(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் டிசம்பர்-2
கோயில் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்தி சட்டத்தை மதிக்காமல் இனவாதத்தை தூண்டும் ம.இ.கா போன்ற கட்சிகளை முடக்கவேண்டும் எனக் கூறிய கெடா மாநில மந்திரி பெசார் ஹாஜி முகமாட் சன்னூசிக்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ம.இ.காவின் தேசியத் தலைவர் டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் முடிந்தால் முடக்கிப் பார் என சவால் விடுத்துள்ளார்.
ம.இ.கா கட்சி யாரையும் நம்பி இல்லை.
குறிப்பாக பாஸ் கட்சியை நம்பி இல்லை. இந்திய சமுதாயத்தின் இறையாண்மை விவகாரம் தொடர்பாக, நாங்கள் கேள்வி கேட்காமல் இருக்க முடியாது. நாங்கள் கேட்பதை யாரும் தடுக்கவும் முடியாது என டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் சாடியுள்ளார்.
நாட்டில் உள்ள பல்லின மக்களின் இறை வழிபாடுகளைக் கேள்விக்குறியாக்கும் வகையில் பேசியுள்ள கெடா மந்திரி பெசாருக்குத்தான் சட்டம் தெரியவில்லை. புதிய அரசியல்வாதி அல்லவா எதனையும் புரியாமல், அறியாமல் கண்டதையும் உளறுகிறார்.
ம.இ.கா ஒன்னும் நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த காளான் கட்சி அல்ல. ம.இ.கா கட்சியின் வரலாறு தெரியாத புதிய அரசியல்வாதிகளுக்கு ஒன்றைச் சொல்கிறேன், மலேசியாவில் ம.இ.கா கட்சி தோற்றுவிக்கப்பட்ட வரலாற்றைப் போய் படியுங்கள்.
இதுவரை பாஸ் கட்சியைப் போல் இனவாத பேச்சில் ம.இ.கா ஈடுபட்டது இல்லை. காரணம் ம.இ.காவிற்கு ஒரு பாரம்பரிய அரசியல் உண்டு. அனைவரையும் அரவணைப்போம். ஆனால் உரிமையை விட்டுக் கொடுக்கமாட்டோம்.
ஆகையால், ம.இ.கா-வின் வரலாறு தெரியாத கெடா மந்திரி பெசார், வாய்ச் சவடால் விட வேண்டாம். முடிந்தால், ம.இ.காவை முடக்கிப் பார் என டான் ஸ்ரீ விக்னேஸ்வரன் சவால் விடுத்துள்ளார்!
0 Comments