலுத்தி ஆய்வு நடத்தி வருகின்றன.
இந்த நிலையில் இங்கிலாந்து அரசு முதன் முதலில் கொரோனா தடுப்பூசியின் பயன்பாட்டுக்கு அண்மையில் ஒப்புதல் அளித்தது. அமெரிக்காவின் பைசர் நிறுவனமும், ஜெர்மனியின் பயோஎன்டெக் நிறுவனமும் இணைந்து உருவாக்கியுள்ள கொரோனா தடுப்பூசி 95 சதவிகிதம் செயல் திறன் கொண்டது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தடுப்பூசி விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் என இங்கிலாந்து அரசு அறிவித்திருந்தது. இரண்டு டோஸ்களாக வழங்கப்படவேண்டிய இந்த தடுப்பூசியின் நான்கு கோடி டோஸ்களை இங்கிலாந்து ஏற்கனவே ஆர்டர் செய்துள்ளது.
இங்கிலாந்தில் வடக்கு அயர்லாந்தை சேர்ந்த
மார்கரெட் கீனன் என்ற 90 வயது மதிக்கத்தக்க பெண், முதல் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளார்.
இது குறித்து மார்கரெட் கீனன் கூறுகையில், கொரோனாவுக்கு எதிராக தடுப்பூசி போட்ட முதல் நபராக இருப்பதை நான் மிகவும் பாக்கியமாகக் கருதுகிறேன். ஏனென்றால் புதிய ஆண்டில் எனது குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் நேரத்தை செலவழிக்க நான் செல்ல முடியும். என்னைப் பெரிதும் கவனித்துக்கொண்ட தேசிய சுகாதார ஊழியர்களுக்கு நான் நன்றிசொல்லி முடித்துவிட முடியாது என்று தெரிவித்துள்ளார்!
0 Comments