loader
சீண்டிப்பார்த்தால் தக்க பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை!

சீண்டிப்பார்த்தால் தக்க பதிலடி கொடுப்போம்! சீனாவுக்கு இந்தியா எச்சரிக்கை!

புதுடெல்லி: எல்லை பிரச்சினையில் இந்தியாவுடன் சீனா தொடர்ந்து மோதல் போக்கை கடைபிடிக்கிறது.

லடாக் எல்லையில் சீன ராணுவம் கடந்த மாதம் அத்துமீறலில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பதற்றத்தை தணிக்க, இந்திய-சீன ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் பல சுற்றுகளாக பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இதைத்தொடர்ந்து, அங்கு ஓரளவு நிலைமை சீரடைய தொடங்கியது. இரு தரப்பிலும் படைகளை குறைக்கும் நடவடிக்கைகள் தொடங்கின.

இந்த நிலையில் கிழக்கு லடாக்கில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த திங்கட்கிழமை இரவு இரு நாட்டு வீரர்களுக்கும் இடையே திடீரென்று பயங்கர மோதல் ஏற்பட்டது. சீன வீரர்கள் கற்கள் மற்றும் கம்பிகளால் தாக்கினார்கள். பதிலுக்கு இந்திய வீரர்களும் திருப்பி தாக்கினார்கள். நேற்று முன்தினம் காலை வரை இந்த மோதல் நீடித்தது.

இதில் இந்திய தரப்பில் ஒரு ராணுவ அதிகாரி (கர்னல்) உள்பட 20 பேர் வீர மரணம் அடைந்தனர். அவர்களில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர் பழனியும் ஒருவர் ஆவார். சிலர் காயம் அடைந்தனர்.

சீனா தரப்பில் 40-க்கும் மேற்பட்ட வீரர்கள் பலியாகி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஆனால் இதுபற்றி சீனா அதிகாரபூர்வமாக எதுவும் அறிவிக்கவில்லை.

இதனால் லடாக் எல்லையில் பதற்றம் மேலும் அதிகரித்து உள்ளது. சீனாவின் அடாவடித்தனத்துக்கு இந்தியா தனது கண்டனத்தை தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில், கொரோனா பரவலை கட்டுப்படுத்துவது தொடர்பாக பிரதமர் மோடி நேற்று 2-வது நாளாக மாநில முதல்-மந்திரிகளுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

இதில் கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டுள்ள மராட்டியம், தமிழ்நாடு, குஜராத், மேற்கு வங்காளம், பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா, மத்திய பிரதேசம், கர்நாடகம்,ஆந்திரா, தெலுங்கானா, அரியானா ஆகிய மாநிலங்களின் முதல்- மந்திரிகள் மற்றும் டெல்லி, காஷ்மீர் ஆகிய யூனியன் பிரதேசங்களின் துணை நிலை கவர்னர்கள் கலந்து கொண்டனர்.

கூட்டம் தொடங்கியதும், பிரதமரும், முதல்-மந்திரிகளும் எழுந்து நின்று, கிழக்கு லடாக் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் சீன ராணுவத்துடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த ராணுவ வீரர்களுக்கு மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.

அதன்பிறகு இந்த மோதல் விவகாரம் தொடர்பாக, சீனாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் பிரதமர் மோடி பேசினார்.

அவர் பேசுகையில் கூறியதாவது:-

இந்தியா அமைதியை விரும்பும் நாடு. நாம் எப்போதும் அமைதியையே விரும்புகிறோம். அண்டை நாடுகளுடன் நட்புறவுடனும், கூட்டுறவு மனப்பான்மையுடனும் இருப்பதற்காகவே எப்போதும் பாடுபடுகிறோம். அந்த நாடுகளும் வளர்ச்சி அடைய வேண்டும் என்றுதான் விரும்புகிறோம்.

நாம் யாரையும் சீண்டுவது கிடையாது. ஆனால் நம்மை யாராவது சீண்டினால் அவர்களுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும். அதற்கான திறன் நமக்கு உள்ளது. அத்துமீறினால் திருப்பி அடிக்க தயங்கப் போவது இல்லை. இந்தியாவுக்கு கோபமூட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டால் பதிலடி கொடுக்க ஒருபோதும் தயங்கமாட்டோம்.

கருத்து வேறுபாடுகள் சர்ச்சைகளாக மாறி விடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக இருக்கிறோம். அதற்காக எப்போதும் முயற்சி செய்கிறோம். அதேசமயம் நாட்டின் ஒருமைப்பாட்டிலும், இறையாண்மையிலும் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது. இந்தியாவின் துணிச்சலையும், வீரத்தையும் பற்றி உலகத்துக்கே தெரியும். தேவைப்படும் போதெல்லாம் அதை நாம் நிரூபித்துக் காட்டி இருக்கிறோம்.

கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் தாய்நாட்டை பாதுகாக்கும் முயற்சியில் இந்திய வீரர்கள் தீரத்துடன் போரிட்டு உயிர்த்தியாகம் செய்து இருக்கிறார்கள். இந்த சமயத்தில் ஒட்டுமொத்த தேசமும் அவர்களுடைய குடும்பங்களுக்கு ஆதரவாக இருக்கிறது. அவர்களுடைய குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.

நமது ராணுவ வீரர்கள் செய்த உயிர்த்தியாகம் வீண் போகாது என நாட்டு மக்களுக்கு உறுதி அளிக்கிறேன். எந்த சூழ்நிலையானாலும் நாட்டின் ஒவ்வொரு அங்குல நிலத்தையும், சுயமரியாதையையும் பாதுகாப்போம் என்று உறுதி அளிக்கிறேன். இதில் யாருக்கும் எந்த குழப்பமோ, சந்தேகமோ வேண்டாம்.

இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

0 Comments

leave a reply

Recent News