(வெற்றி விக்டர்)
தைபூசத் திருநாள் கொண்டாட்டத்தை தடைசெய்வது அல்லது தவிர்ப்பது தொடர்பான சிலரது கருத்துகள் அர்த்தமற்றது. தைப்பூசத்திற்கு இன்னும் மூன்று மாதம் இருக்கும் பட்சத்தில் இப்போதே... இப்படி வாய்க்கு வந்ததை எல்லாம் சொல்வதை நிறுத்துங்கள் என ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தான தலைவர் டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
நம்மவர்களுக்குக் குறை சொல்வதே ஒரு
வேலையா இருக்கு. புதிய சிலை கருடனா? இல்லை சிட்டுக் குருவியா? சைவமா வைணவமா? இல்லை ஆணவமா? இப்படி எல்லாம் சிலர் எழுதுகிறார்கள். இப்படி எழுதினால்தான் உங்களுக்கு லாபமா? என டான் ஸ்ரீ நடராஜா கேள்வி எழுப்பி உள்ளார்.
அதிலும் சிலர் காட்டிக்கொடுப்பதையே வேலையாக வைத்துள்ளனர். மற்ற சமூகத்தினர் தைப்பூசம் நடத்தக்கூடாது என சொல்வதற்கு, இவர்களே வழி அமைத்துக் கொடுக்கிறார்கள்.
நல்லா காட்டிக் கொடுங்க.... இன்னும் நல்லா காட்டிக்கொடுங்க. ஆனால், அரசாங்கம் உத்தரவு வராத வரை தைப்பூசம் கட்டுப்பாடுகளுடன் நடக்கும். அதை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது.
இந்த ஆண்டு கோவிட் -19 காலக்கட்டத்தில் விதிமுறையுடன் தைப்பூசம் கொண்டாடப்பட்டது. வருகை அளித்த எந்தப் பக்தர்களுக்கும் கோவிட் வரவில்லை. எதை எப்படிச் செய்யணும் என்று எங்களுக்குத் தெரியும்.
தைப்பூசத்தை தவிர்ப்பது தொடர்பாக இந்து சங்கம் கருத்து தெரிவிப்பதை முதலில் நிறுத்துங்கள். ஆலய நிர்வாகத்தில் நீங்கள் தலையீடாதீர்கள். நீங்களே ஒரு செண்டிரியான் பெர்ஹாட் என டான் ஸ்ரீ நடராஜா இந்து சங்கத்தை சாடினார்.
சும்மா கண்டதையும் கூறி மற்றவர்களுக்குக் காட்டிக்கொடுத்து, நீங்களே மண்ணை வாரிப் போட்டுக்கொள்ளாதீர்கள் என டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்.
இதனிடையே, நேற்று ஸ்ரீ மகா மாரியம்மன் தேவஸ்தானம், கல்வி நிதியாக சுமார் 18 மாணவர்களுக்கு 85 ஆயிரம் வெள்ளி நிதி உதவியை வழங்கியது. ஆண்டு தோறும் இந்த உதவியினை தேவஸ்தானம் விளம்பரம் இல்லாமல் செய்கிறது. ஆனால், இப்போது சில பொழுதுபோக்கு நாயகர்கள் சும்மா ஒரு காணொளி செய்து ஆலயம் என்ன செய்கிறது? கோயில் உண்டி பணம் எங்கே? தாய்க் கோயில் உதவாதா? என்றெல்லாம் கேள்வி கேட்கிறார்கள்
அவர்கள் பேசுவது எங்களுக்கு விளம்பரம்தான். அதனால், இப்போது நாங்கள் செய்யும் உதவிகளை விளம்பரப் படுத்துகிறோம். அவர்கள் புதிதாக யோசித்து எங்களை இன்னும் விளம்பரப்படுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன் என டான் ஸ்ரீ நடராஜா தெரிவித்தார்!
0 Comments