ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.குலசேகரன், சமூக நலத்துறையால் தனது தொகுதியில் உள்ள ஏழை மக்களுக்கு வழங்கப்பட வேண்டிய உணவு நன்கொடைகள், அம்னோ, பாஸ் மற்றும் பெர்சத்து கட்சிகளுக்கு கொடுக்கப்பட்டன என்று குற்றம் சாட்டியுள்ளார்.
பி40 பிரிவில் உள்ள குடும்பங்களுக்கு உண்மையிலேயே சென்றடைந்ததா என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று இன்று ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
ஒவ்வொரு நாடாளுமன்றத் தொகுதியிலும் 1000 வீடுகளுக்கு உணவுக் கூடைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களை சமூக நலத்துறையின் மூலம் பெண்கள், குடும்ப மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சு வழங்கியுள்ளது.
ஆனாலும், எதிர்க்கட்சியால் பிரதிநிதித்துவப்படுத்தப்படும் நாடாளுமன்றத் தொகுதிகளில், விநியோகத்தின் செயல்முறை முறையாக இல்லை.
சில எதிர்க்கட்சி எம்.பி.க்கள், தங்களுக்கு உணவு கூடை கிடைக்கவில்லை என்று கூறியுள்ளனர். சிலர் இது இன்னும் மக்களுக்கு விநியோகிக்கப்படவில்லை என்று கூறியுள்ளனர். எனவே, நிவாரணப் பொருள்களை வழங்குவதில் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்று குலசேகரன் கூறினார்.
மேலும், 1,500 குடும்பங்கள் உணவுப் பொருட்களின் உதவிக்காக தன்னைத் தொடர்பு கொண்டதாகவும், அவரது குழு சுமார் 200 குடும்பங்களுக்கு உதவியதாகவும் அவர் கூறினார்!
0 Comments