ஆர். பார்த்திபன்
கோலாலம்பூர் நவம்பர் -27
இந்திய வணிகர்கள் தங்களது வியாபாரத்தை அடுத்த நிலைக்குக் கொண்டு செல்வதற்கு, ஹலால் அங்கீகாரத்தின் முக்கியத்துவத்தை அவர்கள் அறிந்துகொள்ளவேண்டும் என, மைக்கி எனப்படும் மலேசிய இந்திய வர்த்தகத் தொழிலியல் சங்கங்களின் சம்மேளனத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
நம் நாட்டில் மட்டும் அல்லாமல், பிறநாடுகளிலும் தொழிலை விரிவுபடுத்த ஹலால் அங்கீகாரம் உதவி புரியும். இதனை இந்திய வணிகர்கள் பெறுவது அவசியமான ஒன்று என அவர் தெரிவித்தார்.
அந்த வகையில், இந்திய வணிகர்களுக்கு இலவச வழிகாட்டுதலோடு, ஹலால் அங்கீகாரம் பெறுவதற்கான ஹைப்பர் எனும் பயிற்சியை, ஹலால் மேம்பாட்டு நிறுவனம் வழங்கவிருக்கிறது.
இதில் இந்திய வணிகர்கள் 200 பேருக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்றும், பங்கேற்கும் வணிகர்கள் ஹலால் அங்கீகாரம் பெறுவதோடு, அடுத்தக்கட்டமாக தொழிலை எப்படி வழிநடத்துவது என்பது குறித்து அவர்களுக்கு வழிகாட்டுதலும் வழங்கப்படவிருப்பதாக டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
ஹலால் மேம்பாட்டு நிறுவனத்தின் உதவித் தலைவர் ஹைனுன் அஸ்மான் மற்றும் ஹைப்பர் பயிற்சியின் நிர்வாகி சுக்கோர் ஆகியோருடன் நடத்திய சந்திப்புக்குப் பிறகு, டத்தோ கோபாலகிருஷ்ணன் இத்தகவலை செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
இவ்விவகாரத்தில், ஹலால் மேம்பாட்டு நிறுவனத்துடன் மைக்கி ஒருங்கிணைந்து செயல்பட்டு, இந்திய வணிகர்கள் ஹலால் அங்கீகாரம் பெறுவதற்குத் துணை புரியும். என்று அவர் கூறினார்.
இதன்மூலம் இந்திய தொழில்முனைவர்களின் தொழில் விருத்தி அடைவதோடு, இந்திய வர்த்தகச் சமுதாயத்தை அடுத்த நிலைக்கு உயர்த்தும் என டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.
இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், இந்திய வணிகர்கள் பயன்படுத்திகொள்ளவேண்டும் என அவர் வலியுறுத்தினார்!
தொடர்புக்கு: 0174745509
0 Comments