செராஸ், செப். 29-
மக்களுக்குச் சேவை செய்யும் கடப்பாடுகளை அனைத்துத் தரப்பினருமே கொண்டிருக்க வேண்டும். குறிப்பாக வர்த்தகர்கள் லாபம் பெறுவதற்காக பல்வேறு வியூகங்களைக் கொண்டிருந்தாலும், அதில் சமூக நலத் திட்டங்களும் உள்ளடங்கி இருக்க வேண்டும் என்று பண்டார் துன் ரசாக் நாடாளுமன்ற உறுப்பினரும் வெளியுறவுத் துணை அமைச்சருமான டத்தோ கமாருடின் ஜபார் தெரிவித்தார்.
செராஸிலுள்ள ஃபிரெஷ் குரோஷர் பேரங்காடியின் ஏற்பாட்டில் நடைபெற்ற மக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அவர் இவ்வாறு கூறினார்.
மெர்டேக்கா மற்றும் மலேசிய தினத்தை முன்னிட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு உதவிப் பொருட்கள் வழங்கப்பட்டன.
ஃபிரெஷ் குரோஷர் பேரங்காடியின் உரிமையாளர் ஸ்ரீ என்பவரின் முயற்சியில் இந்தச் சமூகநல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
இதைத் தொடர்ந்து பொதுமக்களுக்கு பொருட்கள் வாங்குவதற்கு சிறப்புக் கழிவுக்கான வாய்ப்புகளும் வழங்கப்பட்டன.
குறிப்பிட்ட எண்ணிக்கையிலானவர்களுக்கு உணவுப் பொருட்கள் வழங்கப்பட்ட வேளையில், பொருட்கள் வாங்க வந்தவர்களுக்கும் சிறப்புக் கழிவுகள் கொடுக்கப்பட்டன.
இதனால், ஃபிரெஷ் குரோஷர் பேரங்காடியின் நடவடிக்கைகளைப் பொதுமக்கள் பெரிதும் பாராட்டினர்!
0 Comments