இன்றைய நாடாளுமன்ற கூட்டத் தொடரில் மனிதவள அமைச்சின் துணை அமைச்சர் அவாங் சுலாவுதின், அந்நியத் தொழிலாளர்கள் தொடர்பாக கட்டுமானத்துறை, விவசாயத்துறை மற்றும் தோட்டத்துறைகளுக்கு கோவிட்19 தொற்று நோய் பிரச்சனை தீர்ந்தவுடன் அரசாங்கம் உதவும் என அறிவித்ததை மைக்கி வரவேற்கிறது.
அதேபோல், உணவகத்துறை, முடிதிருத்தும் நிலையம், ஜவுளி, உலோகப்பொருள் மறுசுழற்சி நிலையம், மொத்த மற்றும் சில்லறை வணிகம், நகை வணிகம் மற்றும் பொற்கொல்லர், பத்திரிகை விநியோகப்பாளர்கள் மற்றும் இதர முடக்கப்பட்ட துறைகளுக்கும் அந்நியத் தொழிலாளர்கள் தருவிப்பதில் மனிதவள அமைச்சு முனைப்புக் காட்ட வேண்டும் என மைக்கியின் தலைவர் டத்தோ ந.கோபாலகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.
அந்நியத் தொழிலாளர்கள் பற்றாக்குறையால் இவர்களுடைய வியாபாரம் முழுமையாகப் பாதிப்படைந்துள்ளது. மிகவும் சிரமத்திற்கிடையே இவர்கள் வியாபாரத்தை நடத்தி வருகின்றனர்.
இவ்வனைத்து துறைகளுக்கும் அதிக திறமையான தொழிலாளர்கள் தேவைப்படுவதால், அரசு அந்நியத் தொழிலாளர்கள் விண்ணப்பிக்க முடக்கப்பட்ட துறைகளை, மறுபடியும் விண்ணப்பிக்க ஆவணம் செய்ய வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.
இதன் தொடர்பாக, இப்பிரச்சனைகளை நன்கு அறிந்த மனிதவள அமைச்சர், பிரதமருடனும் உள்துறை அமைச்சருடனும் கலந்து ஆலோசித்து, கூடிய விரைவில் வர்த்தகர்களுக்கு நற்செய்தி கூறவேண்டும் எனக் கேட்டுக் கொண்டார்!
0 Comments