கோலாலம்பூர், டிசம்பர் 2: இணையதளம் வழியாக நிகழ்த்தப்படும் ஆன்லைன் மோசடிகள், உலகம் முழுக்க பரவி அச்சுறுத்தி வருகிறது. இதனால் பலரும் தங்கள் வாழ்க்கையை இழந்து வருகின்றனர்.
சமூக வலைத்தளங்களில் பொதுமக்களின் பயன்பாடுகளைத் தெரிந்துகொண்டு, அவர்களின் ஆசைக்கு ஏற்ப வலைகளை விரித்து சிக்கவைத்து, எண்ணற்றோரின் வாழ்க்கை நாசமாக்கப்படுகிறது சில இணையதள மோசடி கும்பல்களால்.
அந்த வகையில் நமது நாட்டில் Like &Share இணைய மோசடி தொடர்பாக மொத்தம் 46 போலீஸ் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இந்த இணைய மோசடிகள் மூலம் RM 689,146 இழப்புகள் ஏற்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Like & Share, Isharefans, Zan Zan Le, Test Fight and Queqiabao போன்ற பல்வேறு ஆன்லைன் கும்பல்கள் மூலம் இம்மோசடிகள் நடைபெற்றுள்ளதாக புக்கிட் அமான் வணிக குற்றவியல் விசாரணைத் துறை இயக்குனர் டத்தோ ஜைனுதீன் யாகோப் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்டவர்கள் பேஸ்புக் மூலம் முதலீடுகள் பற்றிய தகவல்களைப் பெறுவார்கள். அவர்கள் ஆர்வம் காட்டியவுடன், வாட்ஸ்அப் வழியாக தொடர்பு கொண்டு URL இணைப்பு வழங்கப்படும்.
இணைப்பைத் திறந்ததும், அவர்கள் தங்கள் தொலைபேசி எண்கள் மற்றும் வங்கி கணக்கு விவரங்களை வழங்க வேண்டும்.மேலும் சம்பந்தப்பட்ட பக்கங்களை லைக் & ஷேர் செய்ய வேண்டும் என்று, இன்று புதன்கிழமை ஓர் அறிக்கை வழி டத்தோ ஜைனுதீன் யாகோப் தெரிவித்துள்ளார்.
சம்பந்தப்பட்ட மோசடி குழுவிடம் இருந்து RM 99 முதல் RM 9,999 க்கு இடையிலான லாபத்தை வாங்க பயனர்கள் ஊக்குவிக்கப்படுவார்கள்.
முதலில், பாதிக்கப்பட்டவர்கள் லாபங்களைப் பெறுவார்கள். ஆனால், பிறகு அவர்கள் எந்த லாபத்தையும் திரும்பப் பெற முடியாது என்பதுதான் இதில் சோகம்.
அப்போதுதான் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்வார்கள். பின்னர் சந்தேக நபர்கள் பகிர்ந்துள்ள இணைப்பு மூடப்படும் என்று அவர் விளக்கியுள்ளார்.
எனவே, இதுபோன்ற ஆன்லைன் முதலீடுகளால் ஏமாற வேண்டாம் என்று ஜைனுதீன் யாகோப் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்!
0 Comments