சென்னை: நடிகர் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சென்னை போக்குவரத்து போலீசாரிடம் 100 ரூபாய் அபராதம் கட்டி உள்ளார்.
நடிகர் ரஜினிகாந்தின் இ பாஸ் விவகாரம் பெரிய அளவில் சர்ச்சையாகி உள்ளது. அவர் கடந்த 21-ஆம் தேதி கேளம்பாக்கத்திற்கு தனது சொகுசு காரில் சென்றார். ஆனால் இவர் கடந்த 21-ஆம் தேதி சென்னையில் இருந்து கேளம்பாக்கம் செல்ல இ பாஸ் பெற்றாரா என்று பலரும் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இது தொடர்பாக ஆவணங்களைச் சரி பார்த்து வருகிறோம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து இருந்தது. அதன்பின் ரஜினி கடந்த 23-ஆம் தேதி வாங்கிய இ பாஸ் இணையத்தில் வெளியானது.
தேனாம்பேட்டையில் இருக்கும் ராகவேந்திரா இல்லத்தில் இருந்து கேளம்பாக்கத்தில் இருக்கும் ஆர் கே பார்ம் ஹவுஸ் செல்ல அவர் இ பாஸ் பெற்று இருக்கிறார். இதற்கு மெடிக்கல் எமர்ஜென்சி என்று காரணம் கூறியுள்ளார். அவரின் இந்த இ பாஸ் இணையத்தில் வைரலாகி உள்ளது. இதில் அவரின் கார் எண் தொடங்கி போன் எண் வரை எல்லாம் இருந்ததும், அந்த விவரங்கள் இணையத்தில் வெளியானதும் குறிப்பிடத்தக்கது .
இந்த கார் எண் மூலம், இவரின் காருக்கு சென்னை டிராபிக் போலீஸ் 100 ரூபாய் அபராதம் விதித்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த அபராதத்திற்கான ரசீது நேற்று இணையத்தில் வெளியானது. இந்த ரசீது விவரமும் அவரின் இன்னோவா கார் நம்பர் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதைப் பலரும் நேற்று இணையத்தில் கடுமையாக விமர்சனம் செய்து இருந்தனர்.
இந்த நிலையில் நடிகர் ரஜினிகாந்த் சீட் பெல்ட் அணியாமல் சென்றதற்காக சென்னை போக்குவரத்து போலீசாரிடம் 100 ரூபாய் அபராதம் கட்டி உள்ளார். நேற்று செல்லானில் இருந்த அந்த 100 ரூபாய் அபராதம் இதற்காகத்தான் விதிக்கப்பட்டது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சீட் பெல்ட் அணியாமல் கார் ஓட்டியதால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. தாழம்பூர் காவல்துறையினர் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்!
0 Comments