(வெற்றி விக்டர்- ஆர் .பார்த்திபன்)
கோவிட்-19 காலகட்டத்தில் இந்திய சிறு வர்த்தகர்கள் பலர் பாதிப்புக்குள்ளான நிலையில், அவர்கள் அதிலிருந்து மீண்டு வருவதற்காக, 2021 ஆம் ஆண்டு பட்ஜெட்டில் இந்திய வர்த்தகர்களுக்கு கடன் உதவியாக 200 மில்லியன் நிதி ஒதுக்கப்படவேண்டும் என மைக்கி கோரிக்கை விடுத்துள்ளது.
மைக்கியின் தேசியத் தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் தலைமையில், 15 பேர் கொண்ட குழு இன்று நிதி அமைச்சர் தெங்கு டத்தோ ஸ்ரீ தெங்கு ஸப்ரோல் அஸிசை சந்தித்து மகஜர் வழங்கினர்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டத்தோ கோபாலகிருஷ்ணன்,
கடந்த காலங்களில் இந்திய தொழில்முனைவர்களின் முன்னேற்றத்திற்காக 50 மில்லியன் நிதி உதவி வழங்கப்பட்டது. அது தற்போது 20 மில்லியனாக ஒதுக்கப்பட்டிருப்பது வருத்தமான விஷயம்தான். இருந்தபோதிலும் அந்த 50 மில்லியன் நிதியை நிலை நிறுத்த நிதி அமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். அவர் நிச்சயம் இதை நிறைவேற்றுவார் என்று நம்புகிறோம் என அவர் தெரிவித்தார்.
மலேசிய இந்திய வர்த்தகர்கள் கடன் பெற உதவுவதற்காகவும், அவர்களுக்கு வழிகாட்டவும் கடந்த காலங்களில் செயலவை என்ற ஒன்று இருந்தது. அந்தச் செயலவை வாயிலாகப் பல இந்தியர்களுக்குக் கடன் உதவி கிடைத்தது. அந்தச் செயலவை மீண்டும் உருவாக்கப்படவேண்டும் என நிதி அமைச்சருடன் கலந்துரையாடியதாகவும், அரசாங்கத்தின் திட்டம் மற்றும் வாய்ப்புகளை வர்த்தகர்களின் பார்வைக்கு கொண்டு சென்று, அதனைப் பயன்படுத்திக்கொள்ள இச்செயலவை அவர்களுக்கு வழிகாட்டியாக அமையும் எனவும் டத்தோ கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்!
0 Comments