பினாங்கு ஏப் 29.
பாலின்றி பரிதவிக்கும் குழந்தைகளுக்கு பினாங்கு இந்து இயக்கம் உதவி செய்தது.
ஏழ்மையாலும் வறுமையாலும் வாடும் அக்குழந்தைகளுக்கு சமூக ஆர்வலர்களும் அரசு இயக்கங்களும் உதவ வேண்டும் என அந்த அமைப்பு கோரிக்கை விடுத்திருக்கிறது.
சத்தான உணவுகளின்றி நலிந்த தேகத்துடன் காணப்படும் ஏழை அன்னையர்கள் பலர், தங்கள் குழந்தைகளுக்குப் பாலூட்ட இயலாத நிலையில், உகந்தப் பாலை வாங்கிக் கொடுப்பதற்கும் வசதியின்றி அல்லலாடுவது, நெஞ்சை நெகிழச் செய்யும் சோகமென்று,
பினாங்கு இந்து இயக்கத் தலைவர் பி.முருகையா கூறினார்.
கைக் குழந்தைகளுக்கு இந்த அவலமென்றால், சிறார்களுக்கும் கூட ஊட்டச் சத்தான உணவுகளுக்கும் மாவுப் பாலுக்கும்
திண்டாட வேண்டிய அவலம் ஏற்பட்டுள்ளது.
வறுமையின் கோரப் பிடியில் சிக்கியிருக்கும் இத்தகையக் குழந்தைகளுக்கு, இனிப்பு டின் பாலை பெற்றோர்கள் வெந்நீரில்
கலந்து கொடுக்க வேண்டிய நிர்ப்பந்தத்தால், அவர்களுக்கு சுகாதாரக் கேடுகள் விளைவது பரிதாபகரமானது என்றும்
முருகையா விவரித்திருக்கிறார்.
பினாங்குத் தீவுப் பிரதேசம் மட்டுமின்றி பட்டவொர்த்,
புக்கிட் மெர்தாஜாம், சுங்கைப் பட்டாணி, கூலிம், மற்றும் பேராக் மாநிலத்தின் சிலப் பகுதிகளிலும் வசிக்கும் இத்தகைய ஏழ்மைக் குடும்பங்களின் குழந்தைகளை அடையாளம் கண்டு, பினாங்கு இந்து இயக்கம் அவர்களுக்கு மாவுப் பாலுடன் மளிகைப் பொருட்களையும் வழங்கி உதவி வருவதாக அவர் குறிப்பிடுகிறார்.
நல்லுள்ளம் கொண்ட சிலர் பினாங்கு இந்து இயக்கத்திற்கு ஆதரவளித்து வருவதால், தங்களால் இந்த நற்பணியை செய்ய முடிவதாக அவர் கூறியிருக்கிறார்.
இத்தகையக் குழந்தைகளுக்கு மாவுப் பால் வகைகளை இலவசமாக வழங்கும் கருணைத் திட்டத்தை அமல்படுத்துவதற்கு, பெண்கள் முன்னேற்றம், குடும்ப நலம் மற்றும் சமூக மேம்பாட்டுத் துறை அமைச்சு விரைந்து முன் வர வேண்டுமென்று முருகையா
அறைகூவல் கேட்டுக்கொண்டுள்ளார்!
0 Comments