loader
நம்பிக்கைக் கூட்டணியின் பங்காளி எம்ஏபி!

நம்பிக்கைக் கூட்டணியின் பங்காளி எம்ஏபி!

கோலாலம்பூர், ஜூன் 30:

புத்ராஜெயாவை மீட்டெடுக்கும் எந்த முயற்சியாக இருந்தாலும், அதில் நம்பிக்கைக் கூட்டணியின் அசல் உறுப்பினர்களான மகாதீரின் பெர்சத்து, அமானா, ஜசெக, பிகேஆர், வாரிசான் ஆகிய ஐந்து கட்சிகளும் உள்ளடங்கி இருக்க வேண்டும் என்று அமானா கட்சியின் சலாஹுடின் அயோப், ஜசெக-வின் குலசேகரன் ஆகிய இருவரும் கூட்டாக வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

அதேபோல், புத்ராஜெயாவை மீண்டும் கைப்பற்றும் எந்த முயற்சியாக இருந்தாலும் அல்லது கலந்துரையாடலாக இருந்தாலும் அதில் நம்பிக்கைக் கூட்டணியின் விவேகப் பங்காளியும் செனட்டர் பொன்.வேதமூர்த்தி தலைமையில் இந்திய சமுதாயத்தின் உரிமைக் குரலாக செயல்படும் இயக்கமுமான மலேசிய முன்னேற்றக் கட்சி(எம்ஏபி)யும் இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று எம்ஏபி பொதுச் செயலாளர் பேராசிரியர் சுகுமான் நாராயணன் வலியுறுத்தி உள்ளார்.

15-ஆவது பொதுத் தேர்தலில் இந்தியர்களின் வாக்குகள்தான் துருப்புச் சீட்டாக அமைய உள்ளன. 64 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் இந்த நிலை நிலவுவதால், நம்பிக்கைக் கூட்டணியாக இருந்தாலும் அல்லது வேறு அரசியல் அணியாக இருந்தாலும் இதைப் புறக்கணிக்க இயலாது.

குறிப்பாக 42 தொகுதிகளில் இந்த நிலை அழுத்தமாக இருப்பதால், அந்தந்தத் தொகுதிகளில் மலாய் வாக்குகள் பிரியும் நிலை உருவாகும்போது, அங்கெல்லாம் இந்தியர்களின் வாக்குகள்தான் வெற்றியை உறுதி செய்யும் என்பது நிதர்சனம் என முனைவர் சுகுமான் நாராயணன் தெரிவித்துள்ளார்!

0 Comments

leave a reply

Recent News