கோலாலம்பூர், ஏப்.23:
சுற்றுப் பயணிகள், வர்த்தகர்கள், மலைவாழ் மக்கள்(நரிக் குறவர் கள்) உள்ளிட்ட இந்தியக் குடிமக்கள் ஏறக்குறைய 200 பேர் நடமாட்ட கட்டுப்பாட்டுச் சட்டத்தினால் உணவுக்கும் தங்குவதற்கான இடத்திற்கும் சிரமப்பட்ட நிலை-யில் அவர்களுக்கு மலேசிய முன்னேற்ற கட்சி(எம்ஏபி) சார்பில் உதவிக்கரம் நீட்டப்பட்டது என்று எம்ஏபி சிலாங்கூர் மாநிலத் தலைவர் டாக்டர் அ.குமரன் தெரிவித்தார்.
கோவிட்-19 ஆட்கொல்லி கிருமியால் உலகமே தடுமாறி நிற்கின்ற இந்த வேளையில் தங்களின் விசா காலம் முடிந்த நிலையில், விமான சேவையும் நிறுத்தப்பட்டுள்ளதால் சொந்த நாட்டிற்கு திரும்ப முடியாமல் கைவசம் இருந்த பணமெல்லாம் செலவாகிவிட்ட நிலையில் கோலாலம்பூர் புடு வட்டாரத்திலும் சுல்தான் அஸ்லான் ஷா சாலை(ஜாலான் ஈப்போ)ப் பகுதியிலும் சிரமப்படும் இந்தியக் குடிமக்கள் சுமார் இருநூறு பேர் எம்ஏபி கட்சியை அணுகியதன் பேரில் அவர்களுக்கு உதவிட கட்சி முன் வந்தது.
இதன் தொடர்பில் எம்ஏபி மகளிர் பிரிவைச் சேர்ந்த திருமதி அமர்ஜித், சம்பந்தப்பட்ட இந்திய மக்கள்மீது ஆய்வு மேற்கொண்டதுடன் பாதிக்கப்பட்ட மக்கள் குறித்து பட்டியலும் தயாரித்தார்.
அதன் அடிப்படையில் எம்ஏபி தேசியத் தலைவர் செனட்டர் பொன்.வேதமூர்த்தி இந்தியத் தூதரகத்திற்கு கடிதம் எழுதி, பாதிப்புக்கு ஆளாகி இருக்கும் தங்கள் நாட்டின் குடி மக்களுக்கு வேண்டிய உதவியை செய்யும்படி கேட்டிருந்தார்.
அதன் அடிப்படையில் நடவடிக்கையில் இறங்கிய இந்தியத் தூதரகம், நாளை ஏப்ரல் 24 வெள்ளிக்கிழமை முதல் சம்பந்தப்பட்ட இந்தியர்களுக்கு உணவு, தங்குமிடம் உள்ளிட்ட ஏற்பாட்டை செய்வதாக வாக்குறுதி அளித்த நிலையில், கட்சியின் தேசியத் தலைவர் வேதமூர்த்தி ஆலோசனையின் பேரில் இடைக்கால ஏற்பாடாக எம்ஏபி கட்சி சார்பில் இன்று வியாழக்கிழமை மாலை ஏறக்குறைய 35 பேருக்கு அத்யாவசிய உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டன.
உடல் நலம் பாதிக்கப்பட்ட சிலருக்கு மருத்துவ சேவையும் வழங்கப்பட்டது. இனிப்பு நோய் போன்ற உடல் கோளாறுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய மருந்து, மாத்திரைகள் கிடைக்க ஆவண செய்யப்பட்டது. மிகவும் பாதிக்கப்பட்டிருந்த அந்த மக்கள் இந்த தற்காலிக நிவாரணத்தில் மிகவும் மனம் நெகிழ்ந்தனர்.
இந்த விவகாரத்தில் உடனே நடவடிக்கையில் இறங்கிய மலேசியவுக்கான இந்தியத் தூதர் மிருதுன் குமாருக்கு மலேசிய முன்னேற்றக் கட்சி தேசியத் தலைவர் சார்பில் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம் என்று இதன் தொடர்பில் வெளியிட்ட அறிக்கையில் குமரன் மேலும் தெரிவித்தார்!
0 Comments