சிலாங்கூர் மற்றும் கிள்ளான் பள்ளத்தாக்கில் சுமார் 12 லட்சம் மக்கள் நீரின்றி 4 நாள்களுக்குத் தவிக்கும் சூழலுக்குக் காரணமாக இருந்த ஐவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது. ஐந்து பேருக்கும் தலா 400,000 வெள்ளி பிணை வழங்கப்பட்டுள்ளது.
யிப் கோக் வெய், யிப் கோக் முன், யிப் கோக் குயின், யிப் கோக் வெங், மற்றும் தொழிற்சாலை மேலாளர் ஹோ வூன் லியோங் ஆகியோருக்குப் பிணை வழங்கியதோடு, குற்றம் சாட்டப்பட்டவர்களுக்குத் தலா ஒருவர் உத்தரவாதத்துடன் அவர்களின் கடப்பிதழ்களை ஒப்படைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார். குற்றம் சாட்டப்பட்டவரின் தீவிரத்தன்மை மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்களின் சுகாதார நிலை ஆகியவற்றை கணக்கில் எடுத்துக்கொண்டதாகவும் நீதிபதி கூறினார்.
இது ஒரு தீவிரமான வழக்கு என்றும், பெருமளவு மக்களின் கவனத்தை ஈர்த்த விஷயம் என்பதால் குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் தலா ஒருவர் உத்தரவாதத்துடன் 400,000 ரிங்கிட் பிணையில் விடுவிக்க நீதிமன்றம் அனுமதிப்பதாக அவர் கூறினார்.
செப்டம்பர் 3-ஆம் தேதி சுங்கை கோங்கில் தொழிற்சாலை கழிவு நீரை வெளியேற்றியதால் அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது குற்றம் நிரூபிக்கப்பட்டால், ஐந்து முதல் 30 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அபராதம் அல்லது இரண்டையும் அனுபவிக்க நேரிடும்!
0 Comments