(வெற்றி விக்டர்)
கோலாலம்பூர் ஜுன் - 25
மலேசிய அரசியல் சூழல் நிலைத்தன்மையில்லாமல் இருப்பதாலும், பக்காத்தான் கூட்டணியில் யார் அடுத்த பிரதமர் என்ற கேள்வி மேலோங்கி இருப்பதாலும், எந்த நேரத்திலும் ஆட்சி கவிழ்ந்து 15 வது பொதுத் தேர்தல் நடத்தப்படலாம் என எம்.ஏ.பி எனப்படும் மலேசிய முன்னேற்றக் கட்சியின் தேசியத் தலைவர் பொன் வேதமூர்த்தி கருத்துத் தெரிவித்துள்ளார்.
தேசிய முன்னணிக்கு ஓர் இந்திய கட்சியாக ம.இ.கா எப்படி அங்கம் வகிக்கின்றதோ, அதே போல் முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் தலைமையில் அமையவிருக்கும் கூட்டணி கட்சியில் இந்திய கட்சி அங்கம் வகிப்பது அவசியமானது.
இந்தியர்களின் குரலாக எம்.ஏ.பி கட்சி அந்தக் கூட்டணியில் அங்கம் வகிப்பது தொடர்பாக துன் டாக்டர் மகாதீருடன் கலந்தாலோசித்ததாக பொன் வேதமூர்த்தி அஸ்ட்ரோ தமிழ் செய்தியில் கருத்து தெரிவித்துள்ளார்.
பொதுத் தேர்தல் எந்த நேரத்திலும் வரும் சாத்தியம் இருப்பதால், சில தொகுதிகளில் எம். ஏ.பி கட்சி போட்டியிட ஆயுத்தமாகிவிட்டாதாகவும், அது தொடர்பாகவும் துன் டாக்டர் மகாதீரிடம் கலந்தாலோசித்ததாகவும் பொன் வேதமூர்த்தி கூறியுள்ளார்.
துன் டாக்டர் மகாதீர் தலைமைத்துவத்தில் அமைச்சராகப் பதவி வகித்த 2 வருட காலகட்டத்தில், தான் இந்திய சமூதாயத்தின் முன்னேற்றத்திற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டதாகவும், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு தற்போது அனைத்தும் தடைப்பட்டு இருப்பதாகவும் கூறிய பொன் வேதமூர்த்தி, தேர்தல் நடைபெறும் என்றால், துன் டாக்டர் மகாதீர் தலைமையில் அமையும் கூட்டணியின் கீழ் போட்டியிடத் தயார் என்னும் தனது நிலைப்பாட்டைத் தெரிவித்துள்ளார்!
0 Comments