loader

All News

சென்னை, டிச.4-

மிக்ஜம்' புயல் எதிரொலியாக சென்னையில் இரவு முதலே சூறைக்காற்றுடன் கடுமையான கனமழை பெய்து வருகிறது.

இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதோடு  சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். தொடர் அங்கு பெய்யும்  கனமழை மற்றும் பலத்த காற்றால் பொது மக்கள் அச்சத்துடன் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.

இந்த நிலையில், சென்னையில் இன்று இரவு வரை பலத்த காற்றுடன் கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வானிலை மைய தெற்கு மண்டல இயக்குனர் பாலச்சந்திரன் கூறியதாவது:-

மிக்ஜம் புயல் தற்போது சென்னைக்கு கிழக்கு-வடகிழக்குப் பகுதியில் சுமார் 110 கி.மீ. தொலைவில் நிலைகொண்டுள்ளது. கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 10 கி.மீ. வேகத்தில் நகர்ந்துள்ளது. தொடர்ந்து வடக்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று முற்பகல் தீவிர புயலாக வலுப்பெறக்கூடும். அதன்பின் வடதமிழகம்- தெற்கு ஆந்திர கரைக்கு இணையாக நகர்ந்து நாளை முற்பகல் நெல்லூர்- மசூலிப்பட்டினம் இடையே கரையை கடக்கக் கூடும்

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் இன்று இரவு வரை கனமழை, பலத்த காற்று தொடரக்கூடும். எனவே, பொதுமக்கள் பாதுகாப்பாஇருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை, டிச.-4

சென்னையில் இருந்து 130 கிலோமீட்டர் கிழக்கு தென்கிழக்கு திசையில் வங்கக்கடலில் மிக்ஜம் புயல் மையம் கொண்டுள்ளது. மிக்ஜம் புயல் தற்போது மணிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் வேகமெடுத்து நகர்ந்து வருகிறது.

மிக்ஜம் புயல் காரணமாக சென்னையில் நேற்று மாலை முதல் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. அதிகாலை தீவிரமடைந்த கனமழை தற்போதும் நீடித்து வருகிறது.

சென்னை எழும்பூர், மாம்பலம், கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், கிண்டி, வேளச்சேரி, புரசைவாக்கம், வடபழனி, ஆலந்தூர், அசோக்நகர், வடபழனி உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

சென்னை, செப்.8- 
இயக்குநரும், நடிகருமான நடிகர் மாரிமுத்து மாரடைப்பால் இன்று காலமானார். இவரது மறைவு திரைத்துறையில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு வயது 57. டப்பிங் முடித்துவிட்டு வீடு திரும்பிய போது இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு மாரிமுத்துவின் உயிர் பிரிந்தது. மாரிமுத்து மறைவுக்கு சினிமா பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

தொலைக்காட்சி தொடர்களில் கலக்கி வந்த பிரபல நடிகரான மாரிமுத்து இயக்குநர் வசந்த் மற்றும் எஸ்.ஜே.சூர்யாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றினார். பின்னர் இவர் கடந்த 2008-ஆம் ஆண்டு 'கண்ணும் கண்ணும்' 2014-ஆம் ஆண்டு 'புலிவால்' உள்ளிட்ட 2 படங்களை இயக்கினார். இந்த இரண்டு படங்களும் கைக்கொடுக்காததையடுத்து நடிகராக களமிறங்கினார்.

இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில் வெளியான 'யுத்தம் செய்' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர் பரியேறும் பெருமாள், வாலி, உதயா உள்ளிட்ட பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான 'ஜெயிலர்' திரைப்படத்தில் இவரின் கதாபாத்திரம் பாராட்டை பெற்றது.

பெங்களூரு, ஜூன் 6-
கர்நாடக மாநிலம் பெங்களூரு தெற்கு தாலுகா கரிகல் கிராமத்தை சேர்ந்தவர் பவன்குமார்(வயது 26). இவர், பெங்களூரு-மைசூரு இடையிலான எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடியில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.

இதனிடையே, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் பவன்குமார் வழக்கம் போல் சுங்கச்சாவடியில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது, மைசூருவில் இருந்து பெங்களூரு நோக்கி ஒரு கார் வந்தது. அந்த காரில் சில இளைஞர்கள் பயணித்தனர். சுங்கச்சாவடிக்கு கார் வந்தபோது சுங்க கட்டணம் கொடுக்கும்படி கார் டிரைவரிடம் பவன்குமார் கேட்டுள்ளார்.

அப்போது, சுங்க கட்டணம் செலுத்துவது தொடர்பாக பவன்குமாருக்கும் காரில் இருந்தவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றிய நிலையில் பவன்குமார் உள்பட சுங்க ஊழியர்களும், காரில் இருந்த இளைஞர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதில் பவன்குமார் உள்பட பிற ஊழியர்களுக்கு காயம் ஏற்பட்டது. பின்னர், கட்டணத்தை கொடுத்துவிட்டு சுங்கச்சாவடியிலிருந்து காரில் வந்த இளைஞர்கள் புறப்பட்டு சென்றனர். நள்ளிரவு 12.30 மணியளவில் சுங்கச்சாவடி அருகே பவன்குமார் சாப்பிடுவதற்காக சென்றார்.

அந்த சந்தர்ப்பத்தில் பவன்குமாரை பின்தொடர்ந்து இளைஞர்கள் வந்தனர். அவர்கள் திடீரென்று பவன்குமாரை சுற்றி வளைத்து அடித்து, உதைத்து தாக்கினார்கள். அத்துடன் தங்களிடம் இருந்த ஆக்கி மட்டையால் பவன்குமாரை கண்மூடித்தனமாக தாக்கினார்கள். இதில், பலத்த காயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிர் இழந்தார். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் ஆக்கி மட்டையால் அடித்து சுங்க ஊழியர் பவன்குமாரை கொலை செய்துவிட்டு தப்பியோடிய கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்.

சீர்காழியில் திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயாசத்தால் இரு தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்ட சம்பவ வீடியோ வைரலானதால் பரபரப்பு ஏற்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி தெற்கு ரத வீதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற திருமண நிச்சயதார்த்த விழாவில் மணமகன் வீட்டார் – பெண் வீட்டார் இருவரும் மண்டபத்தில் வாசலில் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

இது தொடர்பாக சீர்காழி போலீசார் தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்று இரு தரப்பையும், சமாதானம் செய்து விசாரணை செய்ததில், நிச்சயதார்த்த விழாவிற்கு வந்தவர்கள் உணவு உட்கொண்ட பொழுது பாயாசம் போட்டுள்ளனர்.

அப்பொழுது பாயாசம் சரியில்லாததால் அதனை பெண் வீட்டார் தட்டி கேட்டு, தகாத வார்த்தையால் திட்டியதாக கூறப்படுகிறது. இதனால் மாப்பிள்ளை வீட்டார் தரப்பில் ஆத்திரமடைந்து சாப்பாரை பெண் வீட்டார் மீது ஊற்றியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கைக்கலப்பாகி மோதல் ஏற்பட்டுள்ளது.

 திருமண நிச்சயதார்த்தத்திற்கு வந்தவர்கள் சாப்பாடு சாப்பிடும் போது டேபிள், சேர் தள்ளிவிட்டு ரகளையில் ஈடுபட்டுள்ளனர். மண்டப வாசலில் இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்து கொண்ட வீடியோ சமூக வளைதலத்தில் வேகமாக பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

சண்டிகர், பஞ்சாப் மாநிலம் இந்தியா- பாகிஸ்தான் எல்லை வழியாக போதைப் பொருட்கள் கடத்தப்படும் சம்பவம் நடைபெற்று வருகின்றன. இந்திய எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் இந்த கடத்தலை முறியடித்து வருகிறார்கள். இதனால் போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு எல்லை வழியாக போதைப்பொருட்களை கடத்துவது கடும் சவாலாக உள்ளது. தற்போது டிரோன்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், பஞ்சாப் மாநிலம் அட்டாரி பகுதியில் தற்போது இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது. இந்தியா- பாகிஸ்தான் எல்லை அமைந்துள்ள அட்டாரி பகுதியில் பாகிஸ்தானைச் சேர்ந்த டிரோன் பறந்துள்ளது. அதை இடைமறித்து கீழே இறக்கிய எல்லை பாதுகாப்புப்படையினர், டிரோனை சோதனையிட்டபோது அதில் 3.2 கிலோ அளவிலான ஹெராயின் இருப்பதை கண்டறிந்து அதை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ. 2 கோடி என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பாலசோர், ஜூன்.04-

ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் பெங்களூரு, சென்னை ரெயில்கள் உள்பட 3 ரயில்கள் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளாகின. இந்த கோர விபத்தில் சிக்கி இதுவரை 288 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 900 பேர் படுகாயம் அடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து அந்த பகுதியில் விபத்தில் உருகுலைந்த பெட்டிகள் மற்றும் தண்டவாளங்களை சீரமைக்கும் பணியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். சீரமைப்பு பணியில் 7 பொக்லைன் இயந்திரங்கள், 140 டன் திறன் கனரக கிரேன் உள்ளிட்ட இயந்திரங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

இந்த நிலையில், ஒடிசா ரயில் விபத்து எதிரொலியாக தென்கிழக்கு ரயில்வே பிராந்தியத்தில் பயணிக்கும் 95 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ஹவுரா-புரி எக்ஸ்பிரஸ், பெங்களூரு-ஹவுரா எக்ஸ்பிரஸ், சென்னை-ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 

96 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில் 46 ரயில்கள் வேறு பகுதி வழியாக திருப்பி அனுப்பபடுகிறது. தண்டவாளத்தில் சீரமைப்பு பணிகள் நடப்பதால் ரெயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

குஜராத், ஜூன் 3-

குஜராத்தை சேர்ந்த இந்தியானா ஆப்தால்மிக்ஸ் என்ற நிறுவனம் வழங்கிய கண் சொட்டு மருந்துகளால், 30க்கும் மேற்பட்டோருக்கு கண் தொற்று ஏற்பட்டுள்ளதாக இந்திய அரசிடம், இலங்கை அரசு புகார் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக இந்தியானா ஆப்தால்மிக்ஸ் நிறுவனத்திற்கு, பார்மெக்சில் - வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இந்திய மருந்து ஏற்றுமதியில் சர்வதேச ஏஜென்சிகளின் நம்பிக்கையை பாதிக்க வாய்ப்புள்ளதாக பார்மெக்சில் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதைத்தொடர்ந்து, குஜராத் நிறுவனம் தயாரித்த கண் சொட்டு மருந்துகளின் தரம் குறித்து மத்திய மருந்துகள் தரநிலைக் கட்டுப்பாட்டு அமைப்பு விசாரணையை தொடங்கியுள்ளது.

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, கண் சொட்டு மருந்து தயாரிப்பை நிறுத்துமாறு அந்த நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

புவனேஸ்வர், ஜூன் 3- 

கொல்கத்தாவில் இருந்து சென்னை நோக்கி கோரமண்டல் விரைவு ரயில் வந்துகொண்டிருந்தது. ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டம் பஹானாகா ரயில் நிலையம் அருகே இரவு 7 மணியளவில் ரயில் வந்துகொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கோரமண்டல் விரைவு ரயில் பெட்டிகள் அருகில் இருந்த தண்டவாளத்தில் சரிந்துள்ளது.

அப்போது பெங்களூருவில் இருந்து கொல்கத்தா நோக்கி சென்றுகொண்டிருந்த யஸ்வந்த்பூர் ஹவுரா விரைவு ரயில், தடம் புரண்ட ரயில் பெட்டிகள் மீது மோதி அந்த ரயிலும் விபத்துக்கு உள்ளானது. மேலும், சரக்கு ரயிலும் இந்த விபத்தில் சிக்கியுள்ளது. இந்த விபத்தில் ரயிலில் பயணம் செய்த பல பயணிகள் சிக்கி படுகாயமடைந்துள்ளனர்.

விபத்து நடந்த பகுதியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கட்டுப்பாட்டு அறையில் இருந்து மீட்பு பணிகள் குறித்த நிலவரங்களை ஒடிசா முதல்-மந்திரி நவீன் பட்நாயக் ஆய்வு செய்தார்.

இந்நிலையில், இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து ஒடிசா மாநில தலைமைச் செயலாளர் பிரதீப் ஜெனா வெளியிட்டுள்ள தகவலின்படி, ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 233ஆக உயர்ந்துள்ளது என்றும், 900 பேர் படுகாயமடைந்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கோவை,மே 2

திருமணம் ஆன வெறும் 23 நாட்களில் இளம்பெண்ணை கொன்றுவிட்டு தற்கொலை என்று நாடகம் ஆடிய கணவர், மாமனார், மாமியார் ஆகிய 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.

 பிரேத பரிசோதனை அறிக்கை மற்றும் தொடர் விசாரணை அவர்கள் மூவரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.

 காதலால்  அவசர கல்யாணத்தில் தொடங்கி இப்போது கொலையில் முடிந்துள்ளதாக தகவல் தெரியவந்துள்ளது.

20 வயதான  இளம் ஜோடிகளான இவர்கள் காதலித்து, பெற்றோர் எதிர்ப்பை மீறி திருமணம் செய்துள்ளார்கள்.  

பக்குவமற்ற மனநிலையில் வாழ்க்கையை கடைசியில் அது கொலையில் முடிந்துள்ளது. இந்த சம்பவத்தில் மகனின் கொலையை மறைக்க உதவி செய்த தாய், தந்தை இருவருமே விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டனர்.

கோவை மாவட்டம் மத்துவராயபுரம் குறிஞ்சி நகரைச் சேர்ந்த 20 வயதான சஞ்சய் என்ற இளைஞரும், கோவை செல்வபுரத்தைச் சேர்ந்த 20 வயதான ரமணி என்ற பெண்ணும் காதலித்து கடந்த மே 6-ம் தேதி பெற்றோர்களின் கடும் எதிர்ப்பை மீறி வேளாங்கண்ணி சென்று கல்யாணம் செய்து கொண்டனர். பின்னர், மத்துவராயபுரத்தில் வசித்துவந்தனர்.

இந்நிலையில், கடந்த மாதம் 29-ம் தேதி வீட்டில் மர்மமான முறையில் ரமணி உயிரிழந்தார். தற்கொலை செய்து கொண்டதாக போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது என்பது குறிபிடத்தக்கது.

இந்நிலையில் ரமணியின் உடலில் காயங்கள் இருப்பதாக அவரின் உறவினர் புகார் கொடுத்ததை தொடர்ந்து சந்தேகம் எழுந்தது. பிரேதப் பரிசோதனை அறிக்கையில் கழுத்துப் பகுதி இறுக்கப்பட்டடு மூச்சுத்திணறல் ஏற்பட்டு ரமணி உயிரிழந்தார் என்று  உறுதியானது.

இதையடுத்து, சஞ்சய், அவரது தாய் பக்ருநிஷா, தந்தை லட்சுமணன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

புதுடெல்லி, ஜூன் 1-
 இந்தியாவில் கொரோனா தொற்று பாதிப்பு தினமும் 500-க்குள் அடங்கி வருகிறது. நேற்று முன்தினம் 224 பேருக்கு தொற்று பாதிப்பு ஏற்பட்டது. கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 310 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியானது. இதன்மூலம் தொற்றால் பாதிக்கப்பட்டோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 90 ஆயிரத்து 588 ஆக உயர்ந்துள்ளது.

தொற்றில் இருந்து நேற்று ஒரு நாளில் 588 பேர் குணம் அடைந்தனர். இதுவரை குணம் அடைந்தோர் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 54 ஆயிரத்து 496 ஆகும். தொற்று மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று 281 குறைந்தது. நேற்று காலை 8 மணி நிலவரப்படி கொரோனா மீட்பு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 4,222 ஆக குறைந்துள்ளது.

இதுவரை தொற்றால் இறந்தோர் மொத்த எண்ணிக்கை என்பது 5 லட்சத்து 31 ஆயிரத்து 870 ஆக அதிகரித்து இருக்கிறது.

அமராவதி, மே 29.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து இருந்து இன்று காலை என்விஎஸ்-01 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்படுகிறது ஜிஎஸ்எல்வி எப் 12 ராக்கெட்.

தரைவழி போக்குவரத்து, கடல்வழி போக்குவரத்து, வான்வழி போக்குவரத்து மற்றும் பாதுகாப்பு பயன்பாட்டுக்காக இந்திய மண்டல வழிகாட்டுதல் செயற்கைக்கோள் அமைப்பு (IRNSS) என்ற கட்டமைப்பை உருவாக்க இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முடிவு செய்தது.

அதன்படி, IRNSS 1A, 1B, 1C, 1D, 1E, 1F, 1G என 7 வழிகாட்டுதல் செயற்கைக்கோள்கள் ரூ.1,420 கோடி செலவில் வடிவமைக்கப்பட்டன. இந்த செயற்கைக்கோள்கள் கடந்த 2013 ஆம் ஆண்டு முதல் 2016 ஆம் ஆண்டு வரை வெற்றிகரமாக விண்ணில் நிலைநிறுத்தப்பட்டன. இவ்வாறு நிலை நிறுத்தப்பட்ட சில செயற்கைக்கோள் செயலிழந்தன. அவற்றுக்கு மாற்றாக புதிய செயற்கைக்கோள்களை இஸ்ரோ அனுப்பி வருகிறது.

அந்த வகையில், IRNSS 1G செயற்கைக்கோள் செயலிழந்த நிலையில் அதற்கு மாற்றாக NVS - 01 என்ற செயற்கைக்கோளை இஸ்ரோ வடிவமைத்தது. ஜிஎஸ்எல்வி எஃப் - 1 ராக்கெட் மூலமாக இந்த செயற்கைக்கோள் இன்று காலை விண்ணில் ஏவப்பட இருக்கிறது.

 

2,232 கிலோ எடை கொண்ட NVS - 01 செயற்கைக்கோளின் ஆயுட்காலம் 12 ஆண்டுகள் என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளார்கள். முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்ட அணுக் கடிகாரமும் இந்த செயற்கைக் கோளில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. இது விண்ணில் ஏவப்பட்டு புவியின் சுற்றுவட்டப்பாதையில் 36 ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

ஊட்டி, மே 27-
நீலகிரி மாவட்டம் ஊட்டி அடுத்த எம்.பாலாடா சுற்றுவட்டார பகுதியில் அதிக அளவில் கேரட் விவசாயம் நடக்கிறது. இதனால் இங்கு இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் எம்.பாலாடா பஜார் பகுதியில் உள்ள ஓட்டல்களில் தங்களுக்கு தேவையான உணவை வாங்கி வந்தனர்.

இதில் எம்.பாலாடா அருகில் உள்ள நரிக்குழியாடா பகுதியை சேர்ந்த கிருஷ்ணசாமி என்பவர் நேற்று அந்த பகுதியில் உள்ள மம்மி மெஸ் என்ற ஓட்டலில் 4 பிரியாணி வாங்கியுள்ளார். இதை கிருஷ்ணசாமியும் அவருடன் பணியாற்றியவர்களும் சேர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர். பிரியாணியில் பாதி சாப்பிட்டு முடித்த பின்னர், தியாகராஜன் என்பவரது பிரியாணியின் அடிப்பகுதியில் பூரான் இறந்து கிடந்தது.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிருஷ்ணசாமி, தியாகராஜன் உள்பட 4 பேருக்கும் வாந்தி மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் எம்.பாலாடாவில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டனர் அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து ஓட்டலில் கேட்டபோது ஓட்டல் நிர்வாகத்தினர் முறையாக பதில் தெரிவிக்கவில்லை என்று கூறப்படுகிறது. எனவே இது குறித்து உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவிக்கப்பட்டது.

அந்த ஓட்டலில் இட வசதி இல்லாமல் சுகாதாரமற்ற முறையில் உணவுப் பொருட்கள் தயாரிக்கப்பட்டு வந்தது ஆய்வில் தெரியவந்தது. எனவே சுகாதாரமற்ற முறையில் உணவு பொருள் தயாரித்து விற்பனை செய்த காரணத்திற்காக ரூ.2000 அபராதம் விதிக்கப்பட்டு உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட பிரிவு 55-ன் கீழ் நோட்டீஸ் வழங்கப்பட்டது.

சென்னை, மே 24.
சென்னை நகரில் கஞ்சா ஆயில், கஞ்சா சாக்லெட் வரிசையில் தற்போது கஞ்சா கேக்கும் முதன்முறையாக விற்பனைக்கு வந்துள்ளது. கஞ்சா சாக்லெட்டுக்கு மாணவர்கள் - இளைஞர்கள் மத்தியில் சென்னையில் வரவேற்பு இருந்ததால் கஞ்சா கேக்கையும் தற்போது விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளனர்.

கஞ்சா சாக்லெட்டை சாப்பிட்டால் போதை வரும். அதுபோல கஞ்சா கேக்கை சாப்பிட்டாலும் இளைஞர்களுக்கு போதையுடன் கிளுகிளுப்பையும் உண்டாக்கும். பீகார், ஒடிசா, அசாம், திரிபுரா போன்ற மாநிலங்களில் இதனை தயாரித்து விற்பனைக்கு அனுப்புகிறார்கள்.

கஞ்சா கேக்கை போதை ஆசாமிகள் 'கஞ்சா சாரஸ்' என்று அழைக்கிறார்கள். இதை கூரியர் பார்சல் மூலமாக சென்னைக்கு கடத்தி வருவதாக மாம்பலம் போலீசாருக்கு ரகசியம் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் மாம்பலம் போலீசார் நேற்று முன்தினம் இரவில் ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள ஒரு கடையில் சோதனை போட்டனர்.

அப்போது அங்கிருந்த கூரியர் பார்சல் ஒன்றை கைப்பற்றினார்கள். அதை திறந்து பார்த்தபோது, 200 கிராம் எடையுள்ள கஞ்சா கேக் இருந்தது. இது அதிக விலையுள்ளது என்று கூறப்படுகிறது. இதை போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கூரியர் பார்சலில் இதை கடத்தி வந்ததாக சென்னை கொடுங்கையூரை சேர்ந்த ஏக்நாத் (வயது 39) என்பவர் கைது செய்யப்பட்டார்.மத்திய போதைப்பொருள் தடுப்பு போலீசாரிடம் இதுபற்றி கேட்டபோது, சென்னைக்கு தற்போது தான் முதன்முதலாக விற்பனைக்கு வந்துள்ளது என்றும், வடமாநிலங்களில் இதை சர்வ சாதாராணமாக விற்கிறார்கள் என்றும் தெரிவித்தனர். விருந்து நிகழ்ச்சிகளில் இதை பரிமாறுகிறார்கள் என்றும் தெரிவித்தனர்.

கஞ்சா சாக்லெட், கஞ்சா கேக் போன்ற போதை பொருட்களை தடை செய்து உரிய நடவடிக்கைகள் எடுக்கும்படி ஆந்திரா, பீகார், ஒடிசா, அரியானா, திரிபுரா ஆகிய மாநில டி.ஜி.பி.க்களுக்கு, சென்னை மாநகர போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கடிதம் எழுதியுள்ளார்.

டுப்லின், மே 23-
ராஜமௌலி இயக்கத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான படம் 'ஆர்ஆர்ஆர்'. இப்படம் உலகம் முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் 25-ஆம் தேதி வெளியானது. தெலுங்கு, தமிழ், மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் மொழிகளில் வெளியான இப்படம் நல்ல விமர்சனங்கள் பெற்று 1,000 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

இந்த திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் மற்றும் கோல்டன் குளோப் விருதுகளை வென்று சாதனை படைத்தது. இதனிடையே, ஆர்ஆர்ஆர் திரைப்படத்தில் வில்லனாக ராய் ஸ்டீவ்சன் (வயது 58) நடித்திருந்தார். அயர்லாந்து நாட்டின் லிஸ்பர்ன் நகரில் 1964 ஆம் ஆண்டு பிறந்த ராய் ஸ்டீவ்சன் ஆர்.ஆர்.ஆர். திரைப்படத்தில் மிகவும் கொடூரமான பிரிட்டிஷ் கவர்னர் கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.

இவர் பிரபல ஆங்கில படமான 'தோர்' படத்திலும், பிரபல வெப் தொடரான 'ரோம்' ஆகியவற்றிலும் நடித்து பிரபலமடைந்தார். இந்நிலையில், நடிகர் ராய் ஸ்டீவ்சன் (வயது 58) நேற்று முன் தினம் (ஞாயிற்றுக்கிழமை) திடீரென உயிரிழந்தார். அவரது உயிரிழப்பிற்கான காரணம் குறித்த விவரம் வெளியிடப்படவில்லை. ஆர்ஆர்ஆர் திரைப்பட வில்லன் நடிகர் ஸ்டீவ்சன் உயிரிழந்த சம்பவம் அவரது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, மே 19.
ஆதம்பாக்கத்தில் மகன்கள் கண் எதிரேயே ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். தப்பி ஓடிய 8 பேர் கொண்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் (வயது 40). ரவுடியான இவர் மீது கொலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர், தனது வீட்டின் அருகில் வசித்த உறவினர் மாரிமுத்து என்பவரின் 16-வது நாள் காரிய துக்க நிகழ்ச்சியில் நேற்று முன்தினம் இரவு பங்கேற்றார்.

பின்னர் வீட்டின் வெளியே நாற்காலியில் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்தார். அப்போது 2 மோட்டார் சைக்கிள்களில் வந்த 8 பேர் கொண்ட மர்ம கும்பல் சீனிவாசனை, கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டினர். இதில் தலையில் பலத்த காயமடைந்த சீனிவாசன் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்தார்.

முன்னதாக மர்மநபர்கள் தங்கள் தந்தையை வெட்டுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த சீனிவாசனின் மூத்த மகன் நாகராஜ் (17), இளைய மகன் பிரதாப் (வயது 15) ஆகிய இருவரும் மர்ம கும்பலை தடுக்க முயன்றனர். அப்போது மர்ம கும்பல் கத்தியால் தாக்கியதில் பிரதாப் வலது கையில் வெட்டு விழுந்தது. மகன்கள் கண் எதிரேயே சீனிவாசனை வெட்டிக்கொன்றுவிட்டு மர்மகும்பல் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டது.

காயம் அடைந்த பிரதாப், ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதுபற்றி தகவல் அறிந்து வந்த ஆதம்பாக்கம் போலீசார், கொலையான சீனிவாசனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

கடந்த 2014-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கிலும், 2021-ம் ஆண்டு ஆதம்பாக்கம் பகுதியில் பிரபல ரவுடியான நாகூர் மீரான் கொலை வழக்கிலும் சீனிவாசன் சிறைக்கு சென்று வந்தவர் என கூறப்படுகிறது. இந்த இரு கொலைகளுக்கும் பழி தீர்க்கும் விதமாக சீனிவாசனை மர்ம கும்பல் கொலை செய்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.சீனிவாசனை கொலை செய்துவிட்டு தப்பிச் சென்ற மர்ம கும்பலை பிடிக்க மடிப்பாக்கம் போலீஸ் உதவி கமிஷனர் பிராங் டி ரூபன் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. கொலை சம்பவம் காரணமாக ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரில் முன்னெச்சரிக்கையாக பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் இந்த கொலை வழக்கு தொடர்பாக 10 பேரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக ஆதம்பாக்கம் சட்டம்-ஒழுங்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் வீரமணி, பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். ரவுடிகளை கட்டுப்படுத்த தவறியதாக அவர் மீது இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டதாக போலீஸ் கமிஷனர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.

டெல்லி, மே 18.
தமிழகத்தின் பண்பாட்டு அடையாளமான ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கான சட்டத்துக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்டவை தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு அளிக்க உள்ளது.

தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டதற்கு எதிராக 2017-ம் ஆண்டு உலகை திரும்பிப் பார்க்க வைத்த தமிழர் புரட்சி நிகழ்ந்தது. இதனையடுத்து ஜல்லிக்கட்டுப் நிகழ்வுகள் சட்டப்படி அங்கீகரிக்கப்பட்டு நடத்தப்பட்டு வருகின்றன. ஆனாலும் பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் ஜல்லிக்கட்டு போட்டியை தடை செய்ய தொடர்ந்து முயற்சிக்கின்றன.

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்வுகளுக்கு காரணமான சட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்பது பீட்டா உள்ளிட்ட பல அமைப்புகள், சமூக ஆர்வலர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு. உச்சநீதிமன்ற நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன பெஞ்ச் இந்த வழக்கை விசாரித்து வந்தது. இந்த வழக்கில் தமிழக அரசுடன் அதிமுக தரப்பில் விஜயபாஸ்கர், ஓ.பன்னீர்செல்வம், ரவீந்தரநாத் உள்ளிட்டோரும் இணைந்து கொண்டனர்.

உச்சநீதிமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றன. ஜல்லிக்கட்டுக்கு தடை கோரி பீட்டா உள்ளிட்ட அமைப்பினர் முன்வைத்த பல வாதங்களை நீதிபதிகள் நிராகரித்தனர். உச்சநீதிமன்றத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இறுதி வாதங்கள் நடைபெற்றன. அப்போது பீட்டாவின் ஷியாம் திவான் வாதிடுகையில், ஜல்லிக்கட்டு என்பது மிக கொடூரமானது; நாங்கள் 5 ஆண்டுகளாக ஆய்வு செய்து சேகரித்த தரவுகளைத்தான் தாக்கல் செய்திருக்கிறோம். எந்த ஒரு காளையும் ஜல்லிக்கட்டில் ஓட விரும்புவது இல்லை. ஜல்லிக்கட்டில் காளைகள் கட்டாயமாக ஓட விடப்படுகின்றன என்றார்.

இதற்கு நீதிபதிகள், ஜல்லிக்கட்டு எப்படி கொடூரமான விளையாட்டு என்கிறீர்கள்? ஜல்லிக்கட்டில் ஆயுதங்கள் எதுவும் பயன்படுத்தப்படவில்லையே.. ஸ்பெயின் எருது சண்டையில் ஆயுதங்களுடன் மோதுகின்றனர். ஆனால் ஜல்லிக்கட்டில் கைகளால்தானே காளைகளை மனிதர்கள் அடக்குகின்றனர்.. இது எப்படி கொடூரமாகும்? என எதிர் கேள்வி கேட்டனர். ஒரு விளையாட்டில் உயிர் பலி ஏற்பட்டுவிட்டாலே தடை செய்துவிடலாம் என்பது ஏற்புடையது அல்ல. அது கொடூரமானதும் அல்ல. ஜல்லிக்கட்டில் காளையை யாரும் கொல்லவும் இல்லை. ஜல்லிக்கட்டில் ரத்த காயம், உயிரிழப்பு என்பது எதிர்பாராமல் நிகழ்கின்றன நிகழ்வு. மலையேறுவது கூட ஆபத்தானதுதான்.. அதற்காக மலையேறுவதை கூட தடை செய்துவிட முடியுமா? என்றும் பீட்டா தரப்பை நோக்கி கேள்வி எழுப்பினர் நீதிபதிகள்.

பின்னர் அனைத்து தரப்பு வாதங்களையும் எழுத்துப்பூர்வமாக தாக்கல் செய்ய உத்தரவிட்டு தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். இவ்வழக்கில் வியாழக்கிழமையன்று (மே 18) உச்சநீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.

விழுப்புரம், மே 16-

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 19 ஆக உயர்ந்துள்ளது. இதில் விழுப்புரத்தில் மட்டும் 14 பேர் உயிரிழந்தனர்.

தமிழகத்தின் விழுப்புரம் மாவட்டம், மரக்காணத்திலும், செங்கல்பட்டு மாவட்டத்திலும் கடந்த இரு நாட்களுக்கு முன்னதாக கள்ளச்சாராயம் குடித்த 50க்கும் மேற்பட்டோர் அடுத்தடுத்து வாந்தி, மயக்கத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் நேற்று (மே 15) வரை விழுப்புரத்தில் 13 பேரும், செங்கல்பட்டில் 5 பேரும் உயிரிழந்திருந்தனர். மற்றவர்கள் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில்  இருந்து வந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களை முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று ஆய்வு செய்த நிலையில், விழுப்புரம் எஸ்.பி., ஸ்ரீநாதா, மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு டி.எஸ்.பி.,க்கள் உட்பட பல போலீஸ் அதிகாரிகள், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டுள்ளனர். வழக்கு சி.பி.சி.ஐ.,க்கு மாற்றப்பட்டுள்ளது. செங்கல்பட்டு எஸ்.பி., பிரதீப் பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.

இந்த நிலையில், சிகிச்சையில் இருந்து வந்த மரக்காணம் அடுத்த காவடி கிராமத்தை சேர்ந்த சரவணன் என்பவர் இன்று காலை உயிரிழந்ததால், மொத்த பலி எண்ணிக்கை 19 ஆக உயர்ந்தது. உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு தலா 10 லட்சம் நிவாரணம் வழங்குவதாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

சென்னை, மே 15-
முன்னாள் முதல் அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு உள்ளது.

கருணாநிதி நினைவிடத்தின் பின் பகுதியில் பெரிய கேட் அமைத்து கண்ணாடி பாலம் வழியாக மக்கள் கடல் மேல் நடந்து சென்று இந்த நினைவு சின்னத்தை அடையும் வகையில் கட்டி முடிக்க திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. மெரினா கடலில் பேனா நினைவுச் சின்னம் அமைக்க 15 நிபந்தனைகளுடன் மத்திய அரசு ஒப்புதல் கடந்த மாதம் ஒப்புதல் வழங்கியது. மத்திய அரசின் ஒப்புதல் கிடைத்ததைத் தொடர்ந்து, அடுத்தகட்ட நடவடிக்கையில் தமிழக அரசு ஈடுபட்டுள்ளது.

இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் அமைக்க எதிர்ப்ப்பு தெரிவித்து கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்துள்ளார். அதேபோல், சுப்ரீம் கோர்ட்டில் அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் மனு தாக்கல் செய்துள்ளார். பேனா நினைவு சின்னத்திற்கு எதிராக ஏற்கனவே மீனவர்கள் சங்கம் சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், ஜெயக்குமார் தரப்பிலும் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

மரக்காணம், மே 14-
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே உள்ள எக்கியார் குப்பத்தில் கள்ளச்சாராயம் பலர் கள்ளச்சாராயம் அருந்தியதாக கூறப்படுகிறது. இதில் 16 பேருக்கு வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. 

இதையடுத்து 16 பேரும் முண்டியபாக்கம், மரக்காணம், புதுச்சேரி ஜிப்மர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், கள்ளச்சாராயம் குடித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர். ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த சுரேஷ், சங்கர், தரணிவேல் ஆகிய மூன்று பேர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இன்று உயிரிழந்துள்ளனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளார் ஸ்ரீநாதா தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் எக்கியார் குப்பம் கிராமத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளச்சாராயம் குடித்து 3 பேர் உயிரிழந்த நிலையில் கள்ளச்சாராய வியாபாரி அமரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். கள்ளச்சாராயம் அருந்தி 3 பேர் உயிரிழந்த சம்பவம் மரக்காணத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி, மே 13-

போதைப்பொருள் தடுப்பு படை அதிகாரிகள் அதிரடியாக சொகுசு கப்பலில் மேற்கொண்ட சோதனையில் போதைப்பொருள் பயன்படுத்தி பிரபல இந்தி நடிகர் ஷாருக்கான் மகன் ஆர்யன்கான் (வயது 25) உள்ளிட்டோர் பிடிபட்டதாக தகவல்கள் வெளிவந்தன.

இது தொடர்பான வழக்கு விசாரணையின் முடிவில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அந்த குற்றப்பத்திரிகையில் ஆர்யன்கான் குற்றமற்றவர் என கூறப்பட்டுள்ளது.

இவ்வழக்கில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர்வான்கடே தலைமையில் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையினர் நடத்திய விசாரணையில் பல குறைபாடுகளை, போதைப்பொருள் தடுப்பு படையின் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி) கண்டுபிடித்தது.

மேலும், ஆர்யன்கானை வழக்கில் இருந்து தப்பிவிக்க சமீர் வான்கடேயும், அவரது சக அதிகாரிகளும் ரூ.25 கோடி லஞ்சம் கேட்டதாகவும் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணையில் தெரியவந்தது. 

இதில் அவர்களுக்கு ரூ.50 லட்சம் முன்பணமாக கொடுக்கப்பட்டதாக சி.பி.ஐ.க்கு தகவல் போனது. இதன் பேரில் ஐ.ஆர்.எஸ். அதிகாரி சமீர் வான்கடே உள்ளிட்ட 5 பேர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்தது. மேலும், மும்பை, டெல்லி, ராஞ்சி, கான்பூர் என 29 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் அதிரடி சோதனைகளை நடத்தினர். 

இந்த சோதனையில் என்ன பிடிபட்டது என்பது தெரியவரவில்லை. சமீர் வான்கடே, கடந்த ஆண்டு மே மாதம் மும்பை போதைப்பொருள் தடுப்பு படையில் இருந்து சென்னையில் வரி செலுத்துவோர் சேவைகள் பிரிவின் தலைமை இயக்குனராக மாற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

சென்னை, மே.12-வ

வங்கக்கடலில் உருவாகியுள்ள மோக்கா புயல், தமிழகத்துக்கு பாதிப்பு ஏற்டுத்துமா என்பது குறித்து வானிலை மையம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது.அத்துடன் எங்கெல்லாம் மழை பெய்யக்கூடும் என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று காலை புயலாக வலுவடைந்தது.மோக்கா என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் புயலானது நேற்று மாலை 5.30 மணியளவில் தீவிர புயலாக வலுவடைந்தது.

பின்னர் வங்கதேசம், மியான்மர் அருகே போர்ட் பிளேருக்கு 520 கி.மீ தொலைவில் நிலை கொண்டது.. இதுகுறித்து நேற்றைய தினம் முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியிருந்தது.

இந்நிலையில், தமிழக அரசும் இப்போது அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளது.இது தொடர்பாக எடுக்கப்பட்டுள்ள, முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, அமைச்சர் ராமச்சந்திரன் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில், "மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள,சிறப்பு எச்சரிக்கையின்படி வேண்டிய நடவடிக்கைகள் குறித்து, மீன்வளத் துறை கமிஷனருக்கும், கடலோர மாவட்ட கலெக்டர்கள் மற்றும் சென்னை மாநகராட்சி கமிஷனருக்கும், விளக்கமான அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

மீனவர்கள், படகுகள், விசைப்படகுகள், பயணியர், வங்காள விரிகுடா மற்றும் தெற்கு அந்தமான் கடலுக்குள், மே 14ம் தேதி வரை செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே கடலுக்குள் சென்ற மீன்பிடி படகுகள், விரைவாக கரைக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம், மே 5-

கேரள மாநிலம் கோட்டயத்தை அடுத்த கடுத்துருத்தி பகுதியை சேர்ந்த பெண்ணுக்கு 22 வயது ஆகிறது. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த அருண் வித்யாதர் (வயது 32) என்பவருக்கும் காதல் ஏற்பட்டது. அப்போது இருவரும் சேர்ந்து பல இடங்களுக்கு சென்று காதல் வானில் சிறகடித்து பறந்தனர்.

உற்சாகமிகுதியில் இருவரும் நெருக்கமாகவும் இருந்துள்ளனர். அந்த காட்சியை புகைப்படமாகவும் எடுத்துள்ளனர். பின்னர் அருண் வித்யாதரின் நடவடிக்கை சரியில்லாததால் அவருடனான காதலை அந்த பெண் முறித்து கொண்டார்.

இது அருண் வித்யாதருக்கு கடும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. இதனால் காதலியை பழிவாங்க திட்டமிட்டார். இந்தநிலையில் காதலித்த போது அந்த பெண்ணுடன் நெருக்கமாக இருந்த படங்களை அவர் சமூகவலைதளத்தில் வெளியிட்டார். இதனை பார்த்த அவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானார்.

மேலும், கடந்த 2ஆம் தேதி அவர் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக பெண்ணின் பெற்றோர் கடுத்துருத்தி போலீஸ் நிலையத்தில் அருண் வித்யாதருக்கு எதிராக புகார் மனு அளித்தனர். அதில், தங்களது மகளின் தற்கொலைக்கு அருண் வித்யாதர் தான் காரணம் என தெரிவித்தனர். அதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை தேடிவந்தனர். இதனை அறிந்த அருண் வித்யாதர் தலைமறைவானார். இந்தநிலையில் நேற்று போலீசாருக்கு பயந்து காசர்கோடு காஞ்சங்காட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

 இதுபற்றி தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

புது டெல்லி ஏப்ரல் - 7

தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சிலின் NCERT  12ஆம் வகுப்பு பாடப்புத்தகங்களில் இருந்து காந்தி, ஹிந்து-இஸ்லாம் ஒற்றுமை, ஆர்எஸ்எஸ் மீதான தடை, முகலாயளர்கள் குறித்த பாடப்பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

புதிய கல்வியாண்டுக்கான 12ஆம் வகுப்பு அரசியல் அறிவியல் பாடப் புத்தகத்திலிருந்து "காந்தியின் மரணம் நாட்டில் நிலவிய வகுப்புவாத சூழலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது', "ஹிந்து-இஸ்லாம் ஒற்றுமைக்கான காந்தியின் முயற்சிகள் ஹிந்து தீவிரவாதிகளைத் தூண்டிவிட்டன', "ஆர்எஸ்எஸ் உள்ளிட்ட அமைப்புகள் சில காலங்களுக்குத் தடைசெய்யப்பட்டன' உள்ளிட்ட பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.

2002இல் நடைபெற்ற குஜராத் கலவரம் குறித்த பகுதியும் 11-ஆம் வகுப்பு சமூகவியல் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளது.

முகலாயர்கள், அவரசநிலை, பனிப்போர், நக்ஸல் இயக்கம் குறித்த பகுதிகளிலும் பிற பாடப்புத்தங்களிலிருந்து நீக்கப்பட்டுள்ளன.

ஒரே பாடப்பகுதிகள் மீண்டும் இடம்பெற்றிப்பது, பொருத்தமற்ற தகவல்கள் உள்ளிட்ட காரணங்களுக்காக அவை கைவிடப்பட்டதாக NCERT  தெரிவித்தது.

எவ்வித அறிப்புமின்றி மகாத்மா காந்தியின் படுகொலை உள்ளிட்ட பகுதிகள் பாடப்புத்தகத்திலிருந்து நீக்கப்பட்டது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகையில், "பாஜகவால் பாடப்புத்தகங்களில் மாற்றங்களைக் கொண்டு வர முடியும். ஆனால், நாட்டின் வரலாற்றை மாற்ற முடியாது. இது பாஜக-ஆர்எஸ்எஸ் இணைந்து மேற்கொண்ட முயற்சி. அவர்கள் விரும்பும் அளவுக்கு முயற்சிகளை மேற்கொள்ளலாம். ஆனால், நாட்டின் வரலாற்றை அழிக்க முடியாது' என்றார்.

நீக்கப்பட்ட பாடப்பகுதிகளை குறிப்பிட்டு எம்.பி.  கபில் சிபல் வெளியிட்ட ட்விட்டர் பதிவில், "பிரதமர் நரேந்திர மோடியின் நவீன இந்திய வரலாறு 2014யிலிருந்து தொடங்கப்பட வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் தங்கள் வாழ்க்கையே மாறி விட்டதாகவும் மக்கள் தங்களிடம் செல்ஃபி கேட்டு அன்புத் தொல்லை தருவதாகவும், பொம்மன் -  பெள்ளி தம்பதியினர் வெட்கப்பட்டு கூறியுள்ளனர்.  சிறந்த டாகுமென்டரி குறும்படப் பிரிவில் இந்தியாவின் ‘தி எலிபென்ட் விஸ்பெரர்ஸ் (The Elephant Whisperers) ஆவண குறும்படம் ஆஸ்கர் விருது வென்றுள்ளது. தமிழ்நாட்டில் எடுக்கப்பட்ட இப்படம் ஆஸ்கர் விருது வென்று தமிழ்நாட்டிற்கும் இந்தியாவுக்கும் பெருமை சேர்த்துள்ளது.  இந்நிலையில் ஆவணப்படத்தில் முக்கிய கேரக்டரில் இடம்பெற்ற பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் நியூஸ் 18 நடத்தி வரும் மாநாட்டில் வீடியோ கால் வழியே பங்கேற்றனர். அதில் அவர்கள் கூறியதாவது-

ஆஸ்கர் விருது பெற்ற பின்னர் எங்களது வாழ்க்கையே மாறிவிட்டது. எங்களுக்கு நல்லதொரு அங்கீகாரம் கிடைத்துள்ளது. மக்கள் எங்களை மிகுந்த அன்புடனும், மரியாதையுடனும் பார்க்கிறார்கள். தங்களுடன் செல்பி எடுத்துக் கொள்ளுமாறு அவர்கள் அன்புடன் கேட்டுக்கொள்கின்றனர். குட்டி யானையை வளர்ப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. உங்கள் குடும்பத்தில் ஏதேனும் எமர்ஜென்சி ஏற்பட்டாலும், கூட உங்களால் யானை குட்டியை விட்டு சென்றுவிட முடியாது. அதனை எப்போதும் பராமரித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினார்.

சென்னை,மார்ச்.24-

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக இருக்கும் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியன் வயது 86  நீண்ட நாட்களாக உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்துள்ளார். இவருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், நடிகர் அஜித்குமாரின் தந்தை சுப்ரமணியம் உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள வீட்டில் இன்று அதிகாலை காலமானார் என செய்தி வெளியாகியுள்ளது.

  மறைந்த சுப்ரமணியத்தின் இறுதிச்சடங்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் இன்று நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. நடிகர் அஜித்குமாரின் தந்தை மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

புதுடில்லி, மார்ச்.14- 

புதுடில்லியில் இருந்து தோஹாவுக்கு சென்ற  இண்டிகோ' இந்திய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்ப்பட்டதால், பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால் அந்தப் பயணி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடில்லியில் இருந்து மேற்காசிய நாடான கத்தாரின் தோஹாவுக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் நேற்று காலை புறப்பட்டது. சிறிது நேரத்தில் அதில் பயணித்த நைஜீரிய ஆடவருக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க பாகிஸ்தான் கராச்சியில் உள்ள விமான நிலையத்திடம்  அனுமதி கேக்கப்பட்டது. அவர்கள் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இண்டிகோ விமானம்  அவசரமாக தரை இரங்கியுள்ளது.
மருத்துவர்கள்அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்க விரைந்து வந்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வழக்கமான நடைமுறைகளை முடிப்பதற்காக விமானம் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

பயணியின் இறப்பு சான்றிதழை அதிகாரிகள் தயார் செய்து அளித்தனர். அதையடுத்து, 5 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம், அங்கிருந்து மீண்டும் டெல்லிக்கு வந்து சேர்ந்தது.

புதுடில்லி, மார்ச்.14- 

புதுடில்லியில் இருந்து தோஹாவுக்கு சென்ற  இண்டிகோ' இந்திய விமானத்தில் பயணி ஒருவருக்கு திடீரென உடல்நல பாதிப்பு ஏற்ப்பட்டதால், பாகிஸ்தானின் கராச்சியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. ஆனால் அந்தப் பயணி உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

புதுடில்லியில் இருந்து மேற்காசிய நாடான கத்தாரின் தோஹாவுக்கு இயக்கப்படும் இண்டிகோ விமானம் நேற்று காலை புறப்பட்டது. சிறிது நேரத்தில் அதில் பயணித்த நைஜீரிய ஆடவருக்கு திடீர் உடல் நல பாதிப்பு ஏற்ப்பட்டுள்ளது.

இதையடுத்து விமானத்தை அவசரமாக தரையிறக்க பாகிஸ்தான் கராச்சியில் உள்ள விமான நிலையத்திடம்  அனுமதி கேக்கப்பட்டது. அவர்கள் அனுமதி வழங்கியதைத் தொடர்ந்து இண்டிகோ விமானம்  அவசரமாக தரை இரங்கியுள்ளது.
மருத்துவர்கள்அந்த பயணிக்கு சிகிச்சை அளிக்க விரைந்து வந்தனர்.

ஆனால், அவர் ஏற்கனவே உயிரிழந்திருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, வழக்கமான நடைமுறைகளை முடிப்பதற்காக விமானம் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது.

பயணியின் இறப்பு சான்றிதழை அதிகாரிகள் தயார் செய்து அளித்தனர். அதையடுத்து, 5 மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானம், அங்கிருந்து மீண்டும் டெல்லிக்கு வந்து சேர்ந்தது.

லாஸ் ஏஞ்சல்ஸ்: ஆர்.ஆர்.ஆர் திரைப்படத்தின் 'நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. டைரக்டர் எஸ்.எஸ்.ராஜமவுலி இயக்கத்தில் வெளியான 'ஆா்ஆா்ஆா்' திரைப்படம் கடந்த மாா்ச் மாதம் தெலுங்கு, தமிழ், இந்தி மொழிகளில் வெளியானது.

நடிகா்கள் ராம்சரண், ஜூனியா் என்டிஆா் உள்ளிட்டோா் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், மிகப் பெரிய வெற்றி பெற்றது.

அத்துடன் உலக அளவில் ரூ.1,000 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது. இந்தத் திரைப்படம் ஆஸ்கா் விருதுக்கான பல்வேறு பிரிவுகளில் விண்ணப்பித்திருந்த நிலையில், 'ஒரிஜினல் பாடல்' என்ற விருதின் பிரிவில் 15 பாடல்களில் ஒன்றாக இறுதிப் பட்டியலுக்கு தேர்வாகியுள்ளது.

ஆர்ஆர்ஆர் இன் நாட்டு நாடு சிறந்த இசை (ஒரிஜினல் பாடல்) குறுகிய பட்டியலில் இடம் பிடித்துள்ளது. திரைப்படத்தின் மிகப் பிரபலமான நாட்டு, நாட்டு பாடல் மாபெரும் வரவேற்பு பெற்றது. இந்தப் பாடலில் ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் ராம் சரணின் நடனம், பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமைக்கப்பட்டிருந்தது.

எம்.எம். கீரவாணி இசையமைப்பில் உருவான இந்தப் பாடலை, ராகுல் மற்றும் கால பைரவா பாடியிருந்தனர்!

மைலாப்பூர் மார்ச் - 11

சென்னை மைலாப்பூர் சவேரா தங்கும் விடுதியில்  நடைபெற்ற எழுத்தாளர் கார்த்திக் அவர்களின் 'பணப்பழக்கம்' வாழ்வை வளமாக்கும் திறவுகோல் நூல் வெளியீட்டு விழா, மஇகாவின் தேசியத் துணை தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் தலைமையில் நடைப்பெற்றது.

அன்மையில் தமிழக முதல்வரின் மனிதநேயத் திருநாளில் உரையாற்ற சென்னை சென்ற தப்பா நாடாளுமன்ற  உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ  எம் .சரவணன், அங்கு முதல்வர் மு.க ஸ்டாலினை சந்தித்து சிறப்புரையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.  

இலக்கியம் பேசும் அரசியல்வாதியும் ,அரசியல் பேசும் இலக்கியவாதியுமான  டத்தோ ஸ்ரீ சரவணன் இன்று எழுத்தாளர் கார்த்திக் அவர்களின் நூல் வெளியீட்டு விழாவை தலைமை தாங்கி சிறப்பித்தார்.

டெல்லி மார்ச்- 11

தலைநகர் டெல்லியில் பகர்கஞ்ச் பகுதியில் உள்ளூர்வாசிகளும், வெளிநாடுகளை சேர்ந்த சுற்றுலா பயணிகளும் சேர்ந்து ஹொலி கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.  

அந்த கொண்டாடத்தின் போது,
ஜப்பானை சேர்ந்த பெண் பயணியிடம் சில இளைஞர்கள் பாலியல் ரீதியில் அத்துமீறலில் ஈடுபட்ட காணொளி தற்போது வைரல் ஆகி வருகிறது.

அந்த பெண் மீது முட்டையை வீசி, பாலியல் ரீதியில் அத்துமீற  நடக்க சில முயற்சித்தனர். அப்போது தன்னிடம் அத்துமீறிய ஒரு இளைஞனை அந்த இளம்பெண் கன்னத்தில் அறைந்துவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றது கானொளியில் பதிவாகியுள்ளது.


இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்ட வெளிநாட்டு பயணி புகார் அளிக்கவில்லை. ஆனால், சமூகவலைதளத்தில் வைரலான வீடியோவின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் ஹோலி கொண்டாட்டத்தின்பொது வெளிநாட்டு பெண் பயணியிடம் அத்துமீறலில் ஈடுபட்ட சிறுவன் உள்பட 3 பேரை கைது செய்தனர்.

இதனிடையே  அந்த பெண் சுற்றுலா பயணி தற்போது வங்காளதேசம் சென்றுவிட்டதாகவும், அவர் மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் தற்போது நலமாக இருப்பதாக  டெல்லி போலீஸ் அறிக்கை வெளியிட்டுள்ளது.

 

FOR VIDEO  NEWS CLICK HERE

https://youtu.be/ycdSc-2rRAMhttps://youtu.be/ycdSc-2rRAM

சென்னை மார்ச் -10

தமிழக முதல்வரின் மனிதநேயத் திருநாளில் உரையாற்றவிருக்கும் மஇகாவின்  தேசியத் தலைவர் டத்தோ ஸ்ரீ எம். சரவணன் இன்று காலை சென்னை சென்றடைந்தார்.

தமிழக முதல்வரின்  மனிதநேயத் திருநாள் இன்று வெள்ளிக்கிழமை சென்னையில் நடைபெறுகிறது.

இந்த  விழாவில் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான  டத்தோ ஸ்ரீ  எம் சரவணன் உரையாற்றவுள்ளார்.

இன்று காலை சென்னை விமான நிலையத்திற்கு சென்றடைந்த அவரை 
அரசியல் பிரமுகர்கள், இலக்கிய ஆர்வலர்கள் உட்பட பலர் சென்னை விமான நிலையத்தில் மாலை அணிவித்து வரவேற்றனர் .

 

நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.

அவரின் நடிப்பில் உருவாகியுள்ள `கோப்ரா' படம் விரைவில் வெளியாக உள்ளது. பொன்னியின் செல்வன் படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக இருக்கிறது. இதற்காக சென்னையில் விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் நடிகர் விக்ரமுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார் என செய்திகள் வெளியாகியுள்ளன.

விக்ரமின் உடல்நிலை குறித்து அவருக்கு நெருங்கிய வட்டாரம் கூறுகையில்,

''விக்ரம் இரண்டு நாள்களாகவே கடுமையான காய்ச்சலில் இருந்தார். வீட்டில் இருக்கும்போது அவர் அசௌகரியமாக உணர்ந்ததால், நேற்று அவரை மருத்துவமனைக்கு அவசரமாக அழைத்து வந்தோம். மூத்த இதய நிபுணர் ஒருவர் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்குப் பரிசோதனைகளைச் செய்து உடனடி சிகிச்சை அளித்தனர். சிகிச்சைகளுக்குப் பிறகு அவர் உடல்நலம் தேறி வருகிறார். மருத்துவமனையிலேயே அவர் இரண்டு நாட்கள் இருந்துவிட்டு பின்னர் அவர் வீடு திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் வீண் வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது!

 

தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை மீனா. உச்ச நட்சத்திரங்களான ரஜினி,கமல்,அஜீத், விஜய் ஆகிய நடிகர்களுக்கு ஹீரோயினாக நடித்தவர்.

நடிகை மீனாவுக்கும் பெங்களூரூவைச் சேர்ந்த கம்ப்யூட்டர் என்ஜினீயர் வித்யாசாகருக்கும்  2009ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு நைனிகா என்ற மகள் உண்டு. நடிகை மீனா  கோட்டூர்புரம் பகுதியில் உள்ள ஸ்ரீநகர் காலனி கோவில் அவென்யூவில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் நடிகை மீனாவின் கணவரான வித்யாசாகர் (வயது 48), கடந்த 2 மாதங்களுக்கு முன்னதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டார். இவர் மட்டுமின்றி, இவரது தாய் ராஜ் மல்லிகா, மகள் நைனிகாவுக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதிலிருந்து மீண்டு வந்த நிலையில், கொரோனாவுக்கு பிந்தைய மருத்துவ பிரச்சனைகளால் பாதிக்கப்பட்ட வித்யாசாகர், தொடர் மருத்துவ சிகிச்சை எடுத்து வந்துள்ளார்.

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்றிரவு (ஜூன் 28) 9 மணியளவில் உயிரிழந்தார்.

நடிகை மீனாவின் கணவர் உயிரிழந்த சம்பவம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தொடர்ந்து சமூக வலைதளங்கள் வாயிலாக பல்வேறு திரை பிரபலங்கள் வித்யாசாகர் இறப்புக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். வித்யாசாகரின் உடல் கோட்டூர்புரத்தில் உள்ள அவரின் இல்லத்திற்கு உடல் கொண்டு வரப்பட்டு, அஞ்சலிக்காக வைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது!

இயக்குநர் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணம் இன்று மகாபலிபுரத்தில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில், அவர்களின் புகைப்படத்தை விக்னேஷ் சிவன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

‘போடா போடி’ என்ற திரைப்படத்தின் மூலம் கோலிவுட்டில் அறிமுகமான விக்னேஷ் சிவன், தனது இரண்டாவது படமாக ‘நானும் ரௌடிதான்’ என்ற திரைப்படத்தை இயக்கினார். கடந்த 2015-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்தில் விஜய் சேதுபதி, நயன்தாரா நடித்திருந்தனர். இந்தப் படத்தில் நடித்தபோது விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா இடையே ஏற்பட்ட பழக்கம் பின்பு காதலாக மலர்ந்தது. அதன் பின் இருவரும் இணைந்து தனி வீட்டில் வாழ்ந்து வந்ததுடன்,‘ரௌடி பிக்சர்ஸ்’ மூலம் திரைப்படங்களைத் தயாரிப்பது, படங்களை வாங்கி வெளியிடுவது என சேர்ந்து பணிபுரிந்து வந்தனர்.


சமீபத்தில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் வெளியான ‘காத்து வாக்குல ரெண்டு காதல்’ படம் வெளியாகும் சமயத்தில் விரைவில் நயன்தாராவுக்கும், தனக்கும் திருமணம் நடக்க இருக்கிறது என்பதைக் கூறி வந்தார். கடந்த செவ்வாய்க்கிழமை அன்று, பத்திரிகையாளர் சந்திப்பில் திருமணத் தேதியையும் அறிவித்தார் விக்னேஷ் சிவன். அதன்படி இன்று இருவரின் திருமணம் மிகச் சிறப்பாக நடைபெற்றது. நண்பர்கள் உறவினர்கள் சூழ, அவர்களின் ஆசீர்வாதத்துடனும், அன்புடனும் திருமணம் நடந்தாலும், இதிலும் பாலிவுட் முறையிலான நடைமுறையைக் கையாண்டிருக்கிறார்கள் விக்னேஷ் சிவனும், நயன்தாராவும். அதில் முதலாவது இந்த திருமணத்தை பிரத்யேகமாக பதிவு செய்ய நெட்ஃப்ளிக்ஸுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக மிகப் பெரிய தொகை ஒன்றை நெட்ஃப்ளிக்ஸ் தரப்பு அளித்திருக்கிறது.

சூர்யா - ஜோதிகா, விஜய் சேதுபதி, ஜெயம்ரவி, இயக்குநர் மணிரத்னம், மோகன்ராஜா, சுந்தர் சி, நெல்சன், இயக்குநர் விஜய், கௌதம் மேனன், ஆனந்த் ஷங்கர், மலையாள நடிகர் திலீப், தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி, ஒளிப்பதிவாளர் ரத்னவேலு, இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த திருமணத்தில் கலந்து கொண்டார்கள். கடுமையான பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் திட்டமிடப்பட்ட திருமணம், இன்று காலை 10.20 மணிக்கு இந்து முறைப்படி நடந்தது.

இந்நிலையில், திருமணம் முடிந்ததை அறிவிக்கும் வகையில் நயன்தாராவுடன் உள்ள புகைப்படத்தை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும், கடவுள், பிரபஞ்சம், எங்களது பெற்றோர் மற்றும் சிறந்த நண்பர்கள் அனைவரின் ஆசிர்வாதத்துடன் நயன்தாராவை திருமணம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

 

பேரறிவாளன் விடுதலை தொடர்பான வழக்கு சுப்ரீம்கோர்ட் நீதிபதி நாகேஸ்வராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணை நடைபெற்று வந்தது. இந்த வழ்
க்கில்  சுப்ரீம் கோர்ட்  நீதிபதிகள் எல் நாகேஸ்வர ராவ், போபண்ணா மற்றும் பிஆர் கவாய் ஆகியோர் தஇன்று தீர்ப்பு வழங்கினர்.30 ஆண்டுகளுக்கு மேலாக சிறைவாசம் அனுபவித்த நிலையில் பேரறிவாளனை விடுவித்து சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உத்தரவிட்டு உள்ளனர்.

சுப்ரீம் கோர்ட்  தனக்கு உள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, வழக்கில் 142-வது பிரிவைச் செயல்படுத்தி, விடுதலை செய்துள்ளது. இந்திய வரலாற்றில்சுப்ரீம் கோர்ட்  இது போன்ற தீர்ப்பை வழங்குவது மிகவும் அரிதாகும். நீதிபதிகள் வழங்கிய தீர்ப்பில், பேரறிவாளன் வழக்கில் கவர்னர்  செய்த கால தாமதம் நீதிமன்ற பரிசீலனைக்கு உட்பட்டது. அவரின் விடுதலை மீது கவர்னர்  முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்தியது. 28 மாதங்கள் இதில் முடிவு எடுக்காமல் இருந்தது தவறு. அவர் காலதாமதம் செய்தது தவறு. இதனால் அவரை விடுதலை செய்கிறோம் என்று சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கி உள்ளது.

பேரறிவாளன் விடுதலை இந்த தீர்ப்பு எப்பொழுதோ கிடைத்திருக்க வேண்டும், இது கால தாமதம்தான்; ஆனால் மகிழ்ச்சி என பேரறிவாளன் தாயார் அற்புதம்மாள் கூறி உள்ளார்.

கடந்த 1991-ஆம் ஆண்டு மே 21-ஆம் தேதி ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி மனித வெடிகுண்டு மூலம் கொல்லப்பட்டார்.

இந்த வழக்கில் 1991-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11-ஆம் தேதி பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். இந்தப் படுகொலை தொடர்பாக விசாரணை மேற்கொண்ட சிறப்பு நீதிமன்றம், நளினி, முருகன், பேரறிவாளன் உள்ளிட்ட 26 பேருக்கும் 1998-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி தூக்குத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது.

சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து 1999-ஆம் ஆண்டு மே 11-ஆம் தேதி மேல்முறையீடு செய்யப்பட்ட வழக்கில், சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு மட்டும் தூக்கு தண்டனையைசுப்ரீம் கோர்ட்டு  உறுதி செய்தது.

தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டுமெனக் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு 1999-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் சுப்ரீம் கோர்ட்டில்  தள்ளுபடி செய்யப்பட்டது.

தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரின் கருணை மனுக்களை கவர்னர்  பாத்திமா பீவி 1999-ஆம் ஆண்டு தள்ளுபடி செய்தார். கவர்னரின்  உத்தரவை ரத்து செய்த சுப்ரீம் கோர்ட் , அமைச்சரவை முடிவின் மீதே கவர்னர் முடிவெடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தது.

இதனையடுத்து கடந்த 2000-ஆம் ஆண்டு முதலமைச்சர் கருணாநிதி தலைமையிலான தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

தொடர்ந்து பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் ஜனாதிபதிக்கு  கருணை மனுக்களை அனுப்பினர். 2000-ஆம் ஆண்டு முதல் 2007-ஆம் ஆண்டு வரை அப்போதைய ஜனாதிபதி த கே.ஆர். நாராயணன், ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர். இதன்பின்னர் பதவியேற்ற ஜனாதிபதி  பிரதீபா பாட்டில், 2011-ஆம் ஆண்டு இவர்களின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்தார்.

11 ஆண்டுகளுக்கு மேலாக கருணை மனுக்கள் நிலுவையில் வைக்கப்பட்டதற்கு எதிராக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை ஐகோர்ட்டு மூவரையும் தூக்கிலிட தடை விதித்தது. பிறகு இந்த வழக்குசுப்ரீம் கோர்ட்டுக்கு  மாற்றப்பட்டது. 2014 பிப்ரவரி 18-ஆம் தேதி சுப்ரீம் கோர்ட்டில்  சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு மரண தண்டனையை ரத்து செய்து தீர்ப்பளித்தது.

தொடர்ந்து தமிழ்நாடு அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி எழுவரும் விடுவிக்கப்படுவதாக அப்போதைய முதலமைச்சர் ஜெயலலிதா அதிரடி அறிவிப்பை வெளியிட்டார். தமிழ்நாடு அரசின் முடிவை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டை அணுகி மத்திய அரசு தடையாணை பெற்றது.

இந்த வழக்கு மத்திய – மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால், வழக்கு, 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்றப்பட்டது. இதனையடுத்து இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு, எழுவரையும் 161-வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையென அறிவித்தது.

இதன் பின்னர் 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி, மத்திய அரசுக்கு தமிழ்நாடு அரசு கடிதம் அனுப்பியது இதனிடையே சுப்ரீம் கோர்ட்டில்  இந்த வழக்கை விசாரித்த ரஞ்சன் கோகாய் தலைமையிலான மூவர் அமர்வு 7 பேரை விடுவிப்பது தொடர்பாக 161-வது பிரிவின் கீழ் கவர்னர்  முடிவெடுக்க வேண்டுமென தீர்ப்பளித்தது. இதன்தொடர்ச்சியாக 7 பேரையும் விடுதலை செய்யக்கோரி தமிழ்நாடு அரசு பரிந்துரை செய்தது.

இந்நிலையில் சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவால், பரோலில் வந்த பேரறிவாளன், தொடர் சிகிச்சை பெற வேண்டி, 10-வது முறையாக பரோல் நீட்டிக்கப்பட்டது. மார்ச் 9-ஆம் தேதி பேரறிவாளனுக்கு ஜாமீன் வழங்கி சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பளித்தது. அதனைத்தொடர்ந்து, தற்போது தமிழ்நாடு அரசு எழுத்துப்பூர்வ வாதத்தை சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் செய்தது. அதில், பேரறிவாளனை விடுதலை செய்வதற்கான உரிய உத்தரவை பிறப்பிக்க வேண்டும் என்றும், விசாரணை வரம்பு தமிழ்நாடு எல்லையில் உள்ளதால் முடிவெடுக்க வேண்டிய அதிகாரமும் மாநில அரசுக்கே உள்ளது எனவும் வாதம் முன்வைக்கப்பட்டது.

மேலும், கவர்னரின்  சிறப்பு அதிகாரமான 161-ன் கீழ் முடிவெடுக்க எந்த தடையும் இல்லை எனவும் தமிழ்நாடு அரசு குறிப்பிட்டிருந்தது. இந்நிலையில், நீதிபதி நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு பேரறிவாளனை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது.

பேரறிவாளன் விடுதலை என்ற தீர்ப்பு குறித்த தகவல் அறிந்தது, பேரறிவாளன், அவரது தாய் அற்புதம்மாள் ஆகியோர் 31 ஆண்டு கால வேதனையின் தழும்புகளை ஆனந்த கண்ணீர் மூலம் வெளிப்படுத்தினர்.

அறையில், இருந்த பேரறிவாளனின் உறவினர்கள், சமூக ஆர்வலர்கள், மற்றும் தமிழ் அமைப்பினரும் அவரோடு இணைந்து தங்களின் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் வகையில் ஆனந்த கண்ணீர் சிந்தினர். பேரறிவாளனை கட்டி அணைத்தபடி உறவினர் ஒருவர் பேரறிவாளன் மார்பில் சாய்ந்து தனது மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டது பார்ப்பவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.
தொடர்புடைய செய்திகள்

பேரறிவாளன் வழக்கு: சுப்ரீம் கோர்ட் மத்திய அரசுக்கு அடுக்கடுக்கான கேள்வி தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைப்பு
பேரறிவாளன் வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.

 

கடந்த சில நாட்களாக பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சி விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் நிலையில், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய  கமல் இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார்.

’விக்ரம்’ படப்பிடிப்பு உள்பட பல பணிகள் இருப்பதால் தற்காலிகமாக பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து விலகிக் கொள்வதாக கமல்ஹாசன் அறிவித்து இருந்தார்.

இந்த நிலையில் கமல்ஹாசனுக்கு பதிலாக இந்த நிகழ்ச்சியை  சிம்பு தொகுத்து வழங்க உள்ளார் என செய்திகள் பரவியது.

தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்காக சிம்பு மேக்கப் போடும் போது எடுத்த புகைப்படம் இணையதளங்களில் கசிந்துள்ளது.

இந்த புகைப்படத்தை சிம்பு ரசிகர்கள் வைரலாக்கி வருகின்றனர். கமல்ஹாசன் போல் மிகவும் சிறப்பாக இந்த நிகழ்ச்சியை சிம்பு நடத்துவாரா? போட்டியாளர்கள் இடையே உள்ள பஞ்சாயத்துகளை சமயோசிதமாக தீர்த்து வைப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்!

 

தென்னிந்தியத் திரையுலகத்தில் சில மாதங்களுக்கு முன்புதான் நாகசைதன்யா, சமந்தா பிரிவு பரபரப்பை ஏற்படுத்தியது. இப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா பிரிவு எதிர்பாராத விதத்தில் வெளியாகி  பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. தனுஷ், ஐஸ்வர்யா தம்பதியினருக்கு இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.

தனுஷ் அவரது மாமனார் ரஜினிகாந்த் வசிக்கும் போயஸ் கார்டன் பகுதியில் பல கோடி ரூபாய் செலவில் சொந்தமாக ஒரு வீட்டையும் கட்டி வருகிறார். கடந்த அக்டோபர் மாதக் கடைசியில் டில்லியில் நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் ரஜினிகாந்த், தனுஷ் இருவரும் ஒன்றாகக் கலந்து கொண்டார்கள். அப்போது கூட சமூக வலைதளத்தில் அவர்கள் இருவரின் புகைப்படங்களைப் பகிர்ந்து “அவர்கள் என்னவர்கள், இது ஒரு வரலாறு, பெருமைமிகு மகள், பெருமைமிகு மனைவி” என ஐஸ்வர்யா பதிவிட்டுள்ளார்.

அதற்குப் பிறகு இரண்டு மாதங்களுக்கு முன்பு தனுஷ் ஹிந்தியில் நடித்த 'அத்ராங்கி ரே' பட டிரைலர் வெளியீட்டின் போது படக்குழுவினரைப் பாராட்டி தனது மகிழ்ச்சியைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஐஸ்வர்யா. அடுத்த இரண்டு மாதங்களில் என்ன நடந்ததோ தெரியவில்லை, தற்போது ஐஸ்வர்யா மற்றும் தனுஷ் இருவரும் தங்களது பிரிவு பற்றிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

சமூக வலைத்தளங்களில் இவர்களது பிரிவு பற்றி பலரும் பல்வேறு கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறார்கள். ரஜினிகாந்த், தனுஷ் இருவரது ரசிகர்களும் ஒரு படி மேலே போய் ஒருவரை, மற்றொருவர் தாக்கும் பதிவுகளையும் பதிவிட்டு வருகிறார்கள்!

‘நாய் சேகர் ரிட்டர்ன்ஸ்’ படத்திற்கான பாடல் தொடர்பாக வடிவேலு, இயக்குனர் சுராஜ் உள்ளிட்டோர் லண்டன் சென்று இருந்தனர். அந்தப் பணி முடிந்து சென்னை திரும்பிய நிலையில், வடிவேலுவுக்கு கொரோனா நோய் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து சென்னையில் போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனையில் நடிகர் வடிவேலு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்து வருகிறார். இந்நிலையில், நடிகர் வடிவேலு உடல்நிலை சீராக உள்ளது என அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

மேலும், "அவருடன் தொடர்பில் இருந்த நபர்களுக்குப் பரிசோதனை செய்ததில் இயக்குனர், தயாரிப்பாளருக்கு மரபணு மாற்றம் இருப்பது தெரியவந்துள்ளது. வடிவேலுவுக்கு முதல்நிலை அறிகுறி, S Drop அறிகுறி இருக்கும் காரணத்தினால் பரிசோதனைக்கு அனுப்பி உள்ளோம்" என அவர் கூறியுள்ளார்!

ஒமிக்ரான் எனும் புதியவகை கொரோனா உலகை அச்சுறுத்த தொடங்கியிருக்கிறது.

அவ்வகையில் இந்தியாவில் இதன் பாதிப்பு அதிகரித்துள்ளதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்தியாவில் ஒமிக்ரான் வகை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை இதுவரை 23 ஆக அதிகரித்துள்ளது.

 கடந்த மாதம் 24-ஆம் தேதி தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட இந்த ஒமிக்ரான் வைரஸ் இந்தியாவில் கர்நாடகா, குஜராத், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், டெல்லி ஆகிய மாநிலங்களில் பரவி வருகிறது. இதனால் வெளிநாட்டுப் பயணிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் மகாராஷ்டிராவில் மேலும் இருவருக்கு ஒமிக்ரான் வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் நாடு முழுவதும் ஒமிக்ரான் தொற்று எண்ணிக்கை 23 ஆக அதிகரித்துள்ளது!

எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் கொடுத்த லீலாவதி காலமானார்!

மறைந்த முன்னாள் முதல்வர் எம்ஜிஆர்-ன் அண்ணன் மகளும், எம்ஜிஆருக்கு தனது சிறுநீரகத்தை தானமளித்தவருமான எம்.ஜி.சி. லீலாவதி இன்று சென்னையில் காலமானார்.

உடல்நலக் குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வந்த லீலாவதி, சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை 2 மணியளவில் உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

எம்.ஜி.ஆரின் அண்ணன் எம்.ஜி. சக்கரபாணியின் மகள் லீலாவதி. தனது சித்தப்பா, எம்ஜிஆருக்கு சிறுநீரக பாதிப்பு ஏற்பட்டு, சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, கேரளத்தில் வசித்து வந்த லீலாவதி, செய்தித்தாள்கள் வழியாக இதனை அறிந்திருக்கிறார்.

உடனடியாக, தனது கணவரின் ஒப்புதலைப் பெற்றுக் கொண்டு, மருத்துவமனைக்கு வந்த லீலாவதி, உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பிறகு, எம்ஜிஆருக்குத் தனது சிறுநீரகத்தைத் தானமளித்தார்.

ஆனால், லீலாவதிதான் தனக்கு சிறுநீரகத்தை தானமளித்தார் என்பதை முதலில் எம்ஜிஆருக்கு யாரும் சொல்லவில்லை. அவர் உணர்ச்சிவயப்படுவார் என்பதால், அவருக்கு தெரியப்படுத்தாமல் இருந்தார்கள்.

எம்ஜிஆர் பூரண குணமடைந்து, திரும்பிய பிறகு, ஒரு நாள் நாளிதழ்கள் வாயிலாக இந்தச் செய்தியை அறிந்து கொண்டு நெகிழ்ந்தார்!

 

 

சென்னை, நவம்பர் 23: நடிகர் சூர்யா நடிப்பில், த.செ.ஞானவேல் இயக்கத்தில் வெளியான 'ஜெய் பீம்' படத்திற்கு பா.ம.க. தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. படத்தில் வன்னியர் சங்கத்தை இழிவுப்படுத்தும் விதமாக காட்சிகள் இருப்பதாக பா.ம.க. தரப்பில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. வன்னியர் சங்கத்தின் குறியீடான அக்னி குண்டத்தையும், வன்னியர் தலைவர் ஒருவரையும்  தவறாகச் சித்தரித்திருப்பதாகவும் குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது.

இதற்கிடையில், ஜெய் பீம் படத்தில் தனிப்பட்ட நபரையோ, குறிப்பிட்ட சமுதாயத்தையோ அவமதிக்கும் எண்ணம் சிறிதளவும் இல்லை. ஜெய்பீம் பட விவகாரத்தில் மன வருத்தம் அடைந்தவர்கள், புண்பட்டவர்களுக்கு வருத்தத்தை தெரிவிக்கிறேன் என்று அப்படத்தின் இயக்குனர் ஞானவேல் சமீபத்தில் அறிக்கை வெளியிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல் உள்ளிட்டோர் மீது சிதம்பரம் கோர்ட்டில் வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி வழக்கு தொடர்ந்துள்ளார்.

படத்தின் தயாரிப்பாளரான நடிகர் சூர்யாவின் மனைவி நடிகை ஜோதிகா, தயாரிப்பு நிறுவனம் மற்றும் படத்தை வெளியிட்ட ஓடிடி தளம் மீதும் வழக்கு தொடரபட்டது.

அவதூறு பரப்புதல், இரு சமூகத்தினர் இடையே வன்முறை தூண்டுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் ஆகிய பிரிவுகளில் வழக்கு தொடரபட்டது. இந்த வழக்கு சிதம்பரம் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது!

நடிகர் கமல்ஹாசனுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

அண்மையில், சிகாகோ நகரத்திற்கு காதி துணி அறிமுக விஷயமாக சென்று வந்தார் கமல். இந்த நிலையில் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதை உறுதி செய்துள்ள கமல், தற்போது போரூரில் உள்ள மருத்துவமனை ஒன்றில் தன்னை தனிமைப்படுத்திக் கொண்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

சிகாகோ சென்று வந்ததும் கடந்த சனி, ஞாயிறு நடைபெற்ற பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியையும் நடத்தி முடித்தார். அதாவது இந்த இரண்டு நாள் எபிசோடுகளின் படப்பிடிப்பு சனிக்கிழமை அன்றே முடிந்துவிடுவது வழக்கம். அதன்பின்னரே தனக்கு கொரோனா பாதிப்பு என கமலுக்கு தெரிய வந்ததாகச் சொல்லப்படுகிறது.

அந்த வகையில் மருத்துவமனையில் சிகிச்சை ஒரு வாரம், தனிமைப்படுத்திக் கொள்ள ஒரு வாரம் என இரண்டு வாரங்கள் கமல் ஓய்வெடுத்தே ஆக வேண்டும் என்பதால் வரும் வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை கமலால் தொகுத்து வழங்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. 

அவருக்கு பதிலாக யார் தொகுத்து வழங்கப் போகிறார்கள் என்கிற கேள்வியும் எழுந்துள்ளது.

இந்த நிலையில் வரும் வாரம் மாற்று ஏற்பாடாக ஸ்ருதிஹாசன் இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்க வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. 

காரணம் தெலுங்கில் நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இதேபோல இடையில் ஓரிரு வாரங்கள் அவர் படப்பிடிப்புக்காகச் செல்லவேண்டி இருந்தது.

அந்தசமயத்தில் அவருக்கு பதிலாக அவரது மருமகள் சமந்தா அந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். அதன்பின் மீண்டும் நாகார்ஜுனா வந்து பொறுப்பேற்று கொண்டார், அதே பாணியை பின்பற்றி இங்கே கமலின் மகளான ஸ்ருதிஹாசன் இந்த வாரம் பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதற்கான வாய்ப்பு இருப்பதாகவே தெரிகிறது!

விளம்பரம்:


 

புதுடெல்லி, நவம்பர் 19: வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன் என இந்திய பிரதமர் மோடி கூறினார்.

இந்திய அரசு கொண்டுவந்த சர்ச்சைக்குறிய 3 வேளாண் சட்டங்கள் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இதனை தொடர்ந்து  3 வேளாண் சட்டங்கள் வாபஸ் பெறப்பட்டது ஏன்பிரதமர் மோடி விளக்கம் அளித்துள்ளார் .

வேளாண் சட்ட நலனை ஒரு பிரிவு விவசாயிகளுக்கு எங்களால் புரியவைக்க முடியவில்லை. தொடர் முயற்சி செய்தும் வேளாண் சட்ட நலனை விளக்குவதில் வெற்றி பெற முடியவில்லை.

வேளாண் சட்டங்களின் நலனை விளக்க முடியாதது எங்களுடைய தவறு என கருதுகிறேன். வேளாண் சட்டங்கள் விவகாரத்தில் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.

வேளாண் துறைக்கு பல்வேறு புதிய நடவடிக்கைகள் மூலம் ஊக்கமளிக்க குழு அமைக்கப்படும்.  குழுவில் விவசாயிகள், விஞ்ஞானிகள், வல்லூர்கள் இடம்பெறுவார்கள். விவசாயிகள் நலனுக்காக தொடர்ந்து உழைப்போம் என்றார்.

இந்நிலையில், வேளாண் சட்டங்களை திரும்பப்பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தைததையடுத்து டெல்லி எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர். தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக போராட்டக்களத்தில் உள்ள விவசாயிகள் இனிப்புகள் வழங்கி கொண்டாடி வருகின்றனர்!


வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக கனமழை பெய்து வருகிறது.

குறிப்பாக  சென்னையில் பெரும்பாலும்  கனமழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தால் சாலைகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ச்சியாக அடுத்த இரண்டு நாட்களுக்கு சென்னையில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாl, இன்று மற்றும் நாளை இரு தினங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை கொடுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பாதுகாப்பாக இருக்கும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

மழை வெள்ள பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் புகார் அளிக்க அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறையைப் பார்வையிட்டு, தியாகராய நகரில் கால்வாயில் கொட்டப்பட்டுள்ள கழிவுகளை அகற்றும் பணியையும் ஆய்வு செய்த ஸ்டாலின், இருநாட்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால் பொதுமக்கள் பாதுகாப்பாக இருக்கவும் என தெரிவித்துள்ளார்!

 

நடிகர் ரஜினிகாந்த் நேற்று மாலை சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டார்.

கடந்த திங்கள்கிழமை டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருது விழாவில், தாதா சாகேப் பால்கே விருது பெற்றுக்கொண்டு சென்னை திரும்பிய ரஜினிகாந்த், நேற்று மாலை வழக்கமான பரிசோதனைக்காகக் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அவரின் மனைவி லதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார்.

வருடத்திற்கு ஒரு முறை மேற்கொள்ளும் வழக்கமான முழு உடல் பரிசோதனைக்காக ரஜினிகாந்த் மருத்துவமனை சென்றிருப்பதாகவும், லதா ரஜினிகாந்த் தெரிவித்திருக்கிறார். 

மருத்துவ பரிசோதனை முடிந்து ஒருநாள் கண்காணிப்பில் இருப்பார் எனவும் ரஜினி தரப்பில் தெரிவிக்க்ப்பட்டுள்ளது!

 

விளம்பரம்:

 





 

 

டெல்லி, அக்டோபர் 25: திரைத் துறையின் உயரிய விருதாக கருதப்படும் இந்திய அரசின் தாதா சாகேப் பால்கே விருது இன்று நடிகர் ரஜினிகாந்துக்கு வழங்கப்பட்டது.

 டெல்லியில் நடைபெற்ற 67வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் நடிகர் ரஜினிக்கு இவ்விருதினை துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு வழங்கி சிறப்பித்தார்.

 தமிழ் சினிமாவில் இவ்விருதினை நடிகர் சிவாஜி கணேசனும், இயக்குனர் பாலச்சந்தர் மட்டுமே பெற்றுள்ளனர். அந்த வகையில் திரைத்துறையின் உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருதை தமிழ் சினிமாவில் பெரும் மூன்றாவது நபர் ரஜினிகாந்த் என்ற பெருமையை பெற்றுள்ளார். 

விளம்பரம்:

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இயக்குநர் சேரன் பற்றி அவதூறு கிளப்பியது முதல், ஜோதிகா, சூரியா, விஜய் உள்ளிட்ட பல பிரபலங்களைத் தரக்குறைவாகப் பேசியது வரை ஏராளமான சர்ச்சைக்குரிய பதிவுகளை வெளியிட்டு வந்த மீரா மிதுனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டது.

சமீபத்தில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்களை மிகவும் மோசமான வார்த்தைகளைப் பயன்படுத்தித் தாக்கி பேசியதற்காகக் கடந்த மாதம் கைது செய்யப்பட்ட மீரா மிதுனுக்கு, செப்டம்பர் 22 புதன்கிழமை அன்று சென்னை கிழமை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. மேலும், ‘தவறு செய்வது மனித இயல்பு’ என்று நீதிமன்றம் கூறியுள்ளது!

சென்னை, ஆகஸ்ட் 21: சேரன் பாண்டியன் திரைப்படத்தில் தங்கையாக நடித்து மனம் கவர்ந்த தமிழ்த் திரைப்பட நடிகை, சித்ரா மாரடைப்பால் இன்று அதிகாலை காலமானார்.

கே.பாலசந்தரால் அவள் அப்படித்தான் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமானவர் சித்ரா. கேஎஸ் ரவிக்குமார் இயக்கிய 'சேரன் பாண்டியன்' 'ஊர்காவலன்' 'என் தங்கச்சி படிச்சவ' 'வெள்ளையத்தேவன்' உள்பட 300-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்தார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஹிந்தி என பல மொழிகளில் நடித்த சித்ரா, தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 1990ஆம் ஆண்டு விஜயராகவன் என்பவரை திருமணம் செய்து கொண்ட சித்ராவுக்கு மகாலட்சுமி என்ற மகள் இருக்கிறார்.

 

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்றின் 2-வது அலை ஓய்ந்து வந்த நிலையில், இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலின் அடிப்படையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதக 28 ஆயிரத்து 204 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியாகி உள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 3,19,98,158 ஆக அதிகரித்துள்ளது.

அதேபோல், தொற்று பாதிப்புகளுக்கு ஒரே நாளில் 373 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 4,28,682 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தோர் விகிதம் 1.34% ஆக உள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 41,511 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 3,11,80,968 ஆக உயர்ந்துள்ளது. இதன்மூலம் குணமடைவோர் விகிதம் 97.45 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 3,88,508 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுவோர் விகிதம் 1.21% ஆக குறைந்துள்ளது.

நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை சுமார் 51 கோடியே 45 லட்சம்  என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் சினிமாவில் பாடல் ஆசிரியராக அறிமுகமாகி ஒருசில படங்களில் கதாநாயகனாகவும் நடித்து பிரபலமானவர் சினேகன். சில காலம் வாய்ப்புகள் வராதநிலையில் பிரபல தொலைக்காட்சியின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமானார். கட்டிபிடி வைத்தியர் என்ற பட்டப்பெயர் பிக்பாஸ் முதல் சீசன் மூலம் பெற்று வைரலானார்.

இதையடுத்து நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மையத்தில் உறுப்பினராக பணியாற்றி வருகிறார். தன் உறவினர் பெண்ணை திருமணம் செய்யபோவதாக சில வருடங்களுக்கு முன் செய்திகள் பரவியது. இந்நிலையில் சீரியல் நடிகை கன்னிகா ரவி என்பவரை 8 வருடமாக காதலித்து வருவதாகவும், அவருடன் திருமணம் நடக்கவிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், நடிகர் கமல்ஹாசன் முன்னிலையில் ஜூலை 29ல் திருமணம் நடைபெறவுள்ளதாகவும் அதற்காக சினேகன் கன்னிகா ரவி எடுக்கப்பட்ட புகைப்படங்களும் இணையத்தில் வெளியாகி வைரலாகியுள்ளது.

சென்னை, ஜூலை 25: மாமல்லபுரம் அருகே கிழக்கு கடற்கரை சாலையில் நடந்த மோசமான கார் விபத்தில் 'பிக் பாஸ்' புகழ் நடிகை யாஷிகா ஆனந்த் படுகாயமடைந்தார். அவருடன் பயணம் செய்த அவரது தோழி வந்தி ரெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

வந்தி ரெட்டி பவானி அமெரிக்காவில் மென்பொருள் பொறியாளராக வேலை செய்கிறவர். இவரின் சொந்த ஊர் ஹைதராபாத்.

காரை யாஷிகா ஆனந்த் ஓட்டி வந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து அஜாக்கிரதையாக காரை ஓட்டி வந்ததாக யாஷிகா மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மாமல்லபுரம் அருகே நடந்த இந்த விபத்தில் படுகாயமடைந்த நடிகை யாஷிகா ஆனந்த், தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்தில் அவரது உயிர்த் தோழி மரணமடைந்த சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை, ஜூலை 7: பழம்பெரும் பாலிவுட் நடிகர் திலீப் குமார், மூச்சுத்திணறல் காரணமாக மருத்துவமனையில் கடந்த மாதம் அனுமதிக்கப்பட்டார்.  மும்பையின் கர் பகுதியில் இருக்கும் ஹிந்துஜா மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

அவருக்கு 98 வயதானதால், வயது மூப்பின் காரணமாக  உடல்நலக் கோளாறு ஏற்பட்டதாக குடும்பத்தினர் தெரிவித்தனர். தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த திலீப் குமார் இன்று காலமானார்.

இந்தியத் திரையுலகின் மகத்தான நடிகர்களில் ஒருவரான திலீப் குமார், 1994-ல் தாதாசாகேப் பால்கே விருதை வென்றார். இந்திய அரசின் பத்ம பூஷன், பத்ம விபூஷன் பட்டங்களும் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. சிறந்த நடிகருக்கான ஃபிலிம்ஃபேர் விருதுகளை அதிகமுறை வென்றுள்ளார். 1944-ல் நடிகராக அறிமுகமாகி, 50 ஆண்டுகளில் 65 படங்களில் நடித்துள்ளார். கடைசியாக 1998-ல் நடித்தார்!

லடாக், ஜூன் 29. லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு சீனா ராணுவத்தினருக்கும், இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா- சீனா எல்லைப் பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது. இதையடுத்து இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எல்லையில் படைகள் ஓரளவு திரும்ப பெறப்பட்டன. எனினும், சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அவ்வப்போது பதற்றம் நிலவுவதால் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை. சீன எல்லையில் இப்போது 2 லட்சம் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், கூடுதலாக மேலும் 50 ஆயிரம் வீரர்களை சீன எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், சீன எல்லைப் பகுதியில் 3 முக்கிய இடங்களில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன.

அதே சமயம் சீன ராணுவம் கூடுதலான படையினரை திபெத்தில் இருந்து ஜிங்ஜியாங் ராணுவத் தளத்துக்கு அனுப்பியுள்ளது. மேலும், போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகள் போன்றவற்றையும் எல்லைப் பகுதியில் சீனா நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன!

சென்னை ஜுன்-15

கோவிட்-19 தாக்கம் இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில், குறிப்பாக தமிழ்நாட்டில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்ட இக்காலக்கட்டத்தில், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தனி விமானம் வயிலாக இந்தியாவை விட்டு வெளியேறவிருப்பதாக தெரியவந்துள்ளது.

அமெரிக்காவிற்கு சிகிச்சைக்காக தனி விமானத்தில் பயணம் மேற்கொள்ளவுள்ள ரஜினி, இது தொடர்பாக சிறப்பு அனுமதி பெற்றுள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது.

அவருடன் குடும்பத்தாரும் அமெரிக்கா செல்லவுள்ளதாகவும், சிகிச்சைக்குப் பிறகு  கொஞ்ச காலம் சூப்பர் ஸ்டார் அமெரிக்காவில் ஒய்வு பெறவுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

'அண்ணாத்த' படப்பிடிப்பு முடிந்து இன்னும் டப்பிங் வேலைகள் எஞ்சியுள்ள நிலையில்,  தீபாவளிக்கு அத்திரைப்படம் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் ரஜினிகாந்த் சிகிச்சைக்குப் பிறகு  டப்பிங் பணியில் ஈடுபடுவார் எனத் தெரிகிறது!

புதுடெல்லி, ஜூன் 12: இந்தியாவில் கொரோனா பாதிப்பின் இரண்டாவது அலை மெல்ல மெல்ல கட்டுக்குள் வரத்தொடங்கியுள்ளது. அந்த வகையில் 5-வது நாளாக இன்று கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்திற்கு கீழ் பதிவாகியுள்ளது.

நேற்றைய உயிரிழப்பு எண்ணிக்கையான 2,197 உடன் பீகார் அளித்த உயிரிழப்பு எண்ணிக்கையான 3,951 உயிரிழப்புகள் சேர்க்கப்பட்டு நேற்றுமட்டும் இந்தியாவில் புதிய உச்சமாக 6 ஆயிரத்து 148 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 4,002 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 84 ஆயிரத்து 332 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 93 லட்சத்து 59 ஆயிரத்து 155 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் ஒரேநாளில் மேலும் 4,002 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 3,67,081 ஆக உயர்ந்துள்ளது!

மதுரை: வெறிபிடித்த நாய் குலைப்பதற்கு எல்லாம் நான் பதில் சொல்ல முடியாது என்று பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தேசிய செயலாளர் எச். ராஜா குறித்த கேள்விக்கு தமிழக நிதி அமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பதிலளித்துள்ளார்.

கோவில்களை தனியாரிடம் ஒப்படைக்கும் விவகாரத்தில் ஈஷா யோகா மையம் நடத்தி வரும் ஜக்கி வாசுதேவ் குறித்து சில விமர்சனங்களை முன்வைத்திருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன். அவரை நான்சென்ஸ் என்று குறிப்பிட்டிருந்தார். இது சமூக வலைதளங்களில் சர்ச்சையானது.

இதனையடுத்து ஜக்கி வாசுதேவ் குறித்து புதிய தகவல்கள் வரும் வரை தாம் எதுவும் பேசப் போவது இல்லை என கூறியிருந்தார் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்.

எச். ராஜாவும், ஜக்கி வாசுதேவ் பற்றி அமைச்சர் தியாகராஜன் பேசாமல் வாயை மூட வேண்டும் என்றும், அமைச்சர் பழனிவேல் தியாகராஜனின் பூர்வீகத்தைப் பற்றி பேசுவோம் என்றார். எச். ராஜாவின் இந்த விமர்சனம் தொடர்பாக அமைச்சர் தியாகராஜனிடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் அளித்த பதிலில்
"நான் புதுசாகப் பொறுப்பேற்றிருக்கிறேன். நாங்கள் 5 ஆண்டுகாலம் சிறப்பாகச் செயல்படப் போகிறோம். நான் ஒரு அடிப்படை கருத்து சொல்லப் போகிறேன். தயவு செய்து இதை நல்ல எண்ணத்துடன் இதனை எடுத்துக் கொள்ளுங்கள். யாரிடம் எந்தக் கருத்தை எந்த நேரத்தில் எடுத்து வெளியிடுவது என்பதற்கு அடிப்படையான ஒரு லிமிட் வேண்டும். தயவு செய்து மனிதன் பேசுகிற, தகுதியுள்ள மனிதன் பேசுகிற விமர்சனம், கேள்விகள், கோரிக்கைகளுக்கு பதில் சொல்கிறேன்.
வெறிபிடிச்ச நாய் குலைக்கிறதுக்கு எல்லாம் என்கிட்ட வந்து கேட்டீங்கன்னா.. நான் நாட்டின் அமைச்சர். எதுக்குப் பதில் சொல்லனும்? எதில் சொல்ல கூடாதுன்னு இருக்கு.. தயவு செய்து இந்த மாதிரி நாய் குலைக்கிறதுக்கு எல்லாம் பதில் சொல்ல மாட்டேன். இவ்வாறு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்!

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட, பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், ரவிச்சந்திரன் ஆகிய 7 பேரும் கடந்த 29 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்யக்கோரி பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வந்த நிலையில் எழுவரை விடுதலை செய்ய தமிழக அரசு தீர்மானத்தை நிறைவேற்றியது. தமிழக அரசு ஒருமனதாக சட்டமன்றத்தில் 2018-ம் ஆண்டு நிறைவேற்றிய தீர்மானத்துக்கு ஆளுநர் ஒப்புதல் அளிக்காமல் இருந்தார். இந்த விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வரை சென்றும் எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்தநிலையில், பேரறிவாளனுக்கு விடுப்புகோரி அவரது தாயார் அற்புதம்மாள் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கைவைத்தார்.

இந்தநிலையில், தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில், 'முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி வழக்கில் கைதாகி, ஆயுள் தண்டனை பெற்று, தற்போது சென்னை புழல் மத்திய சிறையில் இருந்துவரும் ஏ.ஜி. பேரறிவாளனுக்கு (சிறைக் கைதி எண் 7640) மருத்துவக் காரணங்களின் அடிப்படையில் விடுப்பு வழங்க வேண்டுமென அவரது தாயார் டி.அற்புதம்மாள் தமிழக அரசுக்கு அளித்திருந்த கோரிக்கையை பரிசீலித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஏ.ஜி.பேரறிவாளனுக்கு உரிய விதிகளைத் தளர்த்தி, 30 நாட்கள் சாதாரண விடுப்பு வழங்கிட ஆணையிட்டுள்ளார்கள்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, மே 19: உடல்நலக்குறைவு காரணமாக நடிகர் விஜயகாந்த் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த்திற்கு அதிகாலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக அதிகாலை 3 மணி அளவில் சென்னையில் உள்ள மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக முதல்கட்ட தகவல் வெளியாகி உள்ளது.

இதனிடையே வழக்கமான பரிசோதனைக்காகவே விஜயகாந்த் மருத்துவமனை சென்றுள்ளார் எனவும் அவர் ஒரு சில நாட்களில் வீட்டிற்கு திரும்புவார் எனவும் தேமுதிக தலைமைக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது.

கடந்த ஆண்டு அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சை பெற்று நலம் அடைந்தார். சட்டமன்ற தேர்தல் பிரச்சாரங்களில் காரில் கை அசைத்தபடியே மட்டும் விஜயகாந்த் பிரச்சாரம் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சென்னை: பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி வருகிறார்.

இந்நிலையில், தனியார் மருத்துவமனைகளில் உள்ள நோயாளிகளுக்கு அந்தந்த மருத்துவமனைகளில் ரெம்டிசிவர் மருந்து வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

இன்று காலை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் சுகாதாரத்துறை அமைச்சர் மற்றும் செயலாளர் ஆகியோருடன் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் வரும் 18-ஆம் தேதி முதல் தமிழகத்தில் உள்ள அனைத்து தனியார் மருத்துவமனைகளும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகள் , ஆக்சிஜன் மற்றும் மருந்து தேவையை இணையதளத்தில் பதிவிட வசதி ஏற்படுத்தப்படும் எனவும், தனியார் மருத்துவமனைகள் ரெம்டெசிவர் மருந்தை நேரடியாக பெற்றுக்கொள்ள புதிய நடைமுறை அறிமுகம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது!

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா வைரஸ் பெருந்தொற்றின் இரண்டாவது அலை, உலகின் பிற எந்த நாட்டிலும் ஏற்பட்டிராத வகையில் சுனாமி அலைகள் போல தாக்கி வருகிறது. இந்தியாவில் தினமும் 3.5 லட்சத்துக்கும் அதிகமானோரை இந்தக் கொடிய தொற்று தாக்கி வந்தது. இந்த சூழலில் நேற்றைய கொரோனா பாதிப்பு 3.26 லட்சத்தை தாண்டி பதிவாகி இருந்தது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 3,11,170 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 11 ஆயிரத்து 170 பேர் கொரோனா பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். இதனால் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 2 கோடியே 46 லட்சத்து 84 ஆயிரத்து 077 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பால் நாட்டில் 4,077 பேர் உயிரிழந்து உள்ளனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 2,70,284 ஆக உயர்ந்து உள்ளது. கடந்த 24 மணிநேரத்தில் 3 லட்சத்து 62 ஆயிரத்து 437 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 2 கோடியே 07 லட்சத்து 95 ஆயிரத்து 335 ஆக உயர்வடைந்து உள்ளது.

கொரோனா பாதிப்பு காரணமாக தற்போது 36,18,458 பேர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். நாட்டில் இதுவரை போடப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 18 கோடியே 22 லட்சத்து 20 ஆயிரத்து 164 ஆக உள்ளது என்று தெரிவித்து உள்ளது. 

இந்தியாவில் இதுவரை 31 கோடியே 48 லட்சத்து 50 ஆயிரத்து 143 கொரோனா பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன என்றும், அதில் நேற்று ஒருநாளில் மட்டும் 18,32,950 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) தெரிவித்துள்ளது!

சென்னை: கடந்த ஒருமாத காலமாக ‘அண்ணாத்த’ திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த நடிகர் ரஜினிகாந்த், நேற்றைய தினம் சென்னை திரும்பினார். ஐதராபாத் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் படப்பிடிப்பை முடித்து விட்டு நேற்று தனி விமானம் மூலம் அவர் சென்னை வந்திறங்கினார்.

வெளி மாநிலங்களில் இருந்து வருபவர்கள் சில நாட்கள் தனிமையில் இருக்க வேண்டும் என்ற சூழ்நிலையில், இன்றைய தினம் நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் தோட்டத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைத்து கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார்.

இதனை அவரது மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். நாம் ஒன்றாக இணைந்து இந்த கொரோனா தொற்றை வென்றெடுக்க வேண்டும் குறிப்பிட்டு, ரஜினிகாந்த் தடுப்பூசி செலுத்திக் கொண்ட புகைப்படத்தினை அவர் பகிர்ந்துள்ளார்!

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தந்தையார் செந்தமிழன்(வயது 80) இன்று காலமானார்.

நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் தந்தை அப்பா செந்தமிழன் அவர்கள் மறைவுற்றார் எனும் செய்தியை மிகுந்த வருத்தத்தோடு தெரிவிக்கின்றோம் என ட்விட்டரில் பதிவிடப்பட்டுள்ளது.

சீமானின் சொந்த ஊரான சிவகங்கை மாவட்டம் அரணையூரில் அவரின் அப்பா செந்தமிழன் மறைந்தார் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தந்தையை இழந்த சீமானுக்கு கட்சியினர் உட்பட பலர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

சென்னை, மே 11: 'கிணத்தைக் காணோம்' காமெடி புகழ் நெல்லை சிவா, இன்று மாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 60.

நெல்லை மாவட்டம், பணகுடி அருகே, வேப்பிலாங்குளத்தைச் சேர்ந்தவர் நெல்லை சிவா. வடிவேலு உடன் சேர்ந்து அவர் நடித்த காமெடி 'கிணற்றைக் காணோம்' பட்டிதொட்டி எல்லாம் பரவி நல்ல வரவேற்பைப் பெற்றது.

நெல்லைத் தமிழில் பேசி தமிழ் சினிமா மற்றும் சீரியல்களில் ரசிகர்களைக் கவர்ந்தவர். 80-களில் நடிக்கத் தொடங்கி தற்போது வரை குணச்சித்திர நடிகராக, காமெடியனாக திரைப்படங்கள் மற்றும் சீரியல்களில் நடித்து வந்தார்.

விஜய் டிவியின் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' தொடரில் நடித்து வந்தார். இந்நிலையில் நெல்லை சிவா அவர்கள் இன்று மாலை 6.30 மணிக்கு மாரடைப்பால் மரணமடைந்தார். நெல்லை சிவா திருமணம் செய்து கொள்ளவில்லை.

 

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு 3,754 பேர் உயிரிழந்துள்ளனர். நாடு முழுவதும் கொரோனாவால் புதிதாக பாதித்தவர்கள், குணமடைந்தோர், பலியானோர், சிகிச்சை பெறுவோர், இறப்பு விகித நிலவரம் குறித்து தினமும் காலை 9 மணியளவில் இந்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டு வருகிறது. அதன்படி, இன்று இந்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:

* புதிதாக 3,66,161 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 2,26,62,575 ஆக உயர்ந்தது.

* புதிதாக 4,092 பேர் உயிரிழந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டின் மொத்த உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,46,116 ஆக உயர்ந்துள்ளது.

* தொற்றில் இருந்து ஒரே நாளில் 3,53,818 பேர் குணமடைந்துள்ளனர்.

* இதன் மூலம், நாட்டில் மொத்தம் குணமடைந்தோர் எண்ணிக்கை 1,86,71,222 ஆக உயர்ந்துள்ளது.

* இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 37,45,237 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

* இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் சதவிகிதம் 82.39% ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனாவால் உயிரிழந்தோர் சதவிகிதம் 1.09% ஆக அதிகரித்துள்ளது.

* கொரோனாவால் சிகிச்சை பெறுவோர் சதவிகிதம் 16.53% ஆக அதிகரித்துள்ளது.

* இதன் மூலம், நாட்டின் இதுவரை 17,01,76,603 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

சென்னை, மே 7: நடிகர், இயக்குனர் பாக்யராஜ் மற்றும் அவரது மனைவி பூர்ணிமா பாக்யராஜ் இருவரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். இதனை அவர்களது மகன் நடிகர் சாந்தனு சமூகவலைதளத்தில் கூறியுள்ளார்.

தொற்று உறுதியானதைத் தொடர்ந்து இருவரும் வீட்டிலேயே தங்களை தனிமைப்படுத்தி, மருத்துவர்கள் ஆலோசனையின்படி சிகிச்சை எடுத்து வருகின்றனர்.

வீட்டில் உள்ளவர்கள், வேலை செய்கிறவர்கள் என அனைவரும் தங்களை தனிமைப்படுத்திக் கொண்டதாக தெரிவித்திருக்கும் சாந்தனு, கடந்த 10 தினங்கள் தங்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கொரோனா பரிசோதனை எடுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.

தனது பெற்றோர்கள் விரைவில் குணமடைய பிரார்த்தனை செய்யும்படியும் சாந்தனு வேண்டுகோள் விடுத்துள்ளார்!

சென்னை: மே 7: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி அமோக வெற்றிபெற்றது. தி.மு.க. 125 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப் பெரும்பான்மை பெற்றது. இதையடுத்து, ஆட்சியமைக்கும் பணிகளை திமுக தொடங்கியது. சட்டமன்ற கட்சித் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து அவர் கவர்னர் பன்வாரிலால் புரோகித்தைச் சந்தித்தார்.

தன்னை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.க்கள் பட்டியலையும் அப்போது கவர்னரிடம் மு.க.ஸ்டாலின் அளித்தார். அத்துடன் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். அதைத்தொடர்ந்து முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலினை பதவி ஏற்க வருமாறு கவர்னர் அழைப்பு விடுத்தார்.

இதைத்தொடர்ந்து இன்று சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் புதிய அரசு பதவி ஏற்பு விழா எளிமையான முறையில் நடைபெற்றது. முதல்-அமைச்சராக மு.க.ஸ்டாலின் பதவி ஏற்றார். அவருக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைந்துள்ள அமைச்சரவையில் அவருடன் சேர்த்து 34 அமைச்சர்கள் இடம் பெற்றுள்ளனர். ஸ்டாலின் பதவியேற்ற பின்னர் அமைச்சர்கள் அனைவரும் பதவி ஏற்றனர்.

விழாவில் திமுக நிர்வாகிகள், கூட்டணி கட்சி தலைவர்கள், எதிர்க்கட்சி தலைவர்கள், வெளிநாட்டு தூதரக அதிகாரிகள், நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் என 700 பேர் கலந்து கொண்டனர்.

எதிர்க்கட்சியான அதிமுக சார்பில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், மக்கள் நீதி மய்யம் சார்பில் அக்கட்சியின் தலைவர் கமல் பங்கேற்றனர்!

சென்னை, மே 6:  : பிரபல நகைச்சுவை நடிகர் பாண்டு கொரோனா பாதிப்பால் உயிரிழந்தார்.

கொரோனா பாதிப்புக்குள்ளான பாண்டு மற்றும் அவரது மனைவி குமுதா இருவரும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்.

இந்நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை நடிகர் பாண்டு காலமானார்.

பாண்டு-குமுதா தம்பதியினருக்கு பிரபு, பஞ்சு மற்றும் பின்டு ஆகிய மூன்று மகன்கள் உள்ளனர். கேப்பிடல் லெட்டர்ஸ் எனும் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்தி வந்த பாண்டு, பல்வேறு திரையுலக பிரபலங்களின் இல்லங்கள் மற்றும் நிறுவனங்களின் பெயர் பலகைகளை அழகுற வடிவமைத்து வந்தார்.

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை வடிவமைத்ததும் பாண்டு தான் என்பது குறிப்பிடத்தக்கது. நகைச்சுவை குணச்சித்திர நடிகர் பாண்டு அவரது பேச்சு, சிரிப்பு மற்றும் நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தவர். அவரது திடீர் மறைவு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அவரது மறைவுக்கு திரைத்துறையினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!

 

சென்னை, மே 5: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

கூட்டணி கட்சி சார்பில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.தி.மு.க., மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமை கட்சி, கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி ஆகிய கட்சிகளைச் சேர்ந்த 8 எம்.எல்.ஏ.க்களையும் சேர்த்து தி.மு.க.வுக்கு 133 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர்.

தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிய ஆட்சியை ஏற்படுத்த முறைப்படி சட்டசபை தி.மு.க. தலைவரை தேர்வு செய்ய தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என். நேரு, துணை பொதுச் செயலாளர்கள் பொன்முடி, ஐ.பெரியசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வரவேற்றார்.

கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அப்போது அரங்கத்தில் உள்ள எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் எழுந்து கரவொலி எழுப்பி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

தி.மு.க. சட்டமன்ற தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலின் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார். அவருடன் பொதுச்செயலாளர் துரைமுருகன், பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மை செயலாளர் கே.என்.நேரு, அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி ஆகியோரும் சென்று இருந்தனர்.

சென்னை, மே 5: தமிழக சட்டசபை தேர்தலில் தி.மு.க. கூட்டணி 159 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் தி.மு.க. மட்டும் 125 இடங்களில் வென்று தனிப்பெரும்பான்மை பெற்றது.

இதனையடுத்து தி.மு.க. தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. புதிய ஆட்சியை ஏற்படுத்த முறைப்படி சட்டசபை தி.மு.க. தலைவரை தேர்வு செய்ய தி.மு.க. எம்.எல். ஏ.க்கள் கூட்டத்தை பொதுச் செயலாளர் துரைமுருகன் கூட்டினார்.

சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நேற்று மாலை 6 மணி அளவில் நடைபெற்றது. கூட்டத்துக்கு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் தி.மு.க. சட்டமன்ற கட்சி தலைவராக (முதல்-அமைச்சராக) மு.க.ஸ்டாலினை எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் ஒருமனதாக தேர்ந்தெடுத்தனர். அதற்கான கடிதத்தில் 133 எம்.எல்.ஏ.க்களும் கையெழுத்திட்டனர். இதைத் தொடர்ந்து எம்.எல்.ஏ.க்கள் மு.க.ஸ்டாலினுக்கு வாழ்த்துகளௌத் தெரிவித்தனர்.

கூட்டம் முடிந்ததும் மு.க.ஸ்டாலின் மெரினா கடற்கரையில் உள்ள அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடங்களில் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், இன்று (புதன்கிழமை) காலை 10.30 மணிக்கு கிண்டி கவர்னர் மாளிகைக்கு மு.க.ஸ்டாலின் சென்றார்!

சென்னை, மே 4: கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் பத்திரிகையாளர்கள் அனைவரும் முன்களப் பணியாளர்களே என தமிழக முதலமைச்சராகப் பொறுப்பேற்கவுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கடும் மழையிலும், கொளுத்தும் வெயிலிலும், பெருந்தொற்றிலும் உயிரைப் பணயம் வைத்து உழைக்கும் ஊடகத் துறையினர் முன்களப் பணியாளர்களாகத் தமிழகத்தில் கருதப்படுவார்கள்.

செய்தித்தாள்கள், காட்சி ஊடகங்கள், ஒலி ஊடகங்கள் போன்றவற்றில் பணியாற்றி வருகின்ற தோழர்கள் அனைவருமே இந்த வரிசையில் அடங்குவார்கள்.

முன்களப் பணியாளர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் அவர்களுக்கு உரிய முறையில் வழங்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்!

 

2021 சட்டமன்றத் தேர்தலின் வாக்கு எண்ணிக்கை விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவரும் வேளையில், தி.மு.க - அ.தி.மு.க என முன்னணி கட்சிகளுக்கு அடுத்து பெரும்பான்மையான இடங்களில் 3 - வது இடத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் வாக்குகள் பெற்றிருப்பது அனைவரது கவனத்தையும் ஈர்த்துவருகிறது.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரையில், தி.மு.க - அ.தி.மு.க என பிரதான கட்சிகளுக்கிடையேதான் போட்டி என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை. ஆனாலும் இந்த 2 திராவிடக் கட்சிகளுக்கு அடுத்தபடியாக 3-வது இடத்தைப் பிடிக்கப்போவது யார் என்ற கேள்வி, அனைத்துத் தேர்தல்களிலும் முக்கிய இடத்தைப் பிடிக்கும்.

சீமான் தேர்தல் பிரசாரம்சீமான் தேர்தல் பிரசாரம்
அந்தவகையில், 2021 சட்டமன்றத் தேர்தல் பிரசார களம் 5 முனை போட்டியாக பரபரப்பு கிளப்பியபோதே, '3-வது இடத்தைப் பிடிக்கப் போகிற கட்சி அல்லது கூட்டணி எது...' என்ற விவாதமும் சூடு பறந்தது.

இதில், அ.ம.மு.க - தே.மு.தி.க கூட்டணி, ம.நீ.ம - ச.ம.க - ஐ.ஜே.கே கூட்டணி என இந்த 2 கூட்டணிகளில் ஏதாவது ஒன்று 3-வது இடத்தைப் பிடிக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்து வந்தனர். அதேசமயம் நாம் தமிழர் கட்சி தனித்து தேர்தலை சந்திப்பதால், அந்தக் கட்சி 4-லிருந்து 5 % வாக்குகளைப் பெறும் என்றே பெரும்பான்மையானவர்கள் கணித்து வந்தனர்.

ஆனால், 'திராவிடக் கட்சிகளுக்கு மாற்று, தமிழ்த் தேசியம்' என அடிப்படைக் கொள்கைகளை வகுத்துக்கொண்ட நாம் தமிழர் கட்சி, வழக்கமான அரசியல் பாதையிலிருந்து விலகி, தனித்துக் களம் காண்பது மக்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. இதன் வெளிப்பாடு தேர்தல் கருத்து கணிப்புகளிலேயேகூட வெளிப்பட்டது. குறிப்பாக இளைய சமுதாயத்தினர் மத்தியில் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு பெருகிவருகிறது. தற்போதைய வாக்கு எண்ணிக்கையின்போது, இது வெளிப்பட்டு வருகிறது! முழுமையான வாக்கு சதவிகிதம் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு தான் தெரிய வரும்.

 

சென்னை, மே 2:  தமிழகத்தில் கடந்த மாதம் 6-ஆம் தேதி ஒரே கட்டமாக ஓட்டுப்பதிவு நடைபெற்றது. அந்தத் தேர்தலில் 72.78 சதவீத வாக்குகள் பதிவானது.

இன்று (ஞாயிற்றுக் கிழமை) காலை 8 மணிக்கு தமிழகம் முழுவதும் 75 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை தொடங்கி விறுவிறுப்பாக நடைபெறுகிறது. காலை 9 மணி முதலே முன்னிலை நிலவரம் வெளியாக தொடங்கியது. திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றது. அதிமுக பின்தங்கியது.

மதிய நிலவரப்படி 234 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரமும் தெரியவந்துள்ளது. இதில், திமுக கூட்டணி, மெஜாரிட்டிக்கு தேவையான இடங்களை விட அதிக இடங்களில் முன்னிலை பெற்றது.திமுக கூட்டணி 143 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 90 தொகுதிகளிலும் முன்னிலையில் இருந்தன. திமுக மட்டும் 116 தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு தொகுதியில் முன்னிலை பெற்றிருந்தது.

அதன்பின்னர் மேலும் சில தொகுதிகளில் அதிமுக பின்தங்கியது. திமுக மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களில் முன்னிலை பெற்றது. மாலை 4 மணி நிலவரப்படி, திமுக கூட்டணி 157 இடங்களிலும், அதிமுக கூட்டணி 76 இடங்களிலும் முன்னிலையில் இருந்தது. மக்கள் நீதி மய்யம் ஒரு தொகுதியில் (கோவை தெற்கு-கமல்) தொடர்ந்து முன்னிலையில் இருந்தது. சில தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முடிந்து வெற்றி நிலவரங்களும் வெளியாகின.

தற்போதுள்ள முன்னிலை மற்றும் வெற்றி நிலவரத்தை பார்க்கையில், திமுக ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்டது. அக்கட்சியின்  தலைவர் மு.க.ஸ்டாலின் முதலமைச்சர் ஆகிறார்.

10 ஆண்டுகளுக்கு பிறகு தமிழகத்தில் மீண்டும் தி.மு.க. ஆட்சி மலர்கிறது. 53 வருட அரசியல் பயணத்தை கடந்துள்ள மு.க.ஸ்டாலின் 2009-ல் துணை முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். தற்போது முதல் முறையாக முதல்வர் நாற்காலியை அலங்கரிக்க உள்ளார். அவருக்கு அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வாழ்த்துக்களை தெரிவித்தவண்ணம் உள்ளனர்!

பிரபல இயக்குனர் மற்றும் ஒளிப்பதிவாளர் கேவி ஆனந்த் திடீரென மாரடைப்பு காரணமாக காலமானார் என்ற தகவல் திரையுலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

ரஜினி நடித்த 'சிவாஜி' உள்பட பல திரைப்படங்களை ஒளிப்பதிவு செய்தவரும் 'காப்பான்' உள்பட பல ஒரு சில திரைப்படங்களை இயக்கியவருமான கேவி ஆனந்த் அவர்களுக்கு இன்று அதிகாலை 3 மணிக்கு மாரடைப்பு ஏற்பட்டு அதன் காரணமாக காலமானார். இதனால் திரைஉலகம் பெரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்னர் விவேக்கை இழந்த திரையுலகம் அதிலிருந்து மீள்வதற்கு முன்னரே தற்போது கேவி ஆனந்த் அவர்களை இழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது கடந்த 1995-ஆம் ஆண்டு 'தேன்மாவின் கொம்பத்து' என்ற திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற கேவி ஆனந்த் அவர்கள் கடைசியாக சூர்யா நடித்த 'காப்பான்' என்ற திரைப்படத்தை இயக்கினார்.

அவரது மறைவு திரை உலகின் மிகப் பெரிய இழப்பு என்று திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!

புதுடெல்லி: இந்தியாவில் தற்போது கொரோனா இரண்டாவது அலை வேகமெடுத்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 லட்சத்து 23 ஆயிரத்து 144 ஆக உள்ளது. இந்தியாவில் இதுவரை கொரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை 1 கோடியே 76 லட்சத்து 36 ஆயிரத்து 307 ஆக உள்ளது. கொரோனா பாதிப்பால் ஒரே நாளில் 2,771 பேர் உயிரிழந்துள்ளனர்.

கொரோனா பாதிப்பு அதிகரிப்பால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் ஆக்சிஜன், ரெம்டெசிவிர் உள்ளிட்ட மருந்து பொருட்களுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனாவின் கோரப்பிடியில் இருந்து இந்தியாவினை மீட்க, உலக நாடுகள் நேசக்கரம் நீட்டி வருகின்றன.

இந்நிலையில், கொரோனா சிகிச்சைக்கு அவசரமாகத் தேவைப்படும் 4.5 லட்சம் ரெம்டெசிவிர் மருந்துகளை இந்தியாவுக்கு வழங்குவதாக அமெரிக்கா உறுதியளித்துள்ளது.

இந்தியாவில் கொரோனா சிகிச்சைகாக அவசரக் கால அடிப்படையில் பயன்படுத்தப்படும் ரெம்டெசிவிர் மருந்தை தயாரிக்க உரிமம் பெற்ற 7 இந்திய மருந்து ஆலைகள் தங்கள் உற்பத்தியை அதிகரித்திருக்குன் நிலையில், மேலும் உற்பத்தி ஆலைகளை விரிவுபடுத்துவதற்கான உரிமத்தை வழங்குவதாக அமெரிக்க மருந்து நிறுவனமான கிலியட் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக கிலியட் நிறுவன தலைமை வணிக அதிகாரி ஜொகானா மெர்சியர் கூறுகையில், “இந்தியாவில் ஏற்பட்டுள்ள நெருக்கடியை சமாளிக்க நாங்கள் துணை நிற்கிறோம். இருதரப்பின் இந்த முயற்சியினால் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் ரெம்டெசிவிர் மருந்தின் நன்மைகளை விரைவில் பெறுவர்” என்று தெரிவித்தார். 

கிலியட் நிறுவனத்தின் வாலண்டியர் லைசன்சிங் புரோகிராம் 2020ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதன் மூலம் 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் 23 லட்சம் மக்கள் பயனடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது!

சென்னை, ஏப்ரல் 27: இயக்குனர் ஷங்கர் தயாரித்த படம் உள்பட ஒரு சில திரைப்படங்களை இயக்கிய பிரபல இயக்குனர்  தாமிரா கோவிட் தொற்று காரணமாக காலமானார் என்ற செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

ஷங்கரின் தயாரிப்பில் இயக்குனர் தாமிரா இயக்கத்தில் உருவான திரைப்படம் ரெட்டைசுழி’. இந்த திரைப்படத்தில் இயக்குனர் இமயம் பாரதி ராஜா மற்றும் இயக்குனர் சிகரம் பாலசந்தர் ஆகிய இருவரும் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் சமுத்திரக்கனி நடித்த ‘ஆண்தேவதை’ உள்ளிட்ட ஒரு சில படங்களை இயக்கியவர் இயக்குனர் தாமிரா.

இவர் கடந்த சில நாட்களாக கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் சற்று முன் காலமானதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இதனை அடுத்து திரையுலகினர் அவரது மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!

சென்னை, எப்ரல் 25: தமிழகத்தில் கொரோனா 2-வது அலையின் தாக்கம் விஸ்வரூபம் எடுத்துள்ளது. அதைக் கட்டுக்குள் கொண்டு வரும் முயற்சியாக தமிழகத்தில் கடந்த 20-ஆம் தேதி முதல் இரவுநேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. இரவு நேர ஊரடங்குக்கு உத்தரவிடப்பட்டுள்ள அதே வேளையில், விடுமுறை தினமான ஞாயிற்றுக்கிழமை அன்று பொது இடங்களில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க அன்றைய தினம் முழு ஊரடங்கை தமிழக அரசு அறிவித்தது. இதன்படி இன்று தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.

இதன் காரணமாக சென்னை உள்பட அனைத்து மாவட்டங்களிலும், கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இறைச்சி கடைகள், மீன் மார்க்கெட், காய்கறி கடைகள் உள்ளிட்டவை மாநிலம் முழுவதும் திறக்கப்படவில்லை. தமிழகம் முழுவதும் உள்ள லட்சக்கணக்கான மளிகைக்கடைகள் மற்றும் டீக்கடைகளும் இன்று திறக்கப்படவில்லை.

அத்தியாவசிய தேவைகளுக்காக மட்டுமே மக்கள் வெளியில் வர வேண்டும் என்றும், தேவையில்லாமல் வெளியில் சுற்றுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டு இருந்ததால் அதற்குப் பயந்து மக்கள் வெளியில் வரவில்லை. இதனால் தமிழகம் முழுவதும் வெறிச்சோடி காணப்பட்டது. சென்னையில் எப்போதும் பரபரப்பாக காணப்படும் அண்ணா சாலை உள்ளிட்ட முக்கிய சாலைகளும் போக்குவரத்து இன்றி வெறிச்சோடியுள்ளது. போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்!

கன்னட மொழி சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வந்தவர் டி.எஸ். மஞ்சுநாத். இவர் நடிப்பில் வெளியான 'கெமிஸ்ட்ரி ஆப் கரியப்பா', 'சம்யுத்தா' போன்ற படங்களைத் தயாரித்து ஹீரோவாக நடித்தார். தற்போது 'ஜீரோ பர்சன்ட் லவ்' என்று பெயரிடப்பட்டுள்ள படத்தில் நடித்து முடித்துள்ளார்.

வருகிற ஜூன் 22-ம் தேதி தன்னுடைய பிறந்தநாளில் அந்தப் படத்தை வெளியிட மஞ்சுநாத் திட்டமிட்டிருந்த நிலையில், அவருக்கு திடீர் உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை குடும்பத்தினர் மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அதையடுத்து அவருக்கு நடத்தப்பட்ட பரிசோதனையில் கொரோனா இருப்பது உறுதியானது. தொடர்ந்து அதற்காக சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், அவருடைய உடல்நிலை மிகவும் மோசமடைந்தது.
அதைத் தொடர்ந்து அவர் தீவிர சிகிச்சைக்கு மாற்றப்பட்டார்.

இந்நிலையில் சிகிச்சை பலனின்றி நடிகர் மஞ்சுநாத் உயிரிழந்தார். வெறும் 35 வயதான மஞ்சுநாத் உயிரிழந்துள்ளது கன்னட திரையுலகத்தினரை அச்சமடையச் செய்துள்ளது. அவருடைய மறைவுக்கு பல திரையுலகத்தினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்!

சென்னை, ஏப்ரல் 17: மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை 4.35 மணியளவில்காலமானார்.

இதனையடுத்து அவரின் உடல் மருத்துவமனையிலிருந்து சாலிகிராமத்திலுள்ள அவரது இல்லத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு அவரது குடும்ப உறவினர்கள், நண்பர்கள், திரைத்துறையினர் பலர் அஞ்சலி செலுத்தினர்.

சுமார் 4 மணியளவில் நடிகர் விவேக்கின் இறுதி ஊர்வலம் சென்னை விருகம்பாக்கம் வீட்டில் இருந்து தொடங்கியது. இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக பிரபலங்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், மேட்டுக்குப்பம் மின்மயானத்தில் 78 குண்டுகள் முழங்க போலீஸ் மரியாதையுடன் விவேக்கின் உடல் தகனம் செய்யப்பட்டது. அவருக்கு அவரது இளையமகள் அஸ்வினி, இறுதிச்சடங்குகளைச் செய்தார்!

 

சென்னை, ஏப்ரல் 17: நடிகர் விவேக் மருத்துவ சிகிச்சை பலனின்றி காலாமானார். திரையுலகினர் பலர் நடிகர் விவேக் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

நகைச்சுவை நடிகர் விவேக் நேற்று காலை தனது குடும்பத்தினருடன் பேசிக் கொண்டிருக்கும் போது திடீர் என மயங்கி விழுந்ததால், வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனை அனுமதிக்கப்பட்டு அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

நடிகர் விவேக்கின் உடல்நிலை மோசமானதால்  எக்மோ கருவி உடன் சிகிச்சை பெற்று வந்தார். அவரது உடல்நிலை குறித்து 24 மணி நேரம் கழித்தே கூறப்படும் என்று மருத்துவர்கள் தெரிவித்து இருந்தனர். இந்நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலை அவர் உயிரிழந்தார்.

நடிகர் விவேக் 1961-ஆம் ஆண்டு கோவில்பட்டியில் பிறந்தவர். 500-க்கும் அதிகமான படங்களில் நடித்துள்ளார். நகைச்சுவை உடன் சிறந்த சமுதாய சீர்திருத்த கருத்துகளையும் கூறி நடித்து வந்தார். இதனால் அவர் சின்ன கலைவாணர் என்ற அடைமொழியால் ரசிகர்களால் அழைக்கப்பட்டார். சிறந்த நகைச்சுவை நடிகருக்கான தமிழக அரசின் விருதை 5 முறை பெற்றவர் விவேக். 2009-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருது வழங்கி மத்திய அரசு கவுரவித்தது.

முன்னாள் ஜானாதிபதி அப்துல்கலாமிற்கு பிடித்த நடிகர். அப்துல் கலாமின் கொள்கையைப் பின்பற்றி லட்சக்கணக்கான மரங்களை நாடு முழுவதும் நட்டுள்ளார். அதற்கான விழிப்புணர்வும் செய்து வந்தார். சத்தமில்லாமல் பல சேவைகளைச் செய்து வந்தார். இந்நிலையில் அவர் மரணமுற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விவேக் மறைவிற்கு திரையுலகினர், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்!

 

நடிகர் விவேக் இன்று காலை சினிமா படப்பிடிப்பு ஒன்றில் கலந்து கொண்டார். அப்போது  அவருக்கு திடீர் என மாரடைப்பு  ஏற்பட்டது.  உடனடியாக அவர் தனியார்  மருத்துவமனை ஒன்றில்  அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

நடிகர் விவேக் நேற்றுதான் சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தடுப்பூசி செலுத்திக்கொண்டார் .தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும். தடுப்பூசி குறித்து எவ்வித அச்சமும் தேவையில்லை. தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்பும் கொரோனா வரும். ஆனால் உயிரிழப்புகள் போன்ற பெரிய பாதிப்புகள் இருக்காது.

தடுப்பூசி செலுத்திக்கொண்ட பின்னரும் முக கவசம் அணிய வேண்டும். அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மிகவும் திறமைசாலிகள் எனத் தெரிவித்து இருந்தார்!

 

தமிழகத்தில் கரூர் செங்குந்த புரத்தில் உள்ள ஸ்ரீயா மொபைல் போன் கடையில், கரூர் மாவட்டத்தில் உள்ள மாணவ, மாணவிகள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் மட்டுமில்லாமல் தமிழ் ஆர்வலர்கள் யாராக இருந்தாலும் 10 திருக்குறள் சொன்னால் அவர்களுக்கு Ear Phone இலவசம் என்றும், அதனுடன் கொரோனா  மாஸ்க்கும் இலவசம் என்றும் அறிவித்தது.

இதனால், அக்கடைக்கு ஏராளமானோர் தினந்தோறும் சென்று 10 திருக்குறள் சொல்லி, மாஸ்க் மற்றும் Ear Phone ஐ இலவசமாக வாங்கிச் சென்றனர்.

கருவூர் திருக்குறள் பேரவை நிறுவனத்தலைவர் மேலை.பழநியப்பன் நடுவராக இருந்து பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார்!

புதுடெல்லி: இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் 16-ஆம் தேதி முதல் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது,

முதலில் முன்களப் பணியாளர்கள், இரண்டாம் கட்டமாக 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. தற்போது மூன்றாம் கட்டமாக 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில், தடுப்பூசி செலுத்த ஆரம்பித்து 85-வது நாளான நேற்று 10 கோடி டோஸை இந்தியா  கடந்துள்ளது.

குறைந்த நாட்களில் 10 கோடி டோஸ் தடுப்பூசி என்ற மைல் கல்லை எட்டிய முதல் நாடு இந்தியா என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது!

சென்னை, ஏப்ரல் 9: நடிகர் கார்த்திக்குக்கு, கடந்த மாதம் 21-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து அ.தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து மதுரை, ராஜபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் கார்த்திக் பிரசாரம் மேற்கொண்டார்.

பிரசாரம் முடிந்து சென்னை திரும்பிய அவருக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து மீண்டும் தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அங்குத் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள கார்த்திக்குக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் தொற்று இல்லை என்று தெரியவந்த போதிலும் மூச்சுத்திணறல் சரியாகாமலேயே உள்ளது. இதை தொடர்ந்து டாக்டர்கள் கார்த்திக் உடல் நிலையை கண்காணித்து வருகிறார்கள்!

சென்னை, ஏப்ரல் 7:  தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக வலம் வந்து கொண்டிருக்கும் ராதிகா மற்றும் சரத்குமார் ஆகிய இருவருக்கும் ஓராண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சரத்குமார் மற்றும் ராதிகா இருவரும் சேர்ந்து செக் மோசடி செய்ததாக செய்திகள் வெளியானதைத் தொடர்ந்து ,அதனை விசாரித்த நீதிமன்றம் தற்போது அவர்களுக்கு ஓர் ஆண்டுகாலம் சிறைத் தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.

ரேடியன்ஸ் என்ற நிறுவனம் தொடர்ந்த வழக்கில் குற்றம் நிரூபிக்கப்பட்டு இருவருக்கும் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. சரத்குமார் தற்போது சமத்துவ மக்கள் கட்சி மூலம் அரசியலிலும் ஈடுபட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. நடந்து முடிந்த தேர்தலுக்கு கூட கமலஹாசனின் மக்கள் நீதி மையத்துடன் கூட்டணி வைத்துக்கொண்டு பல இடங்களில் பிரச்சாரம் மேற்கொண்டார். இந்நிலையில் இருவர் மீதும் மோசடி வழக்கு பதிந்துள்ளது அனைவருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது!

 

சென்னை, ஏப்ரல் 6: தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திரைப்பிரபலங்கள், பொதுமக்கள் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர்.

நடிகர் அஜித், தனது மனைவி ஷாலினியுடன் திருவான்மியூரில் உள்ள வாக்குச்சாவடியில் மக்களோடு மக்களாக வரிசையில் காத்திருந்து வாக்களித்தார். அதுபோல் சூர்யா, கார்த்தி ஆகியோர் வாக்களித்தனர். தற்போது நடிகர் விஜய், நீலாங்கரையில் உள்ள வாக்குச்சாவடிக்கு சைக்கிளில் வந்து தனது வாக்கை பதிவு செய்திருக்கிறார். சூப்பர் ஸ்டார் ரஜினியும் வாக்களித்தார்.

இந்நிலையில், நடிகர் விஜய் சைக்கிளில் வந்து வாக்கு செலுத்தியது ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது!

 

சென்னை, ஏப்ரல் 6: தமிழக சட்டசபைக்கு ஒரே கட்டமாக ஏப்ரல் 6-ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

இதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் தேர்தல் பிரசாரம் களைகட்டியது. அரசியல் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து கட்சி தலைவர்கள் தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் மேற்கொண்டனர்.

கொளுத்தும் வெயிலுக்கு மத்தியில் அனல்பறந்த பிரசாரம் நேற்று முன்தினம் நிறைவடைந்தது.

பின்னர் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்றன. அனைத்து வாக்குச்சாவடிகளுக்கும் தேர்தல் அதிகாரிகள் நேற்று இரவே சென்று வாக்குப்பதிவு சுமுகமாக நடைபெறுவதற்கான ஏற்பாடுகளை செய்தனர்.

வாக்குப்பதிவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

சரியாக காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு இரவு 7 மணி வரை நடைபெறுகிறது.

கொரோனா தடுப்பு விதிகளைப் பின்பற்றி வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. காலை முதலே வாக்காளர்கள் ஆர்வத்துடன் தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். தமிழக சட்ட சபை தேர்தலில் வாக்களிக்க 6.28 கோடி வாக்காளர்கள் தகுதி பெற்றுள்ளனர்!

இந்தியாவில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் எகிறுகிறது. ஒவ்வொரு நாளும் பல்லாயிரக்கணக்கானோருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு வந்த கொரோனாவின் முதல் அலையைக் காட்டிலும், தற்போது வந்துள்ள இரண்டாவது அலையின் தாக்கம் மிக அதிக அளவில் இருக்கிறது.

இந்நிலையில், இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 93,249 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,24,85,509 ஆக அதிகரித்துள்ளது. அதேபோல், தொற்று பாதிப்பால் ஒரே நாளில் 513 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தோர் மொத்த எண்ணிக்கை 1,64,623 ஆக உயர்ந்துள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பில் இருந்து 60,048 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டநிலையில், கொரோனாவில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,16,29,289 ஆக உயர்ந்துள்ளது. மேலும் கொரோனா தொற்றுக்கு தற்போது 6,91,597 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் இதுவரை 7,59,79,651 பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது!

 

 

புதுடெல்லி: நடிகர் ரஜினியின் 40 ஆண்டு கால திரையுலக சாதனையை பாராட்டி, அவருக்கு உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

51-வது தாதா சாகேப் பால்கே விருது இன்று அறிவிக்கப்பட்டது. இந்திய சினிமாவில் சிறந்த பங்களிப்பைத் தந்தற்காக இந்த விருது அளிக்கப்படுவதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். இந்திய திரைப்படத் துறையில் சாதனையாளர்களுக்கு வழங்கப்படும் மிக உயர்ந்த விருது இதுவாகும். தங்கத் தாமரை பதக்கமும், ரூ.10 லட்சம் ரொக்கப் பரிசும் கொண்டது இந்த விருது பெறுபவர்களுக்கு வழங்கப்படும்

இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர், “தமிழக தேர்தலுக்கும் ரஜினிகாந்துக்கு விருது அறிவித்ததற்கும் எந்த தொடர்பும் இல்லைஎன்று அவர் தெரிவித்தார்.

முன்னதாக நடிகர் திலகம் சிவாஜி, இயக்குநர் கே.பாலசந்தர் ஆகியோருக்கு தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சனுக்கு விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது!

 

இந்தியா, மைசூருவைச் சேர்ந்தவர் 73 வயது மூதாட்டி. அரசு பணியிலிருந்து ஓய்வுபெற்ற இவர், தற்போது பெற்றோரை இழந்து தனிமையில் வசித்து வருகிறார். வயது முதிர்ந்த நிலையில் தற்போது அவர் மறுமணம் செய்ய முன்வந்துள்ளார். இதற்காக ஆரோக்கியமான, திடகாத்திரமான 73 வயதுக்கு மேற்பட்ட ஆண்மகன் தன்னை அணுகலாம் என்று விளம்பரம் செய்துள்ளார்.

தான் தனிமையில் இருப்பதால் மன உளைச்சலுக்கு ஆளாவதாகவும், அதனால்தான் மறுமணம் செய்து கொள்ள விரும்புவதாகவும், 73 வயதான பிராமண வகுப்பைச் சேர்ந்த தனக்கு, அதே வகுப்பைச் சேர்ந்தவர் மணமகனாக வேண்டும் என்றும் விளம்பரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

இதுதொடர்பாக அவர் நிருபர்களிட கூறியதாவது:- எனக்கு 13 வயதில் திருமணம் நடந்தது. சில ஆண்டுகளில் அந்தத் திருமணம் முடிவுக்கு வந்தது. நான் எனது கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றேன். பின் என்னுடைய பெற்றோருடனேயே வசித்து வந்தேன். நன்றாகப் படித்தேன். அரசு வேலை கிடைத்தது. என் பெற்றோரை நன்றாக கவனித்து கொண்டேன். சொந்த வீடு வாங்கினேன். வயதான எனது பெற்றோர் தற்போது உயிருடன் இல்லை. அதனால் நான் தனிமையில் இருந்து வருகிறேன். என்னுடைய பெரிய வீட்டில் நான் ஒருத்தி தனியாக இருப்பது என்னை மன உளைச்சலுக்கு ஆளாக்குகிறது. தனிமை என்னை மிகவும் வாட்டுகிறது. இதனால்தான் நான் மறுமணம் செய்து கொள்ள முடிவு செய்தேன். எனக்குப் பிள்ளைகள் இல்லை. நல்ல உடல் ஆரோக்கியத்துடன், திடகாத்திரமாக இருக்கும் 73 வயதுக்கு மேற்பட்டவர் மணமகனாக கிடைத்தால்தான் அது எனக்குப் பொருத்தமாக இருக்கும். அவர் என் மனதைப் புரிந்து கொண்டு எனக்கு ஆறுதலாக இருப்பார் என்று நம்புகிறேன்.” இவ்வாறு அவர் கூறியுள்ளார்!

நீண்ட இடைவெளிக்குப் பிறகு விஜயகாந்த் பொதுமக்கள் முன்னிலையில் பேசினார்.

உடல் நலம் காரணமாக பேச இயலாத நிலையில் விஜயகாந்த் இருந்து வருகிறார்.
ஜெயலலிதா கலைஞர் காலத்திலேயே அரசியல் கட்சியைத் தொடங்கி, எதிர்க்கட்சித் தலைவரும் ஆனவர் விஜயகாந்த். துணிச்சலாகக் கருத்தை வெளியிட்டு வந்தவர். இடையில் ஏற்பட்ட உடல்நலக் கோளாறு அவர் கட்சிக்கும் பின்னடைவை ஏற்படுத்தியது.

இந்நிலையில் இந்தத் தேர்தலை முன்னிட்டு அவர் மக்கள் முன்னிலையில் பேசினார்.
தட்டுத் தடுமாறி ஒரு குழந்தையைப் போல பேசினார். மக்கள் பலரும் கலங்கினர். அப்போது கூட "என் மக்களுக்கு ஒன்னுன்னா நான் சும்மா விடமாட்டேன்.... எல்லாரும் பத்திரமா வீட்டுக்குப் போகணும்... போனதும் போன் பண்ணனும்" என்ற போது மக்களின் மீதான அவரின் நேசத்தை உணர முடிந்ததாகச் சொல்கிறார்கள் அவரின் அபிமானிகள்.

அவர் ஜெயிக்கிறாரோ இல்லையோ பரிபூரண குணமாகி மீண்டு வரவேண்டும் என்பதே மக்களின் பிரார்த்தனையாய் இருக்கிறது!
 


 

புதுடெல்லி:  இந்தியாவில் காணப்படும் கொரோனா வைரஸ் வகைகளை மரபணு வரிசைப்படுத்தி ஆய்வு செய்வதற்காக, 10 தேசிய ஆய்வுக்கூடங்கள் கொண்ட குழுமத்தை (இன்சாகாக்) மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கடந்த டிசம்பர் மாதம் உருவாக்கியது. அந்த ஆய்வுக்கூடங்களில் கொரோனா வகைகளை மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது.

மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் அனுப்பி வைத்த 10 ஆயிரத்து 787 கொரோனா உறுதி செய்யப்பட்ட மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன. அதில், இதுவரை 771 உருமாறிய கொரோனாவை இன்சாகாக்குழுமம் கண்டுபிடித்துள்ளது. இவற்றில், 736 மாதிரிகள், இங்கிலாந்தை சேர்ந்த உருமாறிய கொரோனாவை சேர்ந்தவை. 34 மாதிரிகள் தென்ஆப்பிரிக்க உருமாறிய கொரோனாவையும், ஒரு மாதிரி, பிரேசில் உருமாறிய கொரோனாவையும் சேர்ந்தவை. 18 மாநிலங்களில் இந்த உருமாறிய கொரோனாக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

அதே சமயத்தில், சர்வதேச பயணிகள், அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆகியோரிடம் பெறப்பட்ட மாதிரிகளிலும் மரபணு வரிசைப்படுத்தும் ஆய்வு நடந்து வருகிறது. மாநிலங்கள் அனுப்பி வைத்த மாதிரிகளில், புதிய இருமுறை மரபணு உருமாறிய கொரோனாகண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வகை கொரோனா, நோய் எதிர்ப்பு சக்திக்கு கட்டுப்படாதவை, தொற்றை அதிகப்படுத்தக்கூடியவை.

15 முதல் 20 சதவீத மாதிரிகளில் இந்தவகை கொரோனா கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. முன்பு கண்டுபிடிக்கப்பட்ட உருமாறிய கொரோனாக்களுடன் ஒத்துப்போகாமல், இவை புதிய ரகமாக காணப்படுகின்றன.

மராட்டியம், கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து பெறப்பட்ட மாதிரிகளில் இவை கண்டறியப்பட்டுள்ளன. இங்கிலாந்து, டென்மார்க், சிங்கப்பூர், ஜப்பான், ஆஸ்திரேலியா உள்பட 16 நாடுகளிலும் இவை கண்டறியப்பட்டுள்ளன.

இருப்பினும், இந்தியாவில் சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்ததற்கு இந்த மரபணு உருமாறிய கொரோனாக்கள்தான் காரணமா என்பதை நிரூபிக்க போதிய ஆதாரங்கள் கிடைக்கவில்லை!

திடீர் மூச்சுத் திணறலால், தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் நடிகர் கார்த்திக் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சில படங்களில் கவுரவக் கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார் கார்த்திக். மேலும், மனித உரிமைகள் காக்கும் கட்சி என்ற கட்சியையும் நடத்தி வருகிறார். சில தினங்களுக்கு முன்பு பத்திரிகையாளர்களைச் சந்தித்த கார்த்திக், அதிமுக கூட்டணிக்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். மேலும், அரசியலில் தனது நிலைப்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்துப் பத்திரிகையாளர்களின் கேள்விக்குப் பதிலளித்தார்.

நேற்றிரவு அதிமுக - பாஜக கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காகத் தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

அப்போது அவருக்கு திடீரென்று மூச்சுத் திணறல் ஏற்பட்டது. உடனடியாக, ஆம்புலன்ஸ் உதவியுடன் சென்னை அடையாற்றில் உள்ள மலர் ஃபோர்டிஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளும் செய்யப்பட்டன. கார்த்திக்கு கரோனா பரிசோதனை செய்ததில், நெகட்டிவ் என்பது தெரியவந்துள்ளது. அவருக்குத் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது!

சென்னை : உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்களைக் கொண்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் கடந்த 4 சீசன்களையும் நடிகர் கமல் ஹாசனே தொகுத்து வழங்கினார்.

இந்நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் வரும் ஜூன் மாதம் துவங்க உள்ளது. இதில் பங்குபெறும் போட்டியாளர்கள் தேர்வு சுறுசுறுப்பாக நடைபெற்று வருகிறது. போட்டியாளர்கள் பட்டியலில் நடிகர் நகுல் இருப்பதாகத் தகவல் பரவி வருகிறது.

அத்துடன் 'குக் வித் கோமாளி' பிரபலங்களான கனி, பவித்ர லட்சுமி ஆகியோரையும் பங்கேற்க வைக்க முயற்சி நடந்து வருவதாக கூறப்படுகிறது.

கடந்த 4 சீசன்களை போல் இந்த சீசனையும் கமலே தொகுத்து வழங்குவார் எனக் கூறப்படுகிறது.

இருந்தாலும் தமிழக சட்டசபை தேர்தலில் அவர், தனது கூட்டணி கட்சி சார்பில் முதல்வர் வேட்பாளராக நிறுத்தப்பட்டுள்ளதால், கமலின் மக்கள் நீதி மய்யம் கட்சி கணிசமான இடங்களைக் கைப்பற்றினால், அவர் தீவிர அரசியலில் இறங்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

அவ்வாறு கமல் முழு நேர அரசியலில் இறங்கினால், அவருக்கு ப்பதில் பிக்பாஸ் சீசன் 5 ஐ தொகுத்து வழங்க நடிகர் சிம்புவிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறதாம்.

சன் டிவியில் விரைவில் துவங்கப்பட உள்ள சமையல் நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்க உள்ள நிலையில், பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சிம்பு தொகுப்பாளராக வரவும் வாய்ப்புள்ளது!

 

புதுடெல்லி: இந்தியாவில் சமீப நாட்களாக கொரோனா தொற்று மீண்டும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. தமிழகம், பஞ்சாப், மத்திய பிரதேசம், டெல்லி, குஜராத், கர்நாடகா மற்றும் ஹரியானா மாநிலங்களிலும் கொரோனா பரவல் மீண்டும் அதிகரிக்க துவங்கியுள்ளதாக இந்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் தடுப்பூசி பணிகள்  குறித்து அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார். இதில், பேசிய இந்திய பிரதமர் நரேந்திர மோடி, “நாடு முழுவதும் 70 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ள நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்களிடையே கொரோனா பரவல் தொடர்பான அச்சம் பரவாமல் தடுப்பது அரசின் கடமை. கொரோனா வேகமாக பரவி வருகிறது. அனைத்து மாநிலங்களும் ஆர்டிபிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். அனைவரும் தடுப்பூசியைச் செலுத்தி கொள்ள வேண்டும்.தடுப்பு மருந்துகள் வீணாவதை நாம் தடுக்க வேண்டும். இதற்காக சரியாக திட்டமிடுவதுடன், அதில் உள்ள ஓட்டைகளை அடைக்க வேண்டும். எந்த விலை கொடுத்தாவது தடுப்பு மருந்துகள் வீணாவதை தடுக்க வேண்டும். தடுப்பூசி போட்டு கொண்டாலும் கவனமாக இருத்தல் அவசியம், மாஸ்க் அணிவது சமூக இடைவெளியை கடைபிடிப்பது அவசியம். கொரோனாவை தடுப்பதற்கான வழிகளை மாநில அரசுகள் தெரிவிக்கலாம். கொரோனாவுக்கு எதிரான போரில், மக்கள் ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். கொரோனா மீண்டும் பரவுவதை தடுக்க வேண்டும். நாம் அனைவரும் இணைந்து கொரோனாவை தடுக்க வேண்டும். கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைவிடக்கூடாது.

நாடுமுழுவதும் ஒருங்கிணைந்து எடுக்கப்பட்ட நடவடிக்கை காரணமாக கொரோனா பெருமளவு கட்டுக்குள் வந்தது. மற்ற பல நாடுகளில் ஏற்பட்டுள்ளதை போல இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை உருவாகுவதை உடனடியாக தடுத்து நிறுத்த அனைத்து மாநில அரசுகளும் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்என்று அவர் கூறினார்!

 

 

தமிழக தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், விஜயகாந்தின் தேமுதிக மட்டும் கூட்டணி வாய்ப்பு இல்லாமல் தவித்து வந்தது. இந்நிலையில் அதிமுகவுக்கு பெரும் தலைவலியாக இருக்கும் எனக் கருதப்படும் டிடிவி தினகரன் கட்சியுடன் தேமுதிக கூட்டணி வைத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 60 இடங்கள் என உறுதியாகியுள்ளது. வட, மேற்கு மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை தேமுதிகவும், தென் கிழக்கு டெல்டா மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களை அமமுகவும் பிரித்துக்கொண்டுள்ளன.

இதன் மூலம் டிடிவி தினகரன் தலைமையை தேமுதிக ஏற்றுக்கொண்டுள்ளது.

அமமுகவிடம் 26 தொகுதிகள் மட்டுமே எஞ்சியிருந்த நிலையில் அமமுக வேட்பாளர்களை வாபஸ் பெற வைத்து தேமுதிகவுக்கு தொகுதிகளை ஒதுக்கியுள்ளனர்!

கர்ணனில் நம் மனங்களையெல்லாம் கவர்ந்த சந்தோஷ் நாராயணன் மீண்டும் நம் மனங்களைக் கொள்ளை கொள்ள வந்திருக்கிறார். இம்முறை மீண்டும் தான் யார் என்பதைத் தன் இசையின் வாயிலாக நிரூபித்திருக்கிறார்.


தனியிசைக்கென ஒரு தனியிடம் தமிழில் பெரிதாக உலகத் தரத்துக்கு இல்லையென்ற எண்ணம் எப்போதுமிருக்கும்! அப்படி இருக்கும் சில தனியிசைக் கலைஞர்களும் தமிழ்த்திரையுலகின் மாயையில் கலந்து காணாமல் போய்விடுகிறார்கள் எனும் நிதர்சனத்தையும் நாம் பார்த்து வருகிறோம்.

சந்தோஷ் நாராயணன் சமீபத்தில் செய்யும் இசைப்புரட்சி எனும் கலகக் குரலில் தன் மகளின் வாயிலாக அவர் இப்போது செய்திருக்கும் படைப்பு வார்த்தைகள் கொண்டு விவரிக்க முடியாததொரு உணர்வை வழங்கியிருக்கிறது. என்னைக் கேட்டால் இப்பாடல் உலகத் தரத்திற்கு நம் தனியிசையை எடுத்துச் செல்லும் முதல் முயற்சியென்பேன். அதில் தோழர் அறிவின் வரிகளும் அது தாங்கியிருக்கும் மக்களின் பண்பாடும் அதை அப்படியே இசையாக்கிய சந்தோஷின் இசையும் தீயின் தீக்குரலுமே காரணம் என்றால் அது மிகையல்ல

இவையெல்லாவற்றையும் தாண்டி அறிவும் தீயும் சேர்ந்து இந்தப் பாடல் பாடியதே ஒரு மிகப் பெரும் நகர்வாகத் தான் பார்க்கிறேன். இவர்கள் இருவரின் பின்னணியும் பார்த்தால் நான் சொல்லும் இவ்வார்த்தைக்கான அர்த்தம் உங்களுக்குப் புரியும்! இவர்கள் இருவரையும் பாட வைத்த இடத்திலேயே சாதியம் நசுக்கப்படுகிறது.

"குக்கூ குக்கூ... தாத்தா தாத்தா களவெட்டி!

குக்கூ குக்கூ... பொந்துல யாரு மீன்கொத்தி!

குக்கூ குக்கூ... தண்ணியில் ஓடும் தவளைக்கி

குக்கூ குக்கூ... கம்பளிப்பூச்சி தங்கச்சி!"

என்று தீயின் கொஞ்சும் குரலில் இந்தப் பாடலைக் கேட்கும் போதே சிறுவயதில் கிராமங்களில் வளர்ந்த எல்லோருக்கும் தங்களை அறியாமல் ஒரு புன்னகை பூக்கும்! இப்படி நாட்டார் மக்களின் வாழ்வில் இருக்கும் ஒரு விளையாட்டுக் கூறை எடுத்துப் பாடல் இயற்றிய இடத்திலேயே அறிவின் அறிவு என்னை ஈர்க்கிறது. மக்களின் உணர்வுகளிலும் வாழ்வியலிலும் இருந்து வரும் செயற்கைத்தனமில்லா வரிகளுக்கு எப்போதும் வரலாற்றில் தனியிடமுண்டு.

அல்லி மலர் கொடி அங்கதமே!

ஒட்டார ஒட்டார சந்தனமே!

முல்லை மலர்க்கொடி முத்தாரமே!

எங்கூரு எங்கூரு குத்தாலமே! என்ற வரியில் எங்கூரு எனும் வழக்குச் சொல்லை தீ உச்சரிக்கும் போது அடடா அவளுக்காகவே இந்த வரி எழுதியது போல் இருக்கும்.

"அன்னக்கிளி அன்னக்கிளி அடி ஆலமரக்கிளை வண்ணக்கிளி!" என்ற வரியைக் கேட்கும் போது

"அம்மாடி ஆலமரம்

மரத்துமேல உச்சிக் கிளை!

ஒத்தக் கிளி நின்னாக் கூட

கத்தும் பாரு அவன் பேர!" என்று கர்ணன் பெயர் சொல்லும் அந்தக் கிளியைத் தான் தீ பாடுகிறாரோ என்ற எண்ணம் எழுகிறது!

"நல்லபடி வாழச் சொல்லி இந்த மண்ணக் குடுத்தானே பூர்வக்குடி!

கம்மங்கரை காணியெல்லாம் பாடித் திரிஞ்சானே ஆதிக்குடி!

நாயி நரி பூனைக்குந்தான் இந்த ஏரி குளங்கூட சொந்தமடி!"

எனும் வரிகள் தாங்கியிருக்கும் வரலாற்றை அத்தனை எளிதில் கடந்துபோய்விட முடியாது நல்லபடி வாழச் சொல்லி நமக்கு இந்த மண்ணைக் கொடுத்தப் பூர்வக்குடியை இன்றைக்கு நாம் எப்படி நடத்துகிறோம்? கம்மங்கரையெல்லாம் பாடித் திரிந்த அந்த ஆதிக்குடியை நாம் எப்படி இன்றைக்கு அடக்குமுறையால் அகற்றியிருக்கிறோம்! அவன் வாழும் போது இந்த ஏரியும் காடும் குளமும் உலகும், நாய்க்கும் பூனைக்கும் சொந்தமென்பதை உணர்ந்து வாழ்ந்திருக்கிறான் எனும் அறிவின் வரி "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" எனும் வள்ளுவனின் பிரதிபிம்பம் தானே!

இன்றைக்கு நாம் அந்த ஆதிக்குடியையும் பூர்வக்குடியையும் அவன் இடத்தை விட்டு இடம்பெயரச் சொல்லிவிட்டு அவன் பாதுகாத்த இயற்கையைக் குத்திக் கொலை செய்து கொண்டு தானே இருக்கிறோம்! இந்தப் பாடல் முழுதும் அந்த ஆதிக்குடியின் சாயல் தான் எனக்குப் பட்டது இடையிடையே வரும் குலவையும் எஞ்சாயி எஞ்சாமி எனும் சொற்களும் பழங்குடி மக்களின் வழக்காற்றில் இருந்து பெறப்பட்ட சொற்களே அந்த உணர்வை அப்படியே தீயின் குரலும் அறிவின் வரியும் சந்தோஷின் இசையும் நமக்குக் கடத்துகிறது!

"எஞ்சாயி எஞ்சாமி வாங்கோ வாங்கோ ஒன்னாகி!

அம்மாயி அம்பாரி இந்தா இந்தா மும்மாரி!"

என்பது மழை பொழிந்து செழிப்பாய் இருக்கும் போது இயற்கையை வேண்டி பழங்குடிகள் பாடும் மும்மாரி பொழிந்ததற்கான நன்றி தெரிவித்தல்!

"குக்கூ குக்கூ முட்டையப் போடும் கோழிக்கு!

குக்கூ குக்கூ ஒப்பணை யாரு மயிலுக்கு?

குக்கூ குக்கூ பச்சையப் பூசும் பாசிக்கு!

குக்கூ குக்கூ குச்சிய அடுக்குன கூட்டுக்கு!"

இதில் தீ, 'ஒப்பணை யாரு மயிலுக்கு' எனக் கேட்கும் இடத்தில் தேன் குழைத்த பலாவின் இனிமையாய் அடடா இவள் குரல் ஒரு மாயவலை என்பது போல் இருக்கும்!

"பாடுபட்ட மக்கா! வரப்பு மேட்டுக்காரா!

வேர்வத்தண்ணி சொக்கா! மினுக்கும் நாட்டுக்காரா!

ஆத்தாடிக் கருப்பட்டி ஊதாங்கோளு மண்ணுக்கட்டி!

ஆத்தோரம் கூடுகட்டி ஆரம்பிச்ச நாகரிகம்!

சஞ்சனச் சனக்குச் சக்க மக்களே!"

இந்த வரிகள் வேர்வை சிந்தி உழைக்கும் வர்க்கத்தை உயர்த்திப் பேசினாலும், இதில் என்னைக் கவர்ந்தது 'ஆத்தாடிக் கருப்பட்டி' என்ற வரி தான்! தமிழர் பண்பாட்டில் கருப்பட்டி என்பது ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதாகவே இருந்திருக்கிறது! ஒரு ஐயரிடம் கருப்பட்டிக் காப்பியைக் கொடுத்துப் பாருங்கள் அவர் குடிக்க மாட்டார்! ஏனெனில் கீழ்ச்சாதியினராகக் கருதப்படுபவர்கள் தம் கையால் தொட்டுச் செய்யும் பொருள் என்பதால் அதை அவர்கள் விரும்புவதில்லை! இன்னமும் பனங்கிழங்கை அவர்கள் உண்ணாமல் இருப்பதற்குக் காரணம் பூமிக்குக் கீழே விளையும் பொருளைச் சூத்திரனும் பன்றியும் சாப்பிட்டுவிட்டார்கள் என்று தானே. இப்படித் தனக்குத் தெரிந்தோ தெரியாமலோ அறிவு எழுதிய வரியின் ஆழம் அவர் அறிவாரோ இல்லையோ நானறிவேன்.

அடுத்து தான் நமக்கு இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது!

"நான் அஞ்சு மரம் வளத்தேன்!

அழகான தோட்டம் வச்சேன்! தோட்டம் செழிச்சாலும்! என் தொண்டை..."

எனக் கிழவியின் குரல் பாட அதனோடு சேர்ந்து

"கடலே! கரையே! மனமே! குணமே! நிலமே! குளமே! இடமே! தடமே!" என்று தீயின் குரலைக் கேட்கும் போது அவள் பாடும் கடலும், கரையும், மனமும், குணமும், இடமும் எல்லாம் நம் மனக்கண்ணில் காட்சியாய் தடம் பதிக்கும்!

"பாட்டன் பூட்டன் காத்த பூமி!

ஆட்டம் போட்டுக் காட்டும் சாமி!

ராட்டினந்தான் சுத்தி வந்தா, சேவக் கூவுச்சி!

அதுபோட்டு வச்ச எச்சந் தானே காடா மாறுச்சி! நம்ம நாடா மாறிச்சி!

இந்த வீடா மாறிச்சி!" என்ற வரிக்கு விளக்கங்கள் ஏதும் தேவையில்லை தானே!

"என்னக் கொற? என்னக் கொற? எந்தீணிக் கரும்புக்கு என்னக் கொற?

என்னக் கொற? என்னக் கொற? எஞ்செல்லப் பேராண்டிக்கு என்னக் கொற?

பந்தலுல பாவக்கா! பந்தலுல பாவக்கா! வெதக்கல்லு விட்டுருக்கு!

ஒரு வெதக்கல்லு விட்டுருக்கு! அப்பன் ஆத்தா விட்டதுங்க! அப்பன் ஆத்தா விட்டதுங்க!"

என்று மீண்டும் அதே கிழவியின் குரல்! இந்தக் குரல் யாருடையதெனப் பார்க்க வேண்டிப் பாடியவர்களின் விபரம் பார்த்தால் தீயைத் தவிர வேறு பெண் யாருமில்லை! சந்தோஷ் நாராயணன், அறிவு என்று இரண்டுபேர் இருந்ததே சந்தோஷின் குரல் எங்கே என்று பார்த்தால் அந்தக் கிழவியே நான் தான் என்று சந்தோஷ் சிரிப்பது இறுதியாகக் கேட்கிறது!

"ஆ..கடலே! கரையே! மனமே! குணமே! நிலமே! குளமே! இடமே! தடமே!"

என மீண்டும் தீயின் குரலைக் கேட்கும் போது சட்டென இந்த வரி தீக்காக என்னிலிருந்து வந்தது!

"மயிலே! மலரே! குயிலே! குரலே! அழகே! அடியே! தீயே! நீயே!"

குக்கூ குக்கூ... என இறுதியாய் ஒரு முறை தீ எனும் குயில் கூவுவதோடு திகட்டாதத் தித்திப்புக் குரலாள் தான் கூவுவதை நிறுத்துகிறாள்! உன் கூவல் இன்னும் பலகோடி மனங்களைக் கொள்ளை கொள்ளட்டும்! தீ எனும் தீயே உனக்கு பேரன்பின் முத்தங்கள்!

எழுத்து - அருண் (கலைஞர் செய்திகள்)

தற்போது உலகம் முழுக்க மீண்டும் மீண்டும் இந்தப் பாடல்தான் அதிகம் ஒலிக்கிறது....

Recent News