சியோல்:ஆசிய நாடுகளில் கடந்த அக்டோபர் மாதம் இறுதியில் பறவை காய்ச்சல் ஏற்பட்டது. எச்5என்8 புளூ காய்ச்சலால் பறவைகள் பாதிக்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. கடந்த 2018-ஆம் ஆண்டுக்குப் பின் முதல் பறவை காய்ச்சலாக இது அறியப்பட்டது.
இந்தச் சூழலில் தென்கொரியா நாட்டின் தென்மேற்கே அமைந்த ஜியோன்புக் மாகாணத்தில் உள்ள வாத்து பண்ணை ஒன்றில் இந்த ஆண்டில் முதன்முறையாக எச்5என்8 பறவை காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.
இதனை அந்நாட்டிற்கான உணவு, விவசாயம், வனம் மற்றும் மீன்வள அமைச்சகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதனைத் தொடர்ந்து காய்ச்சல் மற்ற பறவைகளுக்குப் பரவி விடாமல் இருப்பதற்காக, அந்தப் பண்ணையில் இருந்த 19 ஆயிரம் வாத்துகளும் அழிக்கப்பட்டன.
இந்தப் பண்ணையைச் சுற்றி 3 கி.மீ. தொலைவில் 6 கோழிப்பண்ணைகளும் உள்ளன. இதனால் அடுத்த 48 மணிநேரத்திற்கு நாடு முழுவதும் பண்ணை பொருட்களைக் கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பறவை காய்ச்சல் கண்டறியப்பட்ட வாத்துப் பண்ணையைச் சுற்றியுள்ள 3 கி.மீ. தொலைவிற்குள் உள்ள 3.92 லட்சம் கோழிக் குஞ்சுகள் மற்றும் வாத்துகளை அழிக்க அரசு முடிவு செய்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன!
0 Comments