அகில இந்திய தளபதி விஜய் மக்கள் இயக்கம் என்ற பெயரில் அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் பொதுச் செயலாளர் என்ற இடத்தில் விஜய் தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரின் பெயரும், பொருளாளர் என்ற இடத்தில் தாயார் ஷோபா பெயரும் இடம்பெற்றிருந்தது.
இதனால் விஜய் அரசியல் கட்சி ஆரம்பித்துவிட்டதாகத் தகவல் பரவ, அக்கட்சிக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமுமில்லை என மறுத்த விஜய், தனது பெயர், புகைப்படம் உள்ளிட்டவற்றை பயன்படுத்தினால் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார். இதுதொடர்பாக எஸ்.ஏ.சந்திரசேகரும் விளக்கம் அளித்திருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு நேற்று (நவம்பர் 6) பேட்டியளித்த விஜய்யின் தாயார் ஷோபா சந்திரசேகர், “என்னிடம் ஒரு மாதத்திற்கு முன்பு அசோசியேஷன் ஒன்று ஆரம்பிக்கவுள்ளதால் கையெழுத்து வேண்டும் என்று எஸ்.ஏ.சி கேட்டார். சரி நல்ல விஷயம்தானே என்று நானும் கையெழுத்திட்டேன். ஒரு வாரத்திற்கு முன்பு மீண்டும் கையெழுத்து கேட்டபோது, அது கட்சி ஆரம்பிக்கத்தான் என்பதை புரிந்துகொண்டேன். விஜய்க்குத் தெரியாமல் செய்வதால் அதில் கையெழுத்திடமாட்டேன் எனத் தெரிவித்துவிட்டேன். முதலில் நான் போட்ட கையெழுத்தையும் வாபஸ் வாங்கிக் கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
அரசியல் கட்சி தொடர்பாக மீடியாக்களில் பேச வேண்டாம் என பலமுறை விஜய் சொல்லியும் கேட்காமல் எஸ்.ஏ.சி பேசிக்கொண்டு இருக்கிறார். அதனால் விஜய் இப்போது அவரிடம் பேசுவதில்லை என்று கூறினார் ஷோபா.
விஜய் அரசியலுக்கு வருவது தொடர்பாக அவர்தான் சொல்ல வேண்டும் என்றவர், “கட்சியின் பொருளாளர் பதவியில் இருந்து ஏற்கனவே விலகிவிட்டேன்” என்றும் விளக்கம் அளித்துள்ளார்!
0 Comments