(ஆர்.பார்த்திபன்)
கோலாலம்பூர் ஏப்ரல்- 22
நான் பொய் உரைப்பதாகவும், உள்ளே எந்த வாக்குவாதமும் நடக்கவில்லை என்றும், கூட்டம் நடக்கும் இடத்தில் அத்துமீறி நான் உள்ளே நுழைந்து சத்தமிட்டதாகவும் கூட்டரசுப் பிரதேச துணை அமைச்சர் டத்தோ ஸ்ரீ எட்மண்ட் சந்தாரா கூறியுள்ளதை நான் மறுக்கிறேன். நான் அப்படி எதுவும் செய்யவில்லை என, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் தெரிவித்தார்.
ஒரு கூட்டம் என்றால் எப்படி நடக்கும் என்பது எனக்கும் தெரியும். நான் உள்ளே நுழையும் போது அனுமதியுடன்தான் சென்றேன். அப்போது எந்த ஒரு கூட்டமும் நடைபெறவில்லை; தொடங்கவும் இல்லை என பிரபாகரன் கூறினார்.
இது தொடர்பாக அங்கு என்ன நடந்தது? என்பதை எனது தரப்பு விளக்கத்தைக் கூறி ஒரு போலீஸ் புகாரை நேற்று செய்துள்ளேன் என பிரபாகரன் கூறினார்.
இது ஒரு புறம் இருக்க தாமான் ஸ்ரீ மூர்னி பகுதி வாழ் மக்கள், நீர்ப்பெருக்குக்கு இன்னும் உதவிகள் கிடைக்காத நிலையில், இது தொடர்பாக கலந்தாலோசிக்க இன்று சமூகநல இலாகா அழைப்பு விடுத்தாகவும், தாமும் நேரில் சென்று மக்களின் குமுறல்களை எடுத்துரைத்து, உதவிகள் இன்னும் கிடைக்காதது குறித்து விளக்கம் கேட்டதாகவும் பிரபாகரன் தெரிவித்தார்.
இந்தத் தடை உத்தரவு திடீர் என்று அமல்படுத்தப்பட்டதால், முன்னேற்பாடுகளைச் செய்யமுடியவில்லை என சமூகநல இலாகா தம்மிடம் கூறியதாக பிரபாகரன் தெரிவித்தார்.
தற்போது உதவி நடவடிக்கைகள் தூரிதப்படுத்தப்பட்டுள்ளதாகவும், நேற்று தாமான் ஸ்ரீ மூர்னி ஃபசா 3 அடுக்குமாடி மக்களுக்கு உதவி வழங்கப்பட்டதாகவும், இன்று ஃபசா 2 மற்றும் 1 அடுமாடி குடியிருப்பாளருக்கு உதவிகள் வழங்கப்படும் என சமூகநல இலாகா தன்னிடம் வாக்குறுதி வழங்கியதாகவும் பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி.பிரபாகரன் தெரிவித்தார்!
0 Comments